பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பார்த்திபன் கனவு, காக்கா காக்க, எந்திரன், காஞ்சனா, சகுனி, வீரம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தெனாலிராமன் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் தேவதர்ஷினி. படத்துக்குப்படம் காமெடி வேடங்களில் ஸ்கோர் பண்ணி வரும் அவர், காமெடியில் கமல்ஹாசன்தான் எனது இன்ஸ்பிரேஷன் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...
காமெடி வேடங்களிலேயே அதிகமாக நடிப்பது ஏன்?
ஆரம்பத்தில் நான் டிவி சீரியல்கள், நிகழ்ச்சி தொகுப்பாளினி என்றுதான் பல வருடங்களாக பயணித்து வந்தேன். பார்த்திபன் கனவு படத்தில் அமுதா என்கிற வேடத்தில் காமெடி ரோலில் நடித்தேன். அந்த வேடத்தில் நடித்ததற்காக எனக்கு தமிழக அரசின் சிறந்த காமெடி நடிகைக்கான விருது கிடைத்தது. அது பெரிய எனர்ஜியை கொடுத்தது. அதோடு எனக்கு காமெடி வேடங்களே அதிகமாக வந்தன. என்றாலும் சில படங்களில் சீரியஸ் வேடங்களிலும் நடித்திருக்கிறேன்.
கோவைசரளாவுடன் நீங்கள் நடிக்கிற படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகிறதே?
கோவை சரளாவைப் பொறுத்தவரை எந்த மாதிரி வேடம் என்றாலும் பின்னி எடுத்து விடுவார். நல்ல ப்ளான் பண்ணி நடிப்பார். அதோடு அவருடன் நடிக்கும் என் போன்றோர்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பார். அவருக்கே அதிகமான டயலாக் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார். உடன் நடிப்பவர்களும் தன்னைப்போலவே டயலாக் பேசி நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். அவரைப்பொறுத்தவரை தான் நடிக்கிற காட்சிகளில் உடன் நடிப்பவர்களும் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் கோவை சரளா நடிக்கும் காட்சிகள் பெரிதாக பேசப்படுகிறது. அந்த வகையில் காஞ்சனா படத்திளெல்லாம் எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
மனோரமா விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப உங்களைப் போன்றோர் முயற்சிக்கிறீர்களா?
மனோரமா ஆச்சியெல்லாம் மிகப்பெரிய சாதனை நடிகை. அவர் நடிக்காத வேடங்களே இல்லை. காமெடி, செண்டிமென்ட், வில்லி என எந்தமாதிரியான வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அவர் இடத்தை பிடிப்பதெல்லாம் சாதாரண விசயமல்ல. அது யாராலும் முடியாது. வேண்டுமானால் அவரைப்போன்று நடிக்க முயற்சி செய்யலாம். ஆனால் அவர் அவர்தான். அதோடு, ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்குமே ஒரு இடம் இருக்கிறது. அதை மற்றவர்களால் நிரப்ப முடியாது.
அதேபோல் கோவை சரளா, கல்பனா, சரண்யா போன்றவர்கள் அற்புதமான கலைஞர்கள். இவர்களில் கல்பனா மேடம் சமீபத்தில் இறந்து விட்டார். அது என் மனதை ரொம்பவே பாதித்தது. மேலும், சரண்யா நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும் என்றாலும், எம்டன் மகன் படத்தை வெகுவாக ரசித்திருக்கிறேன். அதேபோல் கமல் சாரின் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கமல் நடித்ததில் உங்களை அதிகம் கவர்ந்த படம் எது?
மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் அவர் நான்கு வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் ஒரு வேடத்திற்கும் இன்னொரு வேடத்திற்கும் எந்தவித சாயலும் தெரியாத அளவுக்கு நடித்திருப்பார். குறிப்பாக, பாடிலாங்குவேஜில்கூட ஒன்றுக்கொன்று டச் இல்லாத வகையில் நடித்திருப்பார். அப்படி நடிப்பதெல்லாம் சாதாரண விசயமல்ல. அந்தபடத்தை இப்போது பார்த்தாலும் நான் விழுந்து விழுந்து சிரிப்பேன். கமல் சார் போன்றவர்களைப் பார்த்துதான் நான் நடிக்கக் கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் எனது இன்ஸ்பிரேஷன் என்றுகூட சொல்லலாம்.
லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவாவில் நடிக்கிறீர்களா?
லாரன்சின் காஞ்சனா படத்தில் கோவை சரளா காம்பினேஷனில் நடித்தது போல் அவரது ஒவ்வொரு படங்களிலுமே நான் இடம்பெற்று வருகிறேன். இந்த படத்தைப் பொறுத்தவரை நாயகியாக நடிக்கும் நிக்கி கல்ராணியின் அக்கா வேடத்தில் பேராசை பிடித்த பெண்ணாக நடிக்கிறேன். இந்த படத்திலும் கோவை சரளாவுடன் நடித்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. அதோடு அவருடன் நடிக்கும் படங்களெல்லாம் எனக்கு திருப்தியாக உள்ளன. அதனால் தொடர்ந்து அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். தவிர, தம்பி ராமைய்யாவுடன் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறேன். ஒரு தெலுங்கு படமும், மேலும் சில சிறிய படங்களிலும் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.
காமெடி காட்சிகள் ஒர்க்அவுட்டாக என்னென்ன அம்சங்கள் வேண்டும்?
முதலில் ஸ்கிரிப்ட். அந்த கதையில் சரியான இடத்தில் காமெடி சீன். அதோடு, அந்த சீனில் சிரிக்க வைப்பதற்குரிய அனைத்து விசயங்களும் இருக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பவர்கள் அதை உள்வாங்கி நடிக்க முடியும். மேலும், சில டைரக்டர்கள் நடிப்பவர்களுக்கு முழு சுதந்திரமும் கொடுக்கிறார்கள். அதனால், எங்களைப் போன்றோர் அந்த காட்சிக்கு தேவையான விச யங்களை மேற்கொண்டும் சேர்த்து நடிக்க முயற்சிக்கிறோம்.
சீரியஸ் வேடங்கள் கிடைத்தால் நடிப்பீர்களா?
ஆரம்பத்தில் சில படங்களில் சீரியசாகவும் நான் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்ததில் காமெடி வேடங்களே பேசப்பட்டதால் இப்போது சீரியஸ் வேடங்களில் நடிக்க யாரும் என்னை தொடர்புகொள்வதில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை காமெடிக்கே முதலிடம் கொடுத்தாலும் இடையிடையே குணசித்ர வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அதனால் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் நான் எதிர்பார்க்கிறேன் என்கிறார் தேவதர்ஷினி.