ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் புதியவரவு அதியா ஷெட்டி. வெறும் அதியா ஷெட்டி என்றால் யாருக்கும் தெரியாது. இவர் பாலிவுட்டின் மாஜி ஹீரோ சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ''ஹீரோ'' படத்தின் மூலம் அறிமுகமாகும் அதியா, தனது முதல்படம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
உங்களது முதல்படமான ஹீரோ ரிலீஸாக போகிறது, எப்படி இருக்கிறது உங்களது மனநிலை.?!
எனது படம் ரிலீஸாகும் நாளை எதிர்நோக்கி ஆவலாய் இருக்கிறேன், அதேசமயம் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. ஹீரோ படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மசாலா படம். படத்தில் ரொமான்ஸூம் உள்ளது, ஆக்ஷனும் இருக்கிறது. ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் என நம்புகிறேன். ரசிகர்கள், மீடியாக்களை காட்டிலும் எனக்கு தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் இது சல்மான் கானின் படமும் கூட... அவரது படத்தில் நான் அறிமுகமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்.
ஹீரோ படம் பற்றி சொல்லுங்க...?
ஹீரோ படத்தில் நான் ராதா என்ற ரோலில் நடிக்கிறேன். ராதா எப்பவும் சந்தோஷமாக இருப்பவள், குறும்புக்காரி, அப்பாவுக்கு பிடித்தமான மகள். இன்றைய பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பதை இப்படத்திலும் காட்டியுள்ளோம். ஹீரோ படத்தில் எனது கேரக்டர் மிகவும் முக்கியமானது, மனதுக்கு பிடித்தமானது.
உங்க அப்பாவே சொந்த தயாரிப்பு வைத்துள்ளார்...? பிறகு ஏன் சல்மான் படத்தில் அறிமுகம்.?
சிரிக்கிறார்... ஒருவனது திறமையை குடும்பத்தில் இருப்பவர்களை காட்டிலும், வெளியில் இருப்பவர்கள் நன்கு அறிவர். அப்படித்தான் எனது திறமையை நன்கு அறிந்து, இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார் சல்மான்கான். எனக்கும் இது நல்லதொரு விஷயம் தான். எனது சொந்த தயாரிப்பில் கூட நான் இவ்வளவு சுதந்திரமாக இருந்திருப்பேனா என்று தெரியவில்லை. இப்படியொரு வாய்ப்பை தந்த சல்மான் கானுக்கு நன்றி.
சினிமா பற்றி உங்களது அப்பா ஏதேனும் ஆலோசனை சொன்னாரா..?
ஆமாம், நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளார். சினிமாவில் வெற்றியோ... தோல்வியோ... ஒரே விதமாக எடுத்து கொள்ள வேண்டும். தோல்வி வரும்போது பயத்தையும், வெற்றி பெறும்போது தலைக்கனத்தையும் ஏற்றி கொள்ள கூடாது. சினிமா குடும்பத்திலிருந்து வந்திருப்பதால் ரசிகர்கள் நம்மை ஏற்று கொள்வார்கள் என்று ஒருபோதும் நினைக்க கூடாது, திறமையை வெளிப்படுத்தினால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்று கொள்வார்கள், சினிமாவிலும் நீ வெற்றி பெறலாம் என்று கூறினார்.
ஹீரோ படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது.?
ஒரு நாள் ஜிம்மில் இருந்த சமயம், சல்மான் கானின் சகோதரி என்னை சந்தித்தார். சல்மான் கான், தான் தயாரிக்கும் ஹீரோ படத்திற்கு ஹீரோயின் தேடுவதாகவும், ஹீரோவாக சூரஜ் பஞ்சோலி நடிப்பதாகவும், நீ நடிக்கிறாயா...? என்று கேட்டார். நானும் நடிக்க சரி என்றேன். பிறகு சல்மான் கான் என்னை பார்த்தார், அப்பாவிடம் வந்து பேசினார். அந்த தருணங்கள் எல்லாம் மகிழ்ச்சியானவை அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மேலும் இந்தப்படத்தில் சல்மான் கான் ஒரு பாட்டு ஒன்றும் பாடியிருக்கிறார்.
சூரஜ் பஞ்சோலியுடன் நடித்த அனுபவம் பற்றி...?
சூரஜ் நல்ல நடிகர் மட்டுமல்ல... எனது சிறந்த நண்பரும் கூட. சினிமாவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும் என நினைப்பவர், மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். சூரஜ் உடன் நடிக்க நான் கொடுத்து வைத்துள்ளேன். தொழில் பக்தி அதிகம், தனிப்பட்ட விஷயங்கள் எதையும் பேச மாட்டார். ஹீரோ படத்தை பார்த்த பின்னர் அவர் ஒரு நல்ல மனிதர் என்று அனைவரும் உணருவார்கள்.
சினிமாவில் உங்களது கனவு ரோல் என்ன.?
கனவு ரோல் என்று எதுவும் கிடையாது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தான் உள்ளது. இயக்குநர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்று கொள்ள விரும்புகிறேன், எனது திறமையை வெளிக்கொண்டு வரும் படங்களில் நடிக்கவே ஆசை, சவாலான வேடங்கள் கிடைத்தால் எனது சினிமா பாதை முன்னோக்கி செல்லும் என்று நினைக்கிறேன். என்னுடன் எனது அப்பா இருக்கிறார், கண்டிப்பாக அவர் எனக்கு நல்லதே செய்ய வழி செய்வார்.
இவ்வாறு அதியா ஷெட்டி கூறியுள்ளார்.