அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் இன்று அனைத்துத் துறைகளிலும் போட்டி அதிகமாகிவிட்டது. நடிப்பிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை எண்ணற்ற இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்ற துறைகளிலாவது பயிற்சி எடுத்துக் கொண்டு அதன் பின் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னணிக்கு வரலாம்.
ஆனால், இசைத் துறையில் அப்படியெல்லாம் வந்துவிட முடியாது. பிறப்பிலேயே இசை ஞானம் இருந்தால்தான் அதில் மேலும் மேலும் வளர முடியும். இயக்குனர்களுக்கு எப்படி அவர்களின் கற்பனைத் திறன் முக்கியமாக இருக்கிறதோ, அப்படித்தான் இசையமைப்பாளர்களுக்கும் கற்பனைத் திறன் அதிகம் வேண்டும். மனதில் எழும் கற்பனையை இசை வடிவமாகக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதில் ரசிகர்களின் ரசனைக்குப் பொருத்தமாக தங்களது இசை வடிவத்தை வெளிப்படுத்துபவர்களே முன்னணி இசையமைப்பாளர்களாக ஆகிறார்கள்.
சமீப காலத்தில் இப்படி பல இளம் இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமாகி வருகிறார்கள். இன்னும் பத்து படங்களைக் கூடத் தாண்டாத பல இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரையுலகில் கடந்த சில வருடங்களில் நிறையவே வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் நம்பிக்கை தரும் இசையமைப்பாளர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள். இன்னும் சில வருடங்களில் அந்த இளைஞர்களின் கையில்தான் தமிழ்த் திரையுலகத்தின் இசையுலகம் சென்று விடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அப்படி நம்பிக்கை விதையை விதைத்துள்ள சில இசையமைப்பாளர்களைப் பற்றிப் பார்ப்போம்.
அனிருத்
'3' படத்தில் இடம் பெற்ற 'கொல வெறி...' பாடல் மூலம் ஒரே படத்தில் ஓகோவென புகழ் பெற்றவர். அந்த ஒரு பாடலுடன் நிறுத்திக் கொள்ளாமல் நேற்று வரை அவர் இசையமைத்து வெளிவந்த 'நானும் ரௌடிதான்' படம் வரை தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். மெலடி பாடலோ குத்துப் பாடலோ எதுவாக இருந்தாலும் அதில் அனிருத்தின் தனித் திறமை வெளிப்படுகிறது என்று இன்றைய இளம் ரசிகர்கள் அனிருத்தைப் பாராட்டி வருகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகத்தில் இவருடைய இடம் ஒரு நிரந்தர இடமாக இருக்கும் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன்
'அட்டகத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். மூன்றே வருடங்களில் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து தன்னுடைய தனித் திறமையை நிரூபித்தவர். அதற்குள் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்திற்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். வித்தியாசமான பாடல்களுடன் அசர வைக்கும் பின்னணி இசையுடனும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இவருடைய இசையில் அடுத்து வெளிவர உள்ள படங்கள் இவரது திறமையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 'கபாலி' படத்திற்குப் பின் இவருடைய உயரம் இன்னும் அதிகமாகலாம்.
ஜிப்ரான்
'வாகை சூடவா' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 'சரசர சார காத்து...' என்ற அருமையான மெலடி பாடல் இவரை ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் கமல்ஹாசனிடமும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதன் பிறகு கமல்ஹாசன் மட்டுமே இவரை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரோ என அவருடைய மூன்று படங்களுக்கு இசையமைத்துவிட்டார். ஏற்கெனவே வெளிவந்த 'உத்தம வில்லன், பாபநாசம்', விரைவில் வெளிவர உள்ள 'தூங்காவனம்' படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர். தற்போது மேலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறுகிய காலத்தில் கமல்ஹாசன் மனதில் இடம் பிடித்தவர் இனிவரும் காலங்களில் ரசிகர்களிடமும் அதிகம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
ஹிப்ஹாப் தமிழா
'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா. அடுத்து 'இன்று நேற்று நாளை, தனி ஒருவன்' படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'தனி ஒருவன்' படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஹிப்ஹாப், ராப் என இசையின் வேறு வடிவங்களை தமிழ் சினிமாவில் அதிகமாக ஒலிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் இந்த இசை இவர் மூலம் தமிழ்த்திரை இசையுலகத்திலும் இன்னும் அதிகம் பரவும் என எதிர்பார்க்கலாம்.
