ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சங்கத்தில் இனி ஒற்றுமை இருக்காது, என, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆவேசமாக பேசினார்.
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு, சரத்குமார் அணி ஆதரவாளர்கள் கூட்டம், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.
கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது:நடிகர் சங்கத்தில் இனி, ஒற்றுமை இருக்காது. நடக்கும் காட்சிகள், பேசும் அவதுாறுகள் அனைத்தும் அதையே காட்டுகின்றன. என்னை, இந்தச் சங்கத்திற்கு அழைத்து வந்தது ராதாரவியே. அவர், தலைவர் பதவியை விட்டு விட்டு, கமிட்டி உறுப்பினரானார். நடிகர் சங்கம், 4.25 கோடி ரூபாய் கடனில் இருந்த போது, இப்போது பேசுபவர்கள் எங்கே சென்றனர்?வங்கி அதிகாரிகளிடம் பேசி, கடன் தொகையில், 3.25 கோடி ரூபாயை குறைத்தது நான் தான். நடிகர்கள், கிரிக்கெட் விளையாட்டை சும்மா விளையாடவில்லை; லட்சக்கணக்கில் பணம் தந்திருக்கிறேன். நான் போட்டஒப்பந்தத்தால், சென்னை நடிகர் சங்க கிரிக்கெட் அணிக்கு, 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சம் ரூபாய் வருமானம் வரும்.நடிகர்கள் முரளி, எஸ்.எஸ்.ஆர்., மறைந்த போது, விஷால் அணியினர் எங்கு இருந்தனர். இயக்குனர் கே.பாலசந்தர் இறந்த போது, கமல் எங்கே போனார். விஸ்வரூபம் படப் பிரச்னையின் போது, அமெரிக்கா சென்ற அவர் அங்கிருந்தபடி, தமிழகத்தில், இனி இருக்க முடியாது என, பேட்டியளித்தார்.
வீரனாக இருந்தால், நின்று பார்க்க வேண்டும்; ஓடக்கூடாது. நடிகர்களை இயக்குவது இயக்குனர்களே. கமலுக்கு வாய்த்த இயக்குனர்கள் போல், மற்றவர்களுக்கும் வாய்த்தால், அனைவரும் நடிப்பார்கள். ராதாரவியை, வெட்டியான் என, தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். இதுகுறித்து அவர் வழக்கு தொடுத்தால், பேசியவர்கள் ஜாமினில் வர முடியாது.என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. சிவகுமார் மீது நான் மிகுந்தமதிப்பு வைத்துள்ளேன். அவர், என் மனைவியிடம், சொத்தை எல்லாம் உன் கணவர் விற்று விட்டாரா எனக் கேட்டுள்ளார். அநாகரிகமான இந்த கேள்வியை, அவர் எப்படி கேட்கலாம்; கேட்டதை, வாபஸ் பெற வேண்டும்.நான் தவறு செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களை காட்டுங்கள்; ஏற்கிறேன். ஒரு பொய்யை பல தடவை கூறினால், உண்மையாகாது. அரசியலால், நடிகர் சங்கத்திலிருந்து, சற்று ஒதுக்கி இருக்கிறேன்.
விஷாலுக்கு அரசியல் மேல் ஆசை வந்துள்ளது. அவருக்கு என் மீது தனிப்பட்ட விரோதம் உருவாகி உள்ளது. சினி செலிபரட்டி லீக் - சி.சி.எல்., மட்டுமல்லாது, வேறு, ஒரு காரணமும் உள்ளது.இந்த தேர்தலால், நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறி உள்ளனர். இதனால், என் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடச் செல்லும் போது மனசாட்சியோடு செல்லுங்கள். சங்கத்திற்காக நானும், ராதாரவியும் பல ஆண்டுகள் உழைத்துள்ளோம்; இனி, முன் போல் உழைக்க மனமில்லை.போதும் எனக்கு ஏற்பட்ட அவமானம். இந்த சங்கம் நன்றாக இருக்க வேண்டும். நான் இறந்தால் என் இறுதி ஊர்வலம், நடிகர் சங்கத்தில் இருந்து தான் செல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.
650 ஓட்டுகள் வந்தாச்சு!
சரத்குமார் அணி சார்பில் முக்கிய பிரமுகர்கள் பேசியதாவது:
நடிகர் சிம்பு: மனதில் பட்டதை, நான் உரிமையோடு பேசி விடுவேன். ஏன் என்றால், நான் பிறந்த மண் அப்படி; டி.ஆரின் மகன் நான். இந்த அணியில் உண்மை உள்ளது.
நடிகை ராதிகா: நான் விஷாலை, அவரது தந்தை பெயருடன் தான் குறிப்பிட்டு அழைத்தேன். ஆனால், அதை அவர்கள் திரித்து பேசுகின்றனர். என் கணவர், இரண்டு மாதமாக மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கு கூட இப்படி கஷ்டப்பட்டதில்லை. இப்போது வரை, 650 தபால் ஓட்டுகள் வந்துள்ளன; அவை அனைத்தும் சரத்குமார் அணிக்கு தான்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
- நமது நிருபர் -