'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை: சென்னை, ராமாபுரத்தில்,சினிமா நடிகையின் தலையை துண்டித்து, சடலத்தை குப்பை தொட்டி அருகே வீசிய வழக்கில், வில்லன் நடிகர் மற்றும் துணை நடிகை கைது செய்யப்பட்டனர்.
மடிப்பாக்கம் அய்யப்பா நகரை சேர்ந்தவர் சசிரேகா,32; சினிமா நடிகை. அவர், ஜன.,5ல், மவுண்ட் - பூந்தமல்லி சாலையில், ராமாபுரத்தில், குப்பை தொட்டி அருகே, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக வீசப்பட்டு கிடந்தார். இதுகுறித்து, ராயலா நகர் போலீசார் விசாரித்து வந்தனர். தென் சென்னை இணை கமிஷனர் அருண், தி.நகர் துணை கமிஷனர் சரணவன் தலைமையிலான போலீசார், சசிரேகாவை கொன்று வீசிய, சினிமா வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர்,35, துணை நடிகை லக்கியா,32, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
போலீசாரிடம் ரமேஷ் சங்கர் அளித்துள்ள வாக்குமூலம்:
என் சொந்த ஊர் அனகாபுத்தூர். சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என, முயற்சி செய்து வந்தேன்; 2013ல், சத்யா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் துவங்கினேன். அப்போது, கேரளாவை சேர்ந்த துணை நடிகை லக்கியா, கதாநாயகியாக வாய்ப்பு கேட்டு அனுகினாள். அவளை வைத்து குறும்படம் தயாரித்து, இயக்கினேன். பின், செந்தில் ராஜா இயக்கத்தில், நாளை முதல் குடிக்க மாட்டேன் என்ற படத்தில் நான் வில்லனாகவும், சசிரேகா என்ற பெண் கதாநாயகியாகவும் நடித்து வந்தோம். அப்போது இருவரும் காதலித்து, 2015., செப்.,27ல் திருமணம் செய்து கொண்டோம்.
லக்கியாவை சென்னையில் தங்க வைத்து என் பாதுகாப்பில் வைத்துக்கொண்டேன். இது, சசிரேகாவுக்கு பிடிக்கவில்லை. பெண்களிடம் நான் பேசவே கூடாது என, உத்தரவு போட்டாள். மேலும், குறும்படம் எடுக்க, அவளது தந்தையிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கி இருந்தேன். அதையும் கேட்டு நச்சரித்தாள். இதனால் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போது, மகனை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து நான் கடத்தியதாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சசிரேகா, என் மீது பல முறை புகார் அளித்தார். போலீசார் என்னை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நானும் லக்கியாவும் போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தோம். அங்கு வந்து சசிரேகா தங்கினாள். ஒரே வீட்டில் மூன்று பேரும் வசித்தோம். லக்கியா ஒரு அறையில் தங்கி கொண்டாள். ஜன.,4ம் தேதி, சசிரேகாவின் தந்தை வீட்டுக்கு வந்து இருந்தார். அவருக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு சசிரேகா தகராறு செய்தார். மாலையில் நாங்கள் மட்டும் தனியாக இருந்தோம். லக்கியாவை வீட்டை விட்டு வெளியேற்று என்றாள். நான் மறுத்தேன். மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, உருட்டுக்கட்டையால் அவளை தாக்கினேன். கீழே சரிந்து விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த லக்கிய, மூக்கில் கைவைத்து பார்த்துவிட்டு இறந்துவிட்டதாக கூறினாள். உடலை அப்புறப்படுத்த, பிளாஸ்டிக் பையில் கத்தி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தோம். இரவு 12:24 மணிக்கு, கழிப்பறையில், சசிரேகாவின் தலையை துண்டித்து பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டோம்.
உடலை போர்வையால் மூடி, படுக்கை மெத்தையில் கிடத்தி மூட்டையாக கட்டினோம். அதிகாலை 3:30 மணிக்கு, என் காரில் ஏற்றிக்கொண்டு, வீடு அருகே உள்ள மணப்பாக்கம் கால்வாயில் தலையை வீசினோம். பின், மவுண்ட் - பூந்தமல்லி சாலையில், ராமாபுரத்தில் குப்பை தொட்டி அருகே, சிறுநீர் கழிப்பதுபோல் இறங்கி, உடலை வீசிவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று விட்டோம். அந்த வீட்டை காலி செய்துவிட்டு, செம்மஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறினோம். நான் நடித்த, நாளை முதல் குடிக்க மாட்டேன் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டுள்ளது. நடிகனாக ஜொலிக்க வேண்டியவன் கொலைகாரனாக நிற்கிறேன்.
இவ்வாறு ரமேஷ் சங்கர் கூறி உள்ளான்.
சிக்கியது எப்படி
தென் சென்னையில் நிலுவையில் உள்ள கொலை வழக்கு குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, ராமாபுரம் கொலை வழக்கு குறித்து அலசப்பட்டது. அப்போது, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், அடிக்கடி கணவன் மீது புகார் கொடுக்கும் நடிகை சசிரேகா மாயமாகி இருந்தது தெரியவந்தது. அவரது கணவனின் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்து இருக்க, போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சசிரேகாவின் புகைப்படத்துடன், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த உடலில் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தபோது, இரண்டும் ஒரே மாதிரி இருந்தன.
இதனால், குற்றவாளி சசிரேகாவின் கணவன் தான் என, போலீசார் முடிவுக்கு வந்தனர். ஆனால், ரமேஷ் சங்கர், மனைவியை கொன்ற பின், புது சிம்கார்டு போட்டு பழைய அலைபேசியிலேயே பயன்படுத்தி வந்தார். அதன் ஐ.எம்.இ.ஐ., எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அலைபேசியில் இருந்து, மடிப்பாக்கத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் ரமேஷ் சங்கர் ஆர்டர் செய்துள்ளார். போலீசார் டெலிவரி பாயிடம் விசாரித்தபோது, ரமேஷ் சங்கர், லக்கியா தங்கி இருந்த வீட்டை காட்டி உள்ளார். போலீசார் சாதாரண உடையில் பதுங்கி இருந்து, இருவரையும் நேற்று கைது செய்தனர். சசிரேகாவின் தலை வீசப்பட்ட மணப்பாக்கம் கால்வாயில் போலீசார் தேடி வருகின்றனர்.