டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகத்தில் வருடத்திற்கு சுமார் நூறு இயக்குனர்களாவது அறிமுகமாகிறார்கள். அவர்களில் ஒரு பத்து இயக்குனர்கள் மட்டுமே அடுத்து படம் இயக்கும் வாய்பைப் பெறுகிறார்கள். பலருக்கு இரண்டாவது படம் கிடைப்பது ஒரு போராட்டமாகவே அமைகிறது. அறிமுகமாகும் இயக்குனர்களின் படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் அல்லது விமர்சன ரீதியாகவாவது வரவேற்பைப் பெற வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அவர்களுக்கு அடுத்த படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் பெரும் நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்குபவர்கள் மட்டுமே வெற்றி பெறும் ஒரு சூழ்நிலை இருக்கிறது. இரண்டாம் கட்ட நடிகர்களை வைத்து படங்களை இயக்குபவர்களுக்கும், அறிமுக நடிகர்களை வைத்து படங்களை இயக்குபவர்களுக்கும் வெற்றி என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதில்லை.
முன்னணி இயக்குனர்கள் கூட சமயங்களில் வெற்றிக்கு தடுமாற வேண்டியிருக்கிறது. அதனாலேயே ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறையே இடைவெளி விடுகிறார்கள். ஐந்து வருடங்களில் இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட இருக்கிறார்கள். அந்த அளவிற்கு வெற்றி என்பது மட்டுமே ஒரு இயக்குனரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் விஷயமாக இருக்கிறது. அடுத்தடுத்த வெற்றிக்காக, அல்லது கிடைத்த தோல்வியை அடுத்த படத்தில் வெற்றியாக மாற்றிக் கொள்ள இடைவெளி விட்டுள்ள சில இயக்குனர்களைப் பற்றிப் பார்ப்போம்.
பாண்டிராஜ்
'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமான பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்க ஆரம்பித்த 'இது நம்ம ஆளு' படத்தில் வகையாக சிக்கிக் கொண்டார். சிம்பு நடித்த 'வாலு' படமே வெளிவர மூன்று ஆண்டுகளாகிவிட்டது. 'இது நம்ம ஆளு' படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களாகியிருக்கிறது. 'இது நம்ம ஆளு' படத்தில் மட்டுமே சிக்கிக் கொண்டால் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமென நினைத்து, இடையில் குழந்தைகளை மையமாக வைத்து 'ஹைக்கூ' படத்தை இயக்கி முடித்து, அடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்கவும் சென்று விட்டார். ஆனாலும், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கிய படம் வெளிவர இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியிருக்கிறது. இந்த இடைவெளியை தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பாண்டிராஜ் சரி செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
பாலாஜி சக்திவேல்
2002ல் வெளிவந்த 'சாமுராய்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். கொஞ்சம் காலதாமதமாக வந்த அந்தப் படம் வெற்றி பெறாமல் போனது. இருந்தாலும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இவருடைய நண்பரும், குருநாதருமான ஷங்கர் தயாரிப்பில் 'காதல்' படத்தை எடுத்து தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் பின் இவர் இயக்கிய 'கல்லூரி' படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. அதற்கும் ஐந்து வருடங்கள் கழித்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த 'வழக்கு எண் 18/9' படம் தேசிய விருதுகளை அள்ளியது. இந்தப் படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. 'ரா ரா ராஜசேகர்' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இயக்குனராக அறிமுகமான இந்த 13 வருடங்களில் மொத்தம் 4 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
அமீர்
இயக்குனராக அறிமுகமான 'மௌனம் பேசியதே' பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தின் திரைக்கதை யுக்தி வித்தியாசமாக அமைந்து படத்தைப் பற்றி பேச வைத்தது. அடுத்து அமீர் இயக்கிய 'ராம்' படம் நன்றாக விமர்சிக்கப்பட்ட படமாக அமைந்தது. அதற்குப் பின் கார்த்தியை அறிமுகப்படுத்தி அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' படம் தமிழ்த் திரையுலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. ஜீவனுடன் படம் எடுக்கும் இயக்குனர் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அனைவருக்கும் புரிய வைத்தது. அமீரை ஒரு திறமையான இயக்குனராக அடையாளப்படுத்திய படமாக 'பருத்தி வீரன்' அமைந்தது. அடுத்தடுத்து அவரிடம் இருந்து பல வித்தியாசமான படங்களை ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், மிகச் சுமாரான 'ஆதி பகவன்' படத்தைக் கொடுத்து அனைவரையும் ஏமாற்றிவிட்டார். அடுத்து 'ஃபெப்ஸி' தலைவராக சில காலம் பணியாற்றி படம் இயக்குவதையும் விட்டுவிட்டார். தற்போது 'பேரன்பு கொண்ட பெரியோர்களே' என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், படத்தைப் பற்றித்தான் வெளியில் எந்த சத்தத்தையும் காணவில்லை.
