வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரோஜா, பம்பாய் என்று மணிரத்தினம் படங்களில், ஆசை நாயகனாக ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்தவர் நடிகர் அரவிந்தசாமி. நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது வெற்றிகரமாக பேசப்படும்,தனி ஒருவன் படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும், திரையரங்குகளில் ரசிகர்கள் அரவிந்தசாமியின் நடிப்பை கொண்டாடுகின்றனர்.
தினமலர் நாளிதழுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி:
*அழகான,சாக்லெட் ஹீரோ திடீரென வில்லனா அவதாரம் எடுத்து, சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து அமர்ந்த உங்களின், தனி ஒருவன் பட அனுபவம் பற்றி சொல்லுங்க?
ரொம்ப நாளா எனக்கு ஒரு ஆசை; வழக்கமான வில்லன் என்று இல்லாமல், நெகட்டிவ் ரோல் பண்ணணும். ஒரு நல்லவன் நல்லவனா இருந்து ஏன் கெட்டவன் ஆகிறான். இந்த மாதிரி ரோலில் நடித்து, அதில் நான் நல்ல பெயர் எடுக்கணும். இந்த கேரக்டரையும் நல்லா பண்ணியிருக்கேன் என சொல்ல வேண்டும். படம் பார்த்து வெளியில் வரும்போதும், என்னை பற்றி பேச வேண்டும் என நினைக்கிறேன். இது எல்லாம், தனி ஒருவன் படத்தில் அமைந்தது சந்தோஷம். கூடவே ஒரு,ஷாக். தியேட்டரில் என் நடிப்பை பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
*இந்த,கேரக்டர் எடுபடும் என எப்படி முடிவு செய்து நடித்தீர்கள்?
ஹீரோ, வில்லன் இப்படி எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கதை என்பது ரசிப்பது போல் இருக்க வேண்டும். நாம் நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டும். சும்மா, வில்லன் மாதிரி வந்து அடி வாங்கிட்டு, அப்படியே போய்விட கூடாது.அதேசமயம், நான்தான் ஜெயிக்க வேண்டும், பெரிய,பில்டப் எனக்கு இருக்க வேண்டும் என விரும்ப மாட்டேன். அந்த, கேரக்டரை மக்கள் விரும்ப வேண்டும். தியேட்டரில் இருந்து மக்கள் வரும்போதும் ரசிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ராஜா, கதை சொல்லும்போது, என் கேரக்டர் பற்றி விளக்கிச் சொன்னார். என்னால் எவ்வளவு சிறப்பா நடிக்க முடியுமோ, அதை, என்ஜாய் பண்ணி நடிச்சிருக்கேன்.
*நெகட்டிவ் கேரக்டர் என, இயக்குனர் சொன்னபோதே,ஓகே சொல்லி விட்டீர்களா? யோசித்து ஒப்புக் கொண்டீர்களா?
ராஜா முதல் முறை கதை சொல்லும் போதே, வில்லனை மையமா வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார். அவர் கதை சொன்ன விதத்தில், அவரை நம்பினேன். அந்த,கேரக்டர் மேல் அவருக்கு பெரிய ஆர்வம் இருந்தது. ரொம்ப ரசித்து சொன்னார். இவ்வளவு சொல்லும்போது, தப்பாகாது என்று நம்பி ஒப்புக் கொண்டேன்.
*சித்தார்த் அபிமன்யு - அரவிந்த சாமி, கொஞ்சமாவது தொடர்பு இருக்கிறதா, நிஜ வாழ்க்கையில்?
கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை. நான் அவ்வளவு பழிவாங்கும் எண்ணம் உடையவன் இல்லை. ஒரு புதிய அனுபவம். நான் வேற; இந்த நடிப்பு வேற. பல விஷயங்கள் எனக்கு இதில் தெரியாது.
*தம்பி ராமையா போல் ரொம்ப வெகுளித்தனமான அப்பா, உங்க அப்பாவை எங்காவது நினைவுப்படுத்தியதா?
