நகைச்சுவை சினிமாவின் தாய் மனோரமா : கமல்ஹாசன்
11 அக், 2015 - 15:40 IST
தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாய் ஆக மனோரமா விளங்கி வந்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை மனோரமா, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மனோரமாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாய் மற்றும் தந்தையர்களாக நடிகை மனோரமா மற்றும் நடிகர் நாகேஷ் விளங்கிவந்தனர். நகைச்சுவை திரையுலகம் தந்தையை இழந்த தவிப்பு ஆறுவதற்குள், தற்போது தாயையும் இழந்திருக்கிறது. நாகேஷ் மற்றும் மனோரமாவுடன் இணைந்து நடித்தது நான் செய்த புண்ணியம் என்றே நினைக்கிறேன். இருவர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். சினிமா மூத்த பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக மனோரமாக வந்து அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். பின் அவர் கூடியிருந்த பார்வையாளர்களின் ஒப்புதலுடன் கருணாநிதி எழுதிய 3 பக்க வசனத்தை படிக்கவா என்று என்னிடம் அனுமதி கேட்டார். எனக்கு உடனே கண்ணில் தாரை தாரையாக தண்ணீர் வந்துவிட்டது. மனோரமா அவர்கள் எங்கே. நான் எங்கே. என்னிடம் போய் தாங்கள் அனுமதி கேட்பதா? என்று கேட்டுவிடலாமா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அந்த 3 பக்க வசனத்தையும் எவ்வித குறிப்பும் எடுத்தும் பார்க்காமல், அப்படியே கட கட என்று பேசினார். அவரின் நினைவுத்திறன் கண்டு வியந்துபோனேன். 1000 படங்களில் நடித்துள்ளதே, அவரின் இந்த கூர்மையான நினைவுத்திறனுக்கு காரணம் என்று அப்போது தெரிந்துகொண்டேன். நான் இக்கட்டான நிலையில் இருக்கும்போதெல்லாம், என்னை அருகில் உட்காரவைத்து ஆறுதல் சொல்வார். அவரிடம் பேசியவுடனே, ஒரு தெளிவு பிறந்துவிடும். என்னுடைய வளர்ச்சியில் பெரும்பங்குவகித்தவர் என்றமுறையில் நான் அவரிடம் எல்லையில்லா பாசம், மரியாதை கொண்டுள்ளேன். அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற செய்தி என்னை மட்டுமல்லாது, ஒரு ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெரும் இழப்பு செய்தி ஆகும். நான் 3 வயது குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே, மனோரமா ஆச்சியை பார்த்து வந்துள்ளேன். எந்த இக்கட்டான தருணத்திலும், தனது தன்னம்பிக்கையை கைவிடாத குணத்தை நான் மனோரமாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். மனோரமா போன்ற நடிகையை இனியும் என்னால் மட்டுமல்ல, வேறுயாராலும் பார்க்கமுடியாது...பார்க்கவும் போவதில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.