இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'நடிகர் சங்கத் தேர்தலில், தபால் ஓட்டுக்களில் முறைகேடு செய்ய சரத்குமார் அணியினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, நாடக நடிகர்கள் தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க வேண்டும்' என, பாண்டவர் அணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும், 18 ம் தேதி நடக்கிறது. இதில், தற்போதைய தலைவர் சரத்குமார் அணியை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால் தலைமையில் போட்டியிடும் பாண்டவர் அணியினர், நேற்று திருச்சி மாவட்ட நாடக நடிகர்களை, ேஹாட்டல் ப்ரீஸில் சந்தித்து வாக்கு சேகரித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
நடிகர் கருணாஸ்
நடிகர் சங்கத் தேர்தல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இது தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலில், சரத்குமார் அணியினர் தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே, அனைவரும் சென்னை வந்து நேரில் வாக்களிக்க வேண்டும். முடியாதவர்கள், தபால் ஓட்டுக்கான விண்ணப்பத்தை, தங்கள் கைகளில் மட்டுமே கிடைக்கும்படி, அஞ்சல் அலுவலகத்தில் சொல்லி வைக்க வேண்டும்.
இதுவரை, உங்கள் ஓட்டுக்களை, சென்னையில் உள்ளவர்களே பதிவு செய்து கொண்டிருந்தனர். இந்த முறை, நீங்களே நேரடியா வந்து ஓட்டளிக்க வேண்டும். அவர்கள், ஓட்டுக்கு, 3,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை கொடுத்து வருகின்றனர். அது, ஒரு நாள் குடும்ப செலவுடன் முடிந்து விடும். ஆனால், பாண்டவர் அணி வெற்றி பெறும் போது, ஓய்வூதியமே, மாதம் , 5,000 ரூபாய் கிடைக்கும். எனவே, எது சிறந்த அணி என்று முடிவு செய்து, ஓட்டளியுங்கள்.
நடிகர் விஷால்
எனக்கும், சரத்குமாருக்கும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக, இந்த தேர்தல் நடக்கிறது என, கூறுகின்றனர். ஆனால், அது உண்மையல்ல. தேர்தலில், பாண்டவர் அணியை, கமலஹாசன் நேரடியாக ஆதரிக்கிறார். குஷ்பு ஆதரிக்கிறார். எங்கள் அணி சார்பில், நாசர், பொன்வண்ணன், நடிகர் கார்த்தி உள்ளிட்ட மூத்த நடிகர்களும், இளம் நடிகர்களும் போட்டியிடுகின்றனர். என் சொந்த பிரச்னை என்றால், இவ்வளவு பேர் பின்னால் வரமாட்டார். நான், தனியாகத்தான் இருந்திருப்பேன். தென்னிந்திய நடிகர் சங்க இடத்தை காப்பாற்ற வேண்டும். நாடக நடிகர்களின் வாழ்க்கை வெளிச்சம் பெற வேண்டும், என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுகிறோம். என்னை கேப்டன் என்று சொல்வதெல்லாம் தவறு. திரை உலகில் கேப்டன் என்றால், அது விஜயகாந்த் மட்டும் தான். தேர்தலில் முறைகேடு செய்தாவது வெற்றி பெற நினைக்கின்றனர்.
நடிகர் நாசர்
இரு அணிகள் இருந்தால் தான் தேர்தல் நடைபெற முடியும். ஜனநாயக ரீதியான செயல்பாடே தேர்தல். தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி அமைப்பு ஆகியவற்றுக்கு முறையாக தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் போது, நடிகர் சங்கத்துக்கு மட்டும், ஏன் தேர்தலை வேண்டாம், என்று கூறுகின்றனர். தேர்தலில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். கடந்த, 2013ம் ஆண்டு, சங்கத்தில் நடந்த சில முறைகேடு குறித்து, கேள்வி எழுப்பும் போது, சரத்குமார் உரிய பதில் கூறாமல், முடிந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கேள்வி கேளுங்கள் என்று கூறினார். அதுவும், நாங்கள் தேர்தலில் போட்டியிட முக்கிய காரணம்.
தமிழக முதல்வர், எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர். அவருக்கு, ஏழு கோடி மக்களின் பிரச்னை இருந்தாலும், நடிகர் சங்கத் தேர்தலிலும், எங்கள் அணிக்கு ஓட்டு கேட்டு, நேரில் சந்தித்து ஆதரவு கேட்போம்.
நடிகர் கார்த்தி
நடிகர் சங்கத்தை பொருத்தவரை, நாடக நடிகர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவே, தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. நடிகர் சங்கத்திற்கு, தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் தேடிப்பிடித்து, ஓட்டுப் போட வைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே செயல்பட்டு வருகிறோம் என்றார்.
'குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தாதீர்'
திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 'பாண்டவர் அணியினரிடம், பாக்கியராஜ் உங்கள் அணியில் இருந்து சரத்குமார் அணிக்கு சென்று விட்டாரே, இதனால், அவரது குடும்பத்தில் கூட, பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பாக்கியராஜ் மகன் சாந்தனு பதிலளிக்கையில், ''இன்று காலையில் கூட, என் தந்தை என்னிடம், மொபைல் போனில் பேசினார். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. பத்திரிகையாளர்கள் எதையாவது சொல்லி, குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி,'' என்றார்.
அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்
''நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றால், உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம், ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும். அதற்கான ஏற்பாடு கூட, பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செய்து முடித்து விட்டோம்,'' என, நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
ஆவணப் படம்
நடிகர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலுக்கு முன், பாண்டவர் அணி சார்பில், ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில், 'நான் தான் துவக்கி வைத்தேன்,'என்று நடிகர் சிவாஜி கணேசன், தேவர் மகன் படத்தில் கூறும் வசனத்துடன் படம் துவங்குகிறது. 'தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் தற்போது உள்ள நிலை, அதை தனியாருக்கு தாரை வார்த்ததை மீட்டெடுக்க வேண்டும்' என்று நடிகை லட்சுமி, நாடக நடிகர்கள், கட்டிடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த உறுப்பினர் பூச்சி முருகன், பாண்டவர் அணியில் உள்ள குட்டி பத்மினி, சச்சு போன்ற நடிகைகள், கூறுவது போல், தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் நாசர், விஷால் ஆகியோர், எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம், என்பதை விளக்குவது போன்ற காட்சிகளும், அந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.