டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென் மாநிலங்களில் இருந்து செல்லும் அழகு ராட்சசிகளுக்கு, பாலிவுட்டில் எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவியைத் தொடர்ந்து, இப்போது, தீபிகா படுகோனேயும், பாலிவுட்டில் ராஜ்ஜியம் நடத்துகிறார். தன் விழியீர்ப்பு விசையாலும், அசர வைக்கும் உடல் மொழிகளாலும், பாலிவுட் ரசிகர்களின், லைக்குகளை அள்ளும் கனவு தேவதையின் பேட்டி...
முன்னணி இடத்தை பிடித்துள்ளீர்கள்; எப்படி இருக்கிறது உங்கள் மனநிலை?
படங்களின் வெற்றி, தோல்வி, எப்போதுமே என்னை மாற்றியது இல்லை. இதற்கு முன் எப்படி இருந்தேனோ, அதேபோல் தான் இப்போதும் இருக்கிறேன். என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. இந்த வெற்றிக்கு பின், கடுமையான உழைப்பு இருக்கிறது. எனக்கு கிடைத்துள்ள பாராட்டும், புகழும் என்னை பெருமையடையச் செய்ய வைப்பதற்கு பதில், வேலையில் மேலும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
நடிக்க வந்த புதிதில், கடும் விமர்சனத்துக்கு ஆளானீர்களே?
நான், தென் மாநிலத்தை சேர்ந்த பெண். தென் மாநில கலாசாரம், என் ரத்தத்தில் கலந்துள்ளது. இந்தி படங்களில் நடிக்க வந்து விட்ட காரணத்துக்காக, ஒரே நாளில், என்னை மாற்றி கொண்டு விட முடியாது; படிப்படியாகத் தான், மாற்றிக் கொள்ள முடியும். எனவே, விமர்சனங்களை பற்றி, அப்போது நான் கவலைப்படவில்லை.
தற்போது கிடைத்துள்ள வெற்றியை தக்க வைக்க என்ன செய்ய போகிறீர்கள்?
ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்; எந்த வெற்றியுமே தற்காலிகமானது தான்.
இன்று எனக்கு கிடைக்கும் வெற்றி, நாளை, மற்றொருவருக்கு கிடைக்கும். என் வேலை
என்னவோ, அதை செய்கிறேன்; மற்ற விஷயங்களை ஆண்டவன் பார்த்து கொள்வான்.
படங்களை தேர்வு செய்வது உங்களுக்கு நெருக்கடியாக உள்ளதா?
என் உள்மனம் என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படுகிறேன். எல்லா இயக்குனர்
படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக, புதுமுகங்களுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். பட்ஜெட், உடன் நடிக்கும் நடிகர், நடிகையரை வைத்து, கதையை தேர்வு செய்வது இல்லை.
சம்பந்தப்பட்ட கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேனா என்பதை கற்பனை செய்து
பார்ப்பேன்; பொருத்தமாக இருந்தால், உடனடியாக, ஓகே சொல்லி விடுவேன்.
மனம் திறந்து பதில் சொல்லுங்கள்; உங்கள் மனம் தற்போது உங்களிடம் இருக்கிறதா?
(பலமாக சிரிக்கிறார்) கண்டிப்பாக என்னிடம் தான் இருக்கிறது; அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
காதல் காட்சிகளில் நடிக்கும்போது, உங்களுக்குள் காதல் அனுபவம் வந்தது உண்டா?
வில்லங்கமான கேள்வியாக இருக்கிறதே... ஒரு சில காதல் காட்சிகளில் நடிக்கும்போது, நமக்குள்ளும் காதல் உணர்வு வருவது இயற்கை தான்; இல்லையென கூற முடியாது. இதுபோன்ற அனுபவம், ஒரு சிலருக்கு திருமணத்தில் கூட முடிந்துள்ளது. இந்த விஷயத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்.
ராம்லீலா போன்ற படங்களில் மிக அழகாக காட்சி அளித்தீர்களே?
அப்படியானால், மற்ற படங்களில் நான் அழகாக இல்லை என்கிறீர்களா? (சத்தமாக சிரிக்கிறார்) ரசிகர்கள் நம்மை விரும்பும்போதும், நம் நடிப்புக்கு பாராட்டு குவியும்போதும், மீடியாக்களின் பாராட்டு மழையில் நனையும்போதும், தானாகவே நமக்கு தன்னம்பிக்கை வந்து விடுகிறது. இந்த தன்னம்பிக்கை தான், நம்மை அழகாக்குகிறது.
சினிமாவில் கற்றுக் கொண்டது?
இப்போது, எனக்கு கேமரா பயம் இல்லை. கேமராவுக்கு முன் நிற்கும்போது, சவுகரியமாக உணர்கிறேன். நாம் செய்யும் தவறுகளை கண்காணிப்பதற்கு இயக்குனர் இருக்கிறார் என்ற எண்ணம் இருப்பதால், பயம், தயக்கம் இல்லாமல் நடிக்க முடிகிறது.
ரன்வீர் சிங்கிற்கும், உங்களுக்கும்...?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை. ராம்லீலாவில் நடித்தபோது, எங்களின், கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. எப்போதும், எனர்ஜியாக செயல்படும் இளைஞர் அவர். இதைப்பார்த்து,
பலமுறை வியந்திருக்கிறேன். அனைவரிடமும், உடனே பழகி விடுவார். யாரை, எப்படி சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பது, அவருக்கு நன்றாக தெரியும். இப்படிப்பட்ட குணம் உடையவர்களை, கடவுளின் குழந்தை என்று சொல்வதை தவிர, வேறு என்ன சொல்ல முடியும்?
அதிகமான வருமானம் வருகிறது; எதையாவது வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதா?
என்னிடம் கார் இருக்கிறது; சின்னதாக, மும்பையில் ஒரு வீடு இருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்? மும்பையில் தனியாகத் தான் வசிக்கிறேன். எனக்கான தேவைகள் மிகவும் குறைவு.
ஒரு நடிகை, எளிமையாக வாழ்க்கை நடத்துவது சாத்தியமா?
ஏன் சாத்தியமில்லை? தினமும், படப்பிடிப்புக்கு போகிறேன்; படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு வந்து விடுகிறேன். சாப்பிடுகிறேன்; துாங்குகிறேன். இதுதான் என் அன்றாட வாழ்க்கை.
இதை எளிமை என்று கூறினால் எப்படி?