இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தீபாவளி என்றாலே திரையுலகினருக்கு எப்போதும் ஒரு கொண்டாட்டம்தான். அந்த சமயங்களில் மழை வந்தால் கூட அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தை வெளியிடுவார்கள். பொங்கல் தினத்தன்று நான்கைந்து நாட்கள் விடுமுறை வந்தால் கூட தீபாவளிக்கு பட்டாசு, இனிப்புகள், புத்தாடை இவற்றோடு புதுப் படத்தைப் பார்ப்பது நமது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான விஷயம். வழக்கம் போலவே இந்த ஆண்டும் பெரிய படங்கள் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படங்களில் சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
தூங்காவனம்
கமல்ஹாசனின் தயாரிப்பில் அவருடைய உதவியாளரான ராஜேஷ் எம். செல்வா இயக்கும் படம். பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஸ்லீப்லெஸ் நைட் என்ற படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுவதாக படம் ஆரம்பமான நாளிலிருந்தே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒர் இரவில் நடக்கும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர்தான் இந்தப் படம் என்கிறார்கள். கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் என நடிப்பில் சிறந்த நட்சத்திரங்களின் கூட்டணியுடன் கமல் களமிறங்கியிருக்கிறார். பாபநாசம் படத்தின் வெற்றியால் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் தீபாவளி படங்களில் முதன்மைப் படமாக போட்டியில் உள்ளது.
அஜித் படம்
வீரம் படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா, அஜித் மீண்டும் இணைந்துள்ள படம். விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ள இந்தப் படத்திற்கு வழக்கம் போலவே இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜித்தின் படங்களுக்கு படப்பிடிப்பு முடிந்த பிறகே பெயர் வைக்கும் சென்டிமென்ட் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வீரம், ஆரம்பம் ஆகிய படங்களுக்கு லேட்டாகத்தான் பெயர் வைத்தார்கள். இப்போது இந்தப் புதிய படத்திற்கு அடங்காதவன், சரவெடி, அச்சமில்லை என அஜித் ரசிகர்களே ஆளுக்கொரு பெயரை சொல்லி வருகிறார்கள். உண்மையிலேயே இவற்றில் ஒன்றுதான் படப் பெயரா அல்லது வேறு ஏதாவது பெயரை வைக்கப் போகிறார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும். அஜித் ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அஜித் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அஜித் நடிக்கும் படத்திற்கு அனிருத் முதல் முறையாக இசையமைக்கிறார். அஜித் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிப்பதாகவே தெரிகிறது. பிளாஷ்பேக்கில் இளமையான அஜித் வருவாரா என்பதெல்லாம் சஸ்பென்சாகவே உள்ளது. இப்போதே படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு வேறு எந்தப் படங்கள் வந்தாலும் அஜித்தின் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஐபி 2
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வேல்ராஜ், தனுஷ் மீண்டும் இணைந்துள்ள படம். இன்னும் படத்திற்கு என்ன பெயர் என்று அறிவிக்கவில்லை. ஆனால், எல்லோரும் விஐபி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். தனுஷ் ஜோடியாக முதல் முறையாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். மீண்டும் ஒரு குடும்பப் பின்னணியில் அமைந்த ஒரு காதல் கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த அனேகன், மாரி ஆகிய படங்களை அவர்களே வெற்றிப் படங்கள் என அறிவித்து விட்டார்கள். ஆனால், உண்மையிலே அந்தப் படங்கள் வெற்றி பெற்றதா என்பது அவர்களுக்கே தெரியும். வேலையில்லா பட்டதாரி படத்திற்குப் பிறகு வந்த அந்த இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதே உண்மை. அந்தக் குறையை விஐபி 2 போக்கிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
இது நம்ம ஆளு
இப்போதைக்கு பிரச்சனைகளின் சங்கமமாக இந்தப் படம் இருந்து வருகிறது. எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட படம் சிம்புவாலும், அவருடைய குடும்பத்தாராலும் மட்டுமே இழுத்தடிக்கப்பட்டு இன்னமும் வெளிவராமல் நீண்டு கொண்டேயிருக்கிறது. நயன்தாரா மீண்டும் கால்ஷீட் கொடுத்தால் மேலும் இரண்டு பாடல்களுடன் படம் வெளிவரும். இல்லையென்றால் அந்தப் பாடல்கள் இல்லாமலே படம் வெளிவரும். அந்தப் பிரச்சனை முடிவதற்குள்ளாகவே, படத்தின் இசையமைப்பாளரான குறளரசன், பாண்டிராஜ் தன்னை மதிக்கவேயில்லை என குற்றம் சாட்டியுள்ளார். அதனால், இந்தப் படத்தைப் பற்றி மீண்டும் ஒரு பரபரப்பும் சர்ச்சையும் எழுந்துள்ளது. இது நம்ம ஆளு படத்தின் மொத்த தாமதத்திற்கு தனது சொந்தப் படமாக இருந்தாலும் சிம்பு கால்ஷிட் தராதது முக்கிய காரணம். அடுத்து குறளரசன் குறித்த நேரத்தில் பாடல்களைத் தராததும் மற்றொரு காரணம். தயாரிப்பாளரான டிஆர், முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்த பாண்டிராஜுக்கு குறித்த நேரத்தில் பணம் தராததும் இன்னொரு காரணம் என பல பிரச்சனைகளில் திளைத்து வருகிறது. இப்போது மாற்றி மாற்றி பாண்டிராஜ் மீது குற்றம் சொல்லி வருகிறார்கள். அனைத்தும் நல்லபடியாக முடிந்தால் சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
தாரை தப்பட்டை
பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம். பரதேசி படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பாலாவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம். இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் 1000மாவது படம் என்ற சிறப்பு இந்தப் படத்திற்கு உண்டு. சுமார் பத்து நாட்களுக்கு முன்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. எப்படியும் அடுத்த சில வாரங்களில் இளையராஜா இப்படத்திற்கான பின்னணி இசையை அமைத்துக் கொடுத்துவிடுவார். அதனால் படம் தீபாவளிக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு. பாலாவின் இயக்கத்தில் முதன் முறையாக சசிகுமார், வரலட்சுமி நடிக்கிறார்கள். கரகாட்டத்தைப் பற்றிய படம் என்பது மட்டும்தான் இந்தப் படம் பற்றி அனைவருக்கும் தெரியும். வழக்கம் போலவே பாலா ஒரு சிறந்த படத்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மேலே சொன்ன படங்களைத் தவிர மேலும் சில படங்கள் கடைசி நேர போட்டியில் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும், கமல்ஹாசன், அஜித், தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும், இயக்குனர் பாலாவின் படமும் ஒரே நேரத்தில் வரும் சமயத்தில் அந்தப் படங்களுக்கே தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி இருக்கும். அதனால் மற்ற படங்கள் வெளிவருமா என்பது கூட சந்தேகம்தான். மேலே குறிப்பிடப்பட்ட படங்கள் கூட கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 1000 திரையரங்குகளில் தங்களது படம் மட்டுமே சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று முன்னணி நடிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இரு நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது.
முன்பெல்லாம் தீபாவளிக்கு ஐந்திலிருந்து பத்து படங்கள் வரை வெளிவந்தது. குறைவான திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஆனால், பல பிரச்சனைகளால் தற்போது அதிக திரையரங்குகளில் வெளியிட்டு சில நாட்களிலேயே வசூலை அள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள்.