சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
இசைக்கு வரிகள் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டிருந்த கவிஞர் வைரமுத்து, சிறுகதைகள் பக்கம் தற்போது சிலாகித்துக் கொண்டிருக்கிறார். தனது சிறுகதைகள் குறித்து மனம் திறந்த கவிப்பேரரசின் சிறப்பு பேட்டி இதோ...
'கவிதை, காவியம், சிறுகதை' என்ன வேறுபாடு?
சிறுகதை என்பது, கவிதைகளுக்கோ, காவியங்களுக்கோ விரோதமான அல்லது பொருந்தாத பொருள் அல்ல. இலக்கியத்திற்கு பல்வேறு வடிவம் உண்டு. கவிதை, பாடல் போல் சிறுகதையும் ஒரு வடிவம். இலக்கிய வடிவம் மாறலாம், அதில் சொல்லப்படும் உள்ளடக்கம், சமூக நோக்கம் மாறாமல் இருக்க வேண்டும். நாவலின் குழந்தை தான் சிறுகதை,
கவிதையின் பொழிப்புரை தான் சிறுகதை.
எதை மையப்படுத்தி சிறுகதை அமைகிறது?
வாழ்வை மையப்படுத்தி, மனிதர்களை மையப்படுத்தி, மனிதனின் மேன்மையை மையப்படுத்தி, வறுமை ஒழிப்பை மையப்படுத்தி, சிறுமையை களைய வேண்டும் என்பதை மையப்படுத்தி, மாறிக் கொண்டிருக்கும் யுகத்தில் மாறக்கூடாத மனித நேயத்தை மையப்படுத்தி சிறுகதை இருக்கும்.
இலங்கை தமிழர் துயரத்தை எழுதிய தருணம்...?
'என்ட மக்களே, எங்கட தலைவரே' என்ற சிறுகதை அது. இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு பிறகு, போரில் தப்பிய போராளியின் கதை அது. என் சம காலத்தில், தமிழ் இனத்திற்கும், உலக மானுடத்திற்கும் மறக்க முடியாத அநாகரிக நிகழ்வு தான், இலங்கை படுகொலை. 'அதை எழுதாமல் இருப்பவன் எழுத்தாளனாக இருக்க முடியுமா?' என்ற கேள்வி கேட்பதை விட, அதை எழுதாத ஒருவன் தமிழ் எழுத்தாளனாக இருக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு.
படிக்கும் பழக்கத்தை உருவாக்க என்ன வழி?
'வாட்ஸ் ஆப்' கலாசாரத்தில் ஊறிப்போயுள்ள இளைய சமுதாயத்தை, வாசிக்கும் கலாசாரத்திற்கு மாற்ற சிறுகதை உதவும் என நம்புகிறேன்.
இலக்கியங்களை தெரிந்து கொள்ள தொழில்நுட்பம் அவசியமா?
'வாட்ஸ் ஆப்' என்பது சிறுகதைக்கான, இலக்கியத்திற்கான விழிப்புணர்வு ஊடகம். அது நுட்பமான தொழில்நுட்பம். அதை விட விரைவான வடிவங்கள் கண்டறியப்படுமே தவிர, அலைபேசி, கணினியில் உலகம் இயங்குவதை இனி தவிர்க்க முடியாது. அந்த வாகனத்தில் இலக்கியத்தை ஏற்றுவது தான் சரியான யுக்தி.
திடீர் சிறுகதை பிரவேசம் ஏன்?
கவிதை என்பது இலக்கியத்தின் கூறு, சிறுகதை என்பது கவிதையின் கூறு. இது உரைநடை யுகம் என புரிந்துள்ளேன். கவிதையின் வாசகன் ஒரு எல்கைக்குள் இருக்கிறான்; உரைநடை வாசகன் எல்லை தாண்டி விரிந்திருக்கிறான். எனவே எல்லை தாண்டிய உரைநடை பக்கம், என்னை மாற்றிக் கொண்டேன். கவிதை, கவிதை தான். அது நுட்பமானது, சிற்பமானது. அது ஆழ உணர்ச்சிகளை தேடிப் போவது. உரைநடை, அகல உணர்ச்சிகளை தேடிப்போவது. இந்த ஆழத்தை தாண்டி அகலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக உரைநடை பக்கம் வந்துள்ளேன். ஆழத்தை காண விரும்பும் போது கவிதைக்கு தாவுவேன்.
இளம் தலைமுறை கவிஞர்கள் பற்றி...?
நல்ல மாற்றம் வந்துள்ளது. 'நிறைய பேர் எழுத முடியும்' என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். நவீன மொழியை பயன்படுத்துகிறார்கள்.
கதை வசனத்தை தவிர்த்தது ஏன்?
நட்பு, ஓடங்கள், துளசி போன்ற 45 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறேன். வசனம், என் நேரத்தை தின்று விடும் என்பதால் ஒதுக்கி வைத்துள்ளேன். படப்பிடிப்பு நிலையங்களுக்குச் சென்று நடிகர்களுக்கு சொல்லித் தரும் போது, என் நேரம் பறிபோகும். அதனால் பாடல் மட்டும் எழுதுகிறேன், இலக்கியத்தின் பக்கம் மட்டும் வசிக்கிறேன்.
அன்று இருந்த கூட்டு முயற்சி, இன்று இருக்கிறதா?
இது தொழில்நுட்ப யுக காலம். ஆர்மோனியம் முன்பு இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என ஒரு கூட்டுக் குடும்பமாக இசையமைத்தது எங்கள் காலம்.
இன்று 'மெயிலில்' மெட்டு வருகிறது, பாடல் செல்கிறது. வங்கியில் பணம் இடமாற்றம் செய்யப்படுகிறது. இசையமைப்பாளர், இயக்குனரை பார்க்காமலேயே 10 ஆண்டுகள் பாட்டு எழுத முடிகிறது.
இவ்வாறு கூறினார்.