தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவையும் காதலையும் எந்த காலத்திலும் பிரிக்கவே முடியாது. காதல் இல்லாத சினிமாவும் இல்லை. சினிமா சொல்லித்தராத காதலும் இல்லை. அந்த அளவுக்கு இரண்டும் உயிரும், உடலுமாக ஒட்டிக் கிடக்கிறது. காதலர் தினத்தையட்டி தமிழ் சினிமாவில் காலத்தை கடந்து நிற்கும் சில காவிய படங்களை நினைவு படுத்திக் கொள்வோம்.
தேவதாஸ்
தமிழ் சினிமாவின் முதல் காதல் காவியம். உயிருக்கு உயிரான காதலை மறக்க மதுவில் மிதந்த மனிதனின் வரலாறு. 1953ம் ஆண்டே தமிழ் ரசிகனை உருகி உருகி காதல் பேச வைத்த படம். நாகேஸ்வரராவ் தேவதாசாகவும், சாவித்ரி பார்வதியாகவும் வாழ்ந்த படம்.
ஒரு தலை ராகம்
சமான்யாக கலைஞர்களின் அசாதாரணமான காதல் படைப்பு. காதலை சொன்னால்கூட காதலியின் மனம் நோகுமே என கடைசி வரை காதலை சொல்லாமலேயே உலகை பிரிந்தவனின் கதை. டி.ராஜேந்தர் என் மகத்தான கலைனை தந்த படம். சங்கரும், ரூபாவும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் படம்.
மூன்றாம் பிறை
காதலியை குழந்தையாக பார்த்த அற்புதமான காதல். குழந்தை பெண்ணானதும் காதலை மறந்து பறந்த காதல். ஒரு சாதாரண ஆசிரியனின் அசாதாரண காதல். கமலுக்கு அரசின் தேசிய விருதையும், ஸ்ரீதேவிக்கு மக்களின் விருதையும் பெற்றுத் தந்த படம். பாலுமகேந்திராவின் ஆகச்சிறந்த படைப்பு
நெஞ்சில் ஓர் ஆலயம்
புராண படங்களும், சரித்திர படங்களும் காதலை பேசிக் கொண்டிந்தபோது மக்களின் காதலை பேசிய ஸ்ரீதரின் படைப்பு. காலம் காதலை பிரிக்க கணவனின் நோய் காதலின் மருத்துவனையிலேயே கொண்டு வந்த சேர்க்க காதலுக்கும், கணவனுக்கும் இடையே தவிக்கும் ஒரு பெண்ணின் காதல் போராட்ட கதை.
அலைகள் ஓய்வதில்லை
பள்ளி பருவத்து காதல்தான். பருவக் கவர்ச்சிதான். ஆனாலும் அந்த இளம் காதல் மத அடையாளங்களை தூக்கி எறிந்ததன் மூலம் மகத்தான காதலாக மாறி உயர்ந்த காதல். கார்த்திக், ராதாவின் இளமையும், இளையராஜாவின் இசைக் கோலமும், பாரதிராஜானின் நெறியாழ்கையும் காலம் கடந்து நிற்கிறது.
காதல்
ஜாதி தின்று துப்பிய காதலை ஒரு மனிதன் தேற்றிய கதை. ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும், அடிமை ஜாதி பையனுக்குமான காதல் 21ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த அவலத்தை சொன்ன படம். ரெயில் தண்டவாளத்தில், கிணற்றில், தென்னந்தோப்பில் இப்போதும் ஜாதியால் வெட்டி வீசப்படும் காதல்களின் பதிவு. பாலாஜி சக்திவேலின் பெயர் சொன்ன படம்.
காதல் கோட்டை
கண்டவுடன் காதல், அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற காதலின் இலக்கணத்தை உடைத்து சுக்கு நூறாக்கிய படம். பார்க்காமலேயே காதலித்து காதல் வளர்த்த படம். தோற்றம் முக்கியமல்ல மனமே காதலுக்கு முக்கியம் என கற்றுத் தந்த படம். இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருதையும், ரசிகனுக்கு புதிய காதல் அனுபவத்தையும் தந்த படம். அஜீத், தேவயானி கேரியரில் இப்போதும் முதல் இடத்தில் நிற்கும் படம்.
முதல் மரியாதை
காதலுக்கு வயது முக்கியமில்லை என்பதை உணர்த்திய படம். காதல் என்ற ஈரம் படியாமலேயே 60வதை கடந்த ஒரு மனிதனின் நெஞ்சில் ஒரு நாடோடி பெண் காதலை பூக்க வைத்த கதை. காமத்தை தாண்டிய அன்பே காதல் என்பதை உணர வைத்த படம். காதலுக்கு பல வசந்த மாளிகைகள் கட்டிய நடிகர் திலகம் சிவாஜியின் ஆகச் சிறந்த காதல் படம்.
மவுனராகம்
கல்லூரி காலத்தில் குதூகலமாக மனதில் நுழைந்த காதலை மறக்க முடியாமல் புதிதாய் மணந்த கணவனிடம் கல்யாண பரிசாக விவாகரத்து கேட்கும் மனைவிக்குள் காதலை விதைக்கும் ஒரு அன்பான கணவனின் கதை. அலைபாயுதே, ஓகே கண்மணி, ரோஜா, பம்பாய் என பல காதல் படங்களை தந்தாலும் மணிரத்தினத்தின் கீரீடத்தை இப்போதும் அலஙங்கரிக்கிற படம்.
வசந்த மாளிகை
பணச்செருக்கால் சீரிழிந்த ஒரு சீமானை ஒரு சாதாரண ஆசிரியையின் காதல் சீரமைத்த கதை. காதலன் உதிர்த்த ஒற்றை சொல்லால் காதலை தூக்கி எறிய துணிந்த துணிச்சலான காதல். காதலுக்கு வசந்த மாளிகை பெரிதல் விசாலமனதே பெரிது என்று உணர்த்திய படம்.
வாழ்வே மாயம்
உயரை காவு கேட்கும் நோய் வந்தவுடன் அந்த உயிரை விட மேலான காதலை புனிதப்படுத்திய கதை. தன் சாவுக்கு முன் காதலியின் வாழ்க்கையை பார்க்க விரும்பிய ஒருவனின் கதை.
இவைகள் மட்டுமல்ல இன்னும் ஏராளமான காதல் படங்களை தமிழ் சினிமா வாரி வழங்கியிருக்கிறது. அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.