ஷான் ரோல்டன்
'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தொடர்ந்து 'சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ஆடாம ஜெயிச்சோமடா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். 'முண்டாசுப்பட்டி'யில் இவரது இசையில் வெளிவந்த 'காதல் கனவே...' பாடல் சூப்பர் ஹிட்டாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'சதுரங்க வேட்டை' படம் சூப்பர் ஹிட்டானாலும் அந்தப் படத்தின் பாடல்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது '144' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இரண்டு தோல்வி, இரண்டு வெற்றிப் படங்கள் என தனது கணக்கை ஆரம்பித்துள்ள ஷான் ரோல்டன் தொடர்ந்து கிடைக்கும் வெற்றியால் மற்றவர்களுடனும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
அரோல் கொரேலி
மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். சமீபத்தில்தான் இவரது இரண்டாவது படமான 'பசங்க 2' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. முதல் படத்திலேயே யார் இவர் யோசிக்க வைத்த திறமைசாலிகளுள் அரோல் கொரேலியும் ஒருவர். 'பிசாசு' படத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு பாடலிலும், அந்தப் படத்தின் பின்னணி இசையிலும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். 'பசங்க 2' படம் இவரது பாதையை இன்னும் அதிகமாக்கும் என்று எதிர்பார்க்கலாம். பத்துப் படங்கள் இசையமைத்து முடிப்பதற்குள் இவரது ஆளுமை தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கும் என்று நம்பிக்கையைக் கொடுத்திருப்பவர்.
ஜஸ்டின் பிரபாகரன்
கடந்த ஆண்டு வெளிவந்த 'பண்ணையாரும் பத்மினியும்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். முதல் படத்திலேயே இனிமையான மெலடி பாடல்கள் மூலம் முத்திரை பதித்தவர். சமீபத்தில் வெளிவந்த 'ஆரஞ்சு மிட்டாய்' படமும் இவரைப் பற்றிப் பேச வைத்தது. சில நாட்களுக்கு முன்தான் இவர் இசையமைத்துள்ள 'ஒரு நாள் கூத்து' படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. தற்போது மேலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஜஸ்டின் பிரபாகரன் அடுத்து ஒரு பெரிய வெற்றியை மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தின் வெற்றி இவரை அடுத்த தளத்திற்கு கண்டிப்பாக எடுத்துச் சென்றுவிடும்.
நிவாஸ் கே பிரசன்னா
கடந்த ஆண்டு வெளிவந்த 'தெகிடி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் நிவாஸ் கே பிரசன்னா. அந்தப் படத்தில் இடம் பெற்ற 'விண்மீன் விதையில்...' பாடல் ஒன்று போதும் இவரது இசை திறமை பற்றிப் பேச. அந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல், கவனிக்கப்படாமலே இருந்தார். விஜய் சேதுபதி நடித்து வரும் 'சேதுபதி' படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர். இனி வரும் படங்களைப் பொறுத்து இவர் இன்னும் அதிகமாகப் பேசப்படலாம்.
லியோன் ஜேம்ஸ்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் மேனேஜராக உள்ள நோயல் ஜேம்ஸின் மகன்தான் லியோன் ஜேம்ஸ். இந்த ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'காஞ்சனா 2' படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'சண்டி முனி...., வாயா வீரா...' ஆகிய பாடல்களுக்கு இசையமைத்தார். ஆன்ட்ரியா பாடி இவர் இசையமைத்துள்ள 'எழுந்து வா...' என்ற ஆல்பமும் இவரைப் பற்றிப் பேச வைத்துள்ளது. விரைவில் வெளிவர உள்ள 'கோ 2' படம்தான் இவர் முழுமையாக இசையமைக்கும் படம். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தப் படம் வெளிவந்த பிறகு இன்றைய வளரும் இசையமைப்பாளர்களின் போட்டியில் இவரும் இடம் பெற்றுவிடுவார்.
சினிமாவில் மற்ற துறைகளைப் போல இசைத் துறையிலும் எண்ணற்ற புதியவர்களின் அறிமுகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தங்களது தனித் திறமையால் பலரும் தங்களைப் பற்றி நிரூபிக்கும் முயற்யைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஒரே ஒரு பாடல், அதுவும் காலத்தால் அழிக்க முடியாத சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை அவர்கள் கொடுத்துவிட்டாலே போதும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என்பதையும் சிலர் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியான வெற்றிக்கு அந்த ஒரு பாடலும் போதாது என்பதை ரசிகர்களும் நிரூபித்து விடுகிறார்கள்.
எம்எஸ்வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை தமிழ் ரசிகர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்கள் அனைவருமே காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களைத் தந்ததுதான் காரணம். படங்களைக் கூட ரசிகர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால், பாடல்களை என்றுமே மறக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
அப்படிப்பட்ட மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து வளரும் இந்த இளைஞர்களும் தமிழ்த் திரை இசையுலகில் நீண்ட நாள் ஆட்சி புரியட்டும்.