டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவும் கோவிலும் பிரிக்க முடியாத ஒன்று ஒரு காலத்தில் செண்டிமெண்டாக கோவில் மணி ஓசை, கோவில் கோபுர காட்சியுடன்தான் படம் தொடங்கும், அல்லது கோவிலில் பூஜை செய்வது போன்ற காட்சியுடன் தொடங்கும். அதன் பிறகு காதலன் காதலியை முதன் முதலாக சந்திக்கும் இடமும், காதலை சொல்லும் இடமும் கோவிலாக மாறியது. "கோவிலுக்குள்ள காதலைச் சொன்னால் செருப்பிருக்காது புரிஞ்சுக்கோ..."ன்னு பாட்டே எழுதினார்கள்.
அடுத்த கட்டமாக டூயட் பாடல் காட்சிகள் கோவில் பிரகாரத்தில் படமானது. வைதேதி காத்திருந்தாள் படத்தில் வரும் "அழகு மலர் ஆட..."வும், காதல் ஓவியத்தில் வரும் "வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்..." பாடலையும் உதாரணத்திற்கு குறிப்பிடலாம். அதன் பிறகு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் கோவிலுக்குள் நடந்தது. இப்படி தமிழ் சினிமாவும் கோவிலும் பிரிக்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்திருந்தது.
கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வு கோவிலோடு பின்னணி பிணைந்திருக்கிறது. அவர்களின் கதையை சொல்லும்போது கோவிலை தவிர்த்து சொல்ல முடியாது என்வே தமிழ் சினிமாவில் கோவில் தவிர்க்க முடியாத அம்சம். அதனால் முன்பு கோவிலில் படப்பிடிப்பு நடத்த எந்த தடையும் இருக்கவில்லை. அதற்கான கட்டணத்தை கட்டிவிட்டால் மூலஸ்தானம் தவிர எங்கு வேண்டுமானாலும் படம்பிடித்துக் கொள்ளலாம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒரு சினிமா படப்பிடிப்பு நடைபெற்றபோது புராதன சின்னங்கள், சிலைகள் சேதமடைந்தது. ஆகம விதிகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இது பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியதால் கோவிலில் படப்பிடிப்பு நடத்த இந்து அறநிலைத்துறை தடை விதித்தது. இதனால் அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் அறங்காவலர்கள் மூலம் தனித்து இயங்கும் கோவில்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அவ்வப்போது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு அரசு கோவில்களிலும் நடந்து வந்தது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு கோவில் செட் போட்டு படம் எடுத்துக் கொள்வார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் 320 கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை. 10 பெரிய கோவில்கள் தனி அறங்காவலர்கள், மடங்கள் நிர்வகித்து வருகிறது. இங்கு படப்பிடிப்புகள் நடக்கிறது. இதற்காக பெரும் தொகை கட்டணமாக செலுத்தப்படுகிறது.
தற்போது தமிழ் நாட்டில் எந்த இந்து கோவில்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் கோவில் செட் போட்டுதான் கோவில் காட்சிகள் படமாக்க முடியும். அது தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு என்பதோடு காட்சியிலும் உயிர்ப்பு இருக்காது என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
பிற மதங்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் படப்பிடிப்பு நடத்த கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும்போது இந்து கோவில்களை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டாக பயன்படுத்தலாமா? படப்பிடிப்பு என்ற பெயரில் கோவிலின் புனிதத்தை கெடுக்கிறார்கள். படப்பிடிப்பின்போது ஊழியர்கள் கோவிலுக்குள் தம் அடிக்கிறார்கள். சில நேரம் தண்ணி அடிக்கிறார்கள். செருப்பு அணிந்து பணியாற்றுகிறார்கள். எனவே கோவிலுக்குள் படப்பிடிப்பை அனுமதிக்க கூடாது என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழ் சினிமாவிலிருந்து கோவிலை பிரிக்க முடியாது. எல்லா கதையிலும் கோவில் காட்சி இருக்கும். இதனால் கோவிலின் வெளிப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கலாம். உள் பகுதியில் படமெடுக்க விரும்பினால் படத்தின் ஸ்கிரிப்டை கோவில் அறங்காவலர் குழுவிடமோ, அல்லது அரசிடமோ கொடுத்து அது கோவில் புனிதத்தை பாதிக்காத காட்சிகளாக இருந்தால் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கலாம். எந்த காரணத்தை கொண்டும் பக்தி பாடல்கள் தவிர வேறு பாடல்கள் எடுக்க அனுமதிக்க கூடாது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. கோவில் படப்பிடிப்பு தொடர்பான அடுத்து சவாலை சினிமா சந்திக்க இருக்கிறது.