அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். 2014ம் ஆண்டு ஹீரோபன்டி படத்தின் மூலம் அறிமுகமானவர், இரண்டு ஆண்டு இடைவௌிக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் பாகி என்ற படத்தின் மூலம் தோன்ற இருக்கிறார். இப்படம் பற்றியும், தன் திரையுலக வாழ்க்கை பற்றியும் டைகர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
ஏன் இரண்டாண்டு இடைவௌி.?
என்னுடைய முதல்படத்திலேயே என்னை ஒரு நடிகனாக ரசிகர்கள் ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹீரோபன்டி படத்தில் நிறைய ஆக்ஷ்ன் காட்சிகள் பண்ணிவிட்டேன். எனவே என்னுடைய அடுத்தப்படத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நிறைய பட வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் அவசரம் காட்டவில்லை, நல்ல கதைக்காக காத்திருந்தேன். என்னுடைய முதல்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர், அதனால் கண்டிப்பாக ரசிகர்கள் அப்செட் ஆக மாட்டார்கள். என்னுடைய புதிய படத்தில் வித்தியாசமான ஆக்ஷ்ன் காட்சிகள் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்தப்படத்தில் எனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளேன், எனவே தான் இந்த இடைவௌி.
பாகி படத்திற்காக எந்த மாதிரியான ஆக்ஷ்ன் காட்சிகளில் உங்களை தயார்படுத்தினீர்கள்.?
பாகி, ஆக்ஷ்ன் படம் தான். தற்காப்பு கலையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தற்காப்பு கலையின் முன்னோடியே இந்தியா தான். எனவே இந்தப்படத்தில் தற்காப்பு கலைகள் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை சொல்லியிருக்கிறோம், குறிப்பாக இந்தியாவில் உள்ள நிறைய தற்காப்பு கலையை படத்தில் காண்பித்துள்ளோம். இப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக அந்த தற்காப்பு கலைகளை பற்றி தெரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் கேள்விப்படாத கலைகளை எல்லாம் நான் கற்றேன். பயிற்சியின் போது கொஞ்சம் சிரமமாக இருந்தது. நிச்சயம் ரசிகர்கள் இந்தப்படத்தை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு போட்டியாக பல நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களை பார்த்து பயம் வந்துள்ளதா.?
பயம் இல்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும். என்னிடம் இல்லாத திறமைகள் மற்ற நடிகர்களிடம் இருக்கலாம். எனவே யாருக்கும் போட்டி இருக்காது. நான் எந்த நடிகரையும் போட்டியாக நினைத்தது கிடையாது. என்னுடைய ஒரே இலக்கு என் திறமையை வளர்த்து கொண்டே செல்ல வேண்டும் என்பது தான்.
ஸ்ரத்தா கபூர் உங்களுடன் படித்தவர், அவருடன் முதன்முறையாக நடித்த அனுபவம் பற்றி...?
ஆமாம், முதன்முறையாக நான் ஸ்ரத்தா கபூருடன் நடிக்கிறேன். என்னுடைய ஆரம்ப காலத்திலேயே ஒரு பெரிய நடிகையுடன் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம். மேலும் ஸ்ரத்தா, என்னுடன் படித்தவர். சின்ன வயதிலிருந்தே அவரை எனக்கு தெரியும். படிக்கும் காலத்திலேயே எல்லாவிதமான போட்டிகளிலும் கலந்து கொள்வார், முதல்பரிசும் வாங்குவார். பள்ளிகாலத்தில் எல்லோரும் உச்சரித்த ஒரு பெண் ஸ்ரத்தா. ஆரம்பகாலத்தில் நான் மிகவும் வெட்கப்படுவேன். ஆனால் ஸ்ரத்தா போன்று இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.
அடுத்த படம் உங்க அப்பாவுடன் நடிக்கிறீர்களாமே உண்மையா.?
இல்லை, நான் என் அப்பாவுடன் நடிக்கவில்லை. அதேசமயம் அப்படி ஒரு வாய்ப்பை யாராவது ஏற்படுத்தி தந்தால் நிச்சயம் நடிப்பேன். ஒருவேளை நான் என் அப்பாவுடன் நடித்தால் நிச்சயம் திரையில் என்னை யாரும் ரசிக்கமாட்டார்கள், என் அப்பாவை தான் ரசிப்பார்கள், ஏனென்றால் அவர் தான் ரியல் ஹீரோ. என் அப்பா மட்டுமல்ல, சன்னி தியோல், சஞ்சய் தத் போன்ற நடிகர்கள் எல்லாம் அன்றைய பாலிவுட்டின் ரியல் ஹீரோக்களாக வலம் வந்தார்கள். அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு உடல்வாகும், நல்ல பெர்சனாலிட்டியும் இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த மாதிரி ஒரு உடல் அமைப்பு எந்த நடிகர்களிடமும் அவ்வளவாக இல்லை.
சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஷெரப்பின் மகன் நீங்கள், ஒரு ஸ்டாரின் மகன் என உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருக்கா.?
ஆமாம், ஸ்டார் நடிகரின் வாரிசு என்று எல்லோரும் பார்க்கிறார்கள். நான் சரியாக நடித்தேன் என்றால் நிச்சயம் நான் வெற்றி நடிகனாக வருவேன், அப்போது ஸ்டார் நடிகரின் வாரிசு என கொண்டாடுவார்கள். அதேசமயம் என் படங்கள் தோல்வியடைந்தால் அது என்னை மட்டுமல்ல என் அப்பாவையும் பாதிக்கும். எனவே நான் கவனமாக இருந்து நடிக்கிறேன். மேலும் நான் ஒருபோதும் காசுக்காக படம் பண்ணவில்லை, எனக்காக நடிக்கிறேன், என் அப்பாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று நடிக்கிறேன்.
உங்கள் வேலையில் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கிறதா.?
இல்லை, என்னுடைய முதல்படத்தின் போது என் வேலையில் எனக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்கவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு பிடிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலிவுட்டில் ஒரு நடிகனாக இன்னும் நான் வளர வேண்டும், அதற்கு நிறைய உழைக்க வேண்டும். என் அப்பாவை போன்று நானும் சில திறமைகளையும், சில பண்புகளையும் பெற வேண்டும். என் அப்பா எந்த விஷயத்தையும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார், டென்ஷன் ஆக மாட்டார், ஆனால் நான் சின்ன விஷயத்திற்கு கூட டென்ஷன் ஆவேன்.
இவ்வாறு டைகர் ஷெரப் கூறினார்.