இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் திலகத்தின் இளைய மகன் பிரபு. 1982ம் ஆண்டு சங்கிலி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது வெளிவர இருக்கும் மீன் குழம்பும் மண்பானையும் அவரது 200வது படம். 34 ஆண்டுகளில் 200 படங்களில் நடித்து இப்போதும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார், இளையதிலகம் பிரபு, தமது இனிமையான மலரும் நினைவுகளோடு அளித்த சிறப்பு பேட்டி:
சினிமாவுக்கு வந்தது எப்படி?
அப்பா சினிமாவுக்கு வந்தது எப்படி என்று கேட்டிருந்தால் அதற்கு பெரிய சரித்திரம் இருக்கிறது. எனக்கு என்ன இருக்கு. நான் தடுக்கி விழுந்து சினிமாவுக்கு வந்தவன். சிவாஜி பையன்ங்ற ஒரே தகுதிதான் சினிமாவுக்கு கொண்டு வந்தது. தன் பிள்ளையாக இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் உள்ளவன் தான் நடிக்க வர வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். விருப்பம் இல்லாமல் இருந்த எங்களை அவர் கண்டுகொள்ளவில்லை. அப்பாவை வைத்து நிறைய படங்கள் எடுத்த சி.வி.ராஜேந்திரன் அண்ணன்தான் என்னை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டு சங்கிலி படத்தில் நடிக்க வைத்தார். அரை மனதுடன் தான் அப்பாவும் நடிக்க சம்மதித்தார்.சங்கிலி படத்துக்கு பிறகுதான் அப்பாவுக்கும் என் மீது நம்பிக்கை வந்தது. அதன் பிறகு அப்பாவுடன் மட்டும் 17 படங்கள் வரை நடித்தேன்.
சிவாஜி என்ற பின்னணி இல்லாவிட்டால் சினிமாவில் ஜெயித்திருக்க முடியுமா?
சிவாஜி புள்ளைங்றதாலதான் சினிமாவுல அறிமுகம் கிடைச்சது. அவர் பெயரைச் சொல்லி முதல் 4 வருடங்கள் மளமளன்னு நடிச்சேன். பெயர்கூட அப்போது சிவாஜி பிரபுதான். திடீர்னு நான் நடிச்ச படங்கள் பிளாஃப் ஆச்சு. பெரிய கேப் எடுத்துக்கிட்டேன். இனி சிவாஜி பெயரைச் சொல்லி ஏமாற்ற முடியாது, நமக்குன்னு ஒரு தனிப் பாணி வச்சிக்கிட்டு நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். கதைகள் கேட்டு அதில் நல்ல கதைகளை தேர்வு பண்ணி நடிக்க ஆரம்பிச்சேன். இதோ 200வது படம் வரைக்கும் வந்தாச்சு.
200 படங்கள் நடித்த பிறகும் ஒரு நடிகராக திருப்தியாக இருக்கீங்களா?
நடிகனுக்கு எதுலேயுமே திருப்தி வராது. இன்னும் நிறைய நடிக்கணும், நிறைய கேரக்டர்கள் பண்ணணும்னு ஆசை இருக்கு. இப்பல்லாம் சின்ன சின்ன பசங்க ரொம்ப திறமையோடு வர்றாங்க. அவுங்களோட ஒர்க் பண்றது சந்தோஷமா இருக்கு. இரண்டு ஆசைகள்தான் எனக்கு அப்பா பெயரை கடைசி வரைக்கும் காப்பாத்தணும், கடைசி மூச்சு உள்ளவரைக்கும் நடிக்கணும்.
இப்போது ரீமேக் சீசன் சிவாஜியின் எந்த படத்தை ரீமேக் பண்ணி நடிப்பீங்க?
அப்பாவோடெல்லாம் என்னை கம்பேர் பண்ணாதீங்க. அவர் படத்தை ரீமேக் பண்ணி அவர் பெயரை யாரும் கெடுக்க வேண்டாம். அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. என்னால அவர் நடிச்ச எந்த கேரக்டர்லேயும் நடிக்க முடியும்னு கற்பனைகூட பண்ண முடியாது.
உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
நான் நடிச்சு தோல்வி அடைஞ்ச படங்கள்கூட எனக்கு பிடிக்கும். எல்லா படங்களுமே என்னோட குழந்தை மாதிரிதான். கடைசியா நடிச்ச வெற்றிவேல்கூட பிடிச்ச படம்தான். இப்போ நடிச்சிட்டிருக்கிற மீன்குழம்பும் மண்பானையும் பிடிச்ச படம்தான். இதுல எதை குறிப்பிட்டு சொல்வது.
ஏன் வில்லனாக நடிக்கவில்லை?
எனக்கு வில்லனாக நடிக்க ரொம்ப ஆசைதான். சில படங்கள்ல முயற்சி பண்ணியும் பார்த்தேன். நீங்க போயி அப்படி பண்ணலாமா?ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் நம்ம முகம் வேற அப்பாவி முகமா இருக்கா இயக்குனருங்ககூட நெகட்டிவ் ரோல் தரவே பயப்படுறாங்க. சரி நாமளும் கடைசிவரை நல்லவனாகவே நடிச்சிட்டு போயிடலாமேன்னு முடிவு பண்ணிட்டேன்.
ரஜினியோடு மீண்டும் நடிப்பீர்களா?
திருநெல்வேலி அல்வா சாப்பிட கசக்குமா என்ன? நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கேன். விரைவில் அது நடக்கும்.
உங்கள் வாரிசும் நடிக்க வந்துவிட்டார்களே?
அன்னை இல்லத்திருந்து நடிக்க வர்றதுல ஆச்சர்யப்படுறதுக்கு எதுவும் இல்லையே. என் மகன் நடிக்கிறார். அண்ணன் மகன் தயாரிப்பாளராகியிருக்கார்.
விக்ரம் பிரபுவுடன் எப்போது நடிப்பீர்கள்?
நானா மாட்டேங்றேன். இயக்குனர்கள் நல்ல கதையுடன் வரட்டும். அது பொருத்தமா இருந்தா நடிச்சிட்டு போறேன்.
இப்போதும் அதே பளீர் சிரிப்புடன் பேசுகிறார் பிரபு. 500 படங்கள் நடிக்க வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.