ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தமிழகத்தில் பெய்த கனமழையால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் முகாம்ங்களில் தங்கியுள்ளனர். இந்தசூழலில் இருதினங்களுக்கு முன்னர் கமல் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசு செயல் இழந்துவிட்டது, நாங்கள் கட்டிய வரிப்பணமெல்லாம் எங்கே.? என்பது போன்று பேட்டி கொடுத்தார். கமலின் இந்த பேட்டிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பன்னீர் செல்வம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இதற்கு பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் நான் அப்படி சொல்லவேயில்லை, எனது கருத்து தவறாக கூறப்பட்டுள்ளது, தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் என்று கூறியுள்ளார்.
கமல் வெளியிட்டுள்ள முழு அறிக்கை இதோ...
தமிழகத்திற்கு நேர்ந்த அவதி தான் அந்த புலம்பல்
நான் கட்டியவரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்றுநாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகபேட்டி அல்ல. மின்அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே.
தமிழக அரசை குறை சொல்லவில்லை
கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
என் வீட்டிறக்கு சில நாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டுவிட்டு வரும் தொலைப்பேசித்தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப்பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல் வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்.
விஸ்வரூபம் எடுத்த பிரச்னை
என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்தவாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு,அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பன்னீர் செல்வத்திற்கான விளக்கம் அல்ல
இது திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின்அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பலவேறுகட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
மன்னிப்பு கேட்கிறேன்
பக்தரும் பகுத்தறிவாளரும் பலமதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்தநேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கிவேலை செய்யும்யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கோபதாபங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம்
வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்கவேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை
தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவனம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நறப்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்.
இவ்வாறு கமல் தான் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.