என் அப்பா, என்னை விட நுாறு மடங்கு திறமைசாலி, புத்திசாலி. தஞ்சாவூர் பக்கத்தில், மெலட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரது, 16வது வயதில் வீட்டில் இடம் போதவில்லை என்ற காரணம் சொல்லிவிட்டு கோல்கட்டா போய்விட்டார்.அங்கு ரொம்ப கஷ்டப்பட்டு, பல வேலைகள் பார்த்திருக்கார். இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்களுக்கு எல்லாம் கூட இருந்து உதவி செய்திருக்கார். நான் செய்வதெல்லாம், ஒரு சதவீதம் கூட இல்லை. அம்மாவும் தஞ்சாவூர் தான்; பரதநாட்டிய டான்சர். அவங்க, இரண்டு பேரும் தான் என் பலம்.
*நீங்க கற்றுக்கொண்ட முதல் வேலை என்ன?
சின்ன கதை இருக்கு இதில். அப்பா கஷ்டப்பட்டு வளர்ந்ததால், நானும் அந்த கஷ்டத்தை உணர்ந்து வாழ ஆசைப்பட்டார். காரில், பள்ளி கொண்டு வந்து விட்டனர், எட்டாவது படிக்கும் போது, பஸ்சில் போக சொல்லி பழக்கினார். கல்லுாரி போகும் போது, ஒரு பைக் வாங்கி கொடுத்தார்.கல்லுாரி முடித்த போது, அப்பா, திருச்சியில் சிறிய தொழிற்சாலை நடத்தி வந்தார். அங்க அனுப்பி வைத்து, எனக்கு முதன் முதலில், இரண்டு மாதம்,வெல்டிங் வேலையைச் செய்ய கற்றுக் கொடுத்தார். ஏசி வசதி, கார் வசதி எல்லாம் இருந்தும், ஆயிரம் பேர் வேலை பார்த்த அந்த இடத்தில், நானும் ஒரு தொழிலாளி போல என்னை உணர வைத்தார்.சமூக வாழ்வியலை நான் தெரிந்து கொள்ளவும், பந்தா பகட்டு இல்லாமல் மக்களோடு மக்களாக வாழ பழகச் செய்தார்.
டாக்டர் ஆக முடியலயே என்ற வருத்தம் இப்பவும் இருக்கா?
ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு, பிஸியான நடிகர் ஆனபோது, தொழில்முறை மாறிப்போயிருச்சி. என்னோட 20 வயதில தளபதி படம் வந்தது. அப்பாவுக்கு படிக்கணும்னு விருப்பம். 1, 2 படம் பண்ணிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு படத்துக்கு போயிட்டேன். ரோஜா படம் முடித்தபிறகு, அமெரிக்கால ஸ்காலர்ஷிப்ல படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கே போக சொல்லிட்டார். ரோஜா பட ரிலீஸ்ல கூட நான் இந்தியாவில் இல்லை. அங்க படிச்சிட்டு இருக்கும் சமயத்தில, அப்பா, அம்மா 2 பேருக்கும் உடம்பு சரியில்லை. 1993ம் ஆண்டு இறந்திட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. தவிச்சி போயிட்டேன். ஆபிஸ் போகமுடியல, தனிமையாக்கப்பட்டேன். அப்ப தான், மணி சார், வா பாம்பே படம் பண்ணலாம்னு கூப்பிட்டு போனார். மனசு சரியில்லாம இருந்த பாதி நாட்கள் பாம்பே பட சூட்டிங்கில் தான் இருந்தேன். தொடர்ந்து நடிப்பு, பிஸினஸ் என்று உள்நாடு, வெளிநாடு என்று என்று கேரியர் என்னென்னவோ மாறியே போயிடுச்சு. இப்போ, சந்தோஷமா தான் இருக்கேன். அடுத்து என்ன பண்றீங்க சார்னு கேட்குறாங்க. இப்ப என் ஆபிஸ் போறேன்னு சொல்லிட்டு வர்றேன்.