செல்வராகவன்
சிம்புவை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்து பாண்டிராஜ் இரண்டு வருடங்களாக அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்க, செல்வராகவன் எந்த தைரியத்தில் சிம்புவை நாயகனாக வைத்து 'கான்' படத்தை ஆரம்பித்துள்ளார் என்று திரையுலகத்திலேயே பேசிக் கொள்கிறார்கள். செல்வராகன் இயக்கி கடைசியாக வெளிவந்த 'இரண்டாம் உலகம்' படம் பாக்ஸ் ஆபீஸில் மிக மட்டமான தோல்வியைச் சந்தித்தது. தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி, தனக்கும் கெட்ட பெயரைத் தேடிக் கொண்டால் செல்வராகவன். எப்படியோ அடுத்து சொந்தத் தயாரிப்பில் இறங்கியவர் வேறு யாரையாவது நடிக்க வைக்காமல் சிம்புவை நடிக்க வைத்துள்ளாரே 'கான்' எப்போது வருமோ என்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' வந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. 'கான்' சிம்புவின் தாமதத்தையும் மீறி வந்து அவரைக் காப்பாற்றட்டும்.
வெற்றிமாறன்
தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர், தன்னுடைய இரண்டாவது படமான 'ஆடுகளம்' படத்தில் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். அது மட்டுமல்ல, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, திரைக்கதையாசிரியருக்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆகியவற்றையும் அந்தப் படம் மூலம் பெறும் சிறப்பைப் பெற்றார். அந்தப் படம் வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் உள்ளார். இடையில் 'விசாரணை' என்ற ஒரு மணி நேரம் ஓடக் கூடிய படத்தை எடுத்து முடித்துள்ளார். ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது திரைப்பட விழாக்களில் மட்டும் திரையிடப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். அடுத்து தன் ஆஸ்தான நாயகன் தனுஷ் நடிக்க உள்ள 'வட சென்னை' என்ற படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. எப்படியும் அடுத்த ஆண்டு வரை அந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
வசந்த பாலன்
கமர்ஷியல் இயக்குனர்களுக்கு மத்தியில் இப்படித்தான் படம் எடுப்பேன் என தன்னை எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ளாமல் நல்ல படங்களையே கொடுக்க முயற்சிப்பவராக இருப்பவர் வசந்தபாலன். இவருடைய முதல் படமான 'ஆல்பம்' படம் தவிர இவர் இயக்கத்தில் வெளிவந்த 'வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்' ஆகிய படங்கள் வழக்கமான படங்கள் அல்ல என்பதை ரசிகர்களுக்கும் உணர்த்திய படங்கள். இப்படிப்பட்ட படங்கள் கமர்ஷியல் ரீதியாகவும் ஓட வேண்டும் என்பதே அந்தப் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் விருப்பமாகவும் இருக்கும். ஆனால், ரசிகர்கள் வசந்த பாலன் இயக்கிய கடைசி இரண்டு படங்களான 'அரவான், காவியத் தலைவன்' ஆகிய படங்களுக்கு பெரிய ஆதரவைத் தரவில்லை. வித்தியாசமான படங்களைக் கொடுக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர் வியாபாரச் சந்தையில் சிக்கி நல்ல படங்களைக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இருப்பினும் வசந்தபாலன் மீண்டும் அழுத்தமான, வித்தியாசமான படத்துடன் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
சசிகுமார்
80களின் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் போன்று இயக்கத்துடன் நடிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். 2008ல் 'சுப்பிரமணியபுரம்' படத்தை இயக்கி நாயகனாக நடித்து மிகப் பெரும் வெற்றியையும், விமர்சன வரவேற்பையும் பெற்று அறிமுகமானவர் சசிகுமார். அதன் பின் 'ஈசன்' என்ற படத்தை இயக்க மட்டும் செய்தார். அந்தப் படம் தோல்வியடையவே தொடர்ந்து நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். ஆனாலும் அவரிடமிருந்து 'சுப்பிரமணியபுரம்' போன்று மண் மனம் வீசும் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போதும் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அடுத்த ஆண்டிலாவது ஒரு படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்டவர்கள் அவர்களின் ஒவ்வொரு படைப்புக்களிலும் ஒரு வித்தியாசத்தைக் காட்டியவர்கள். அவர்களின் அனைத்துப் படங்களும் வெற்றி, தோல்வி என்ற ரீதியிலுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர்களாக நம்பிக்கை விதைத்தவர்கள்.
தோல்வி கண்டு துவளாத நிலையில் எந்த பின்னடைவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னுக்கு வருபவர்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுபவர்கள். வியாபாரச் சிக்கல்களிலும், நட்சத்திரங்களின் இமேஜ்களிலும் அவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இயக்குனராக எந்த 'இடைவெளி'யும் விடாமல், தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அவர்கள் தர வேண்டும் என்பதே நமது ஆவல்.