தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'திமிரு' படத்தில் நடித்து, இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்; தன் ஸ்டைல், குரலால் அதிகம் பேசப்பட்டவர்; ரசிக்கப்பட்டவர், நடிகை ஸ்ரேயா ரெட்டி. ஐந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் நடிக்க வந்திருக்கும், இவருடன் ஒரு சந்திப்பு.
நடிகையாக மறுபிரவேசம் செய்யும், 'அண்டாவக் காணோம்' படத்தை பற்றி... அந்த கதையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எனக்கு. 'ஹீரோ' என்றெல்லாம் இல்லை; நான் திரும்ப வருவதற்கு சரியான கதை, ரோல் இந்தப் படம். 'திமிரு' படம் மாதிரி, ஆனால், அதே கதாபாத்திரத்தில் இல்லை. கிராமத்து கதை பின்னணியில் மிரட்டும் கதை, இந்த படம்.
திருமணம் ஆன பின், அக்கா, அண்ணி வேடங்கள் தானே தமிழ் சினிமாவில் அதிகம் கிடைக்கும்?
நான் இன்னும், உடல் ரீதியா ரொம்ப சரியா இருக்கேன். அண்ணி, அக்கா பாத்திரங்களில் நடிக்க இன்னும் வயசு இருக்கிறது. இப்போதைக்கு, எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமும் இல்லை.
'அண்டாவக் காணோம்' படத்தில் உங்கள் கதாபாத்திரம்; எங்கு நடக்கிறது?
படத்தில், நான் சாந்தியாக வர்றேன். கிராமம் சார்ந்த பகுதிகளில், சின்ன சின்ன பிரச்னையை, ஒரு பெரிய பிரச்னையாக மாற்றும் கதாபாத்திரத்தில், நான் நடிக்கிறேன். ஒரு அண்டா, யார் வீட்டில் இருக்கிறது என்ற ஒரு சின்ன பிரச்னை, பெரிய பிரச்னையாகிடும். அக்கா, தங்கை, 'சென்டிமென்ட்' படத்தில் உள்ளது. படம் முழுக்க, 'சீரியஸ்' இல்லை; கொஞ்சம் காமெடியும் இருக்கு. ரொம்ப வித்தியாசமான கதை இது. மதுரை மக்கள் என்னை கொண்டாடி ரசிப்பர். அவ்வளவு அருமையான கதை இது; தேனியில் நடக்கும் கதை.
மார்டன் பெண்ணான நீங்கள், மதுரை பெண்ணாக எப்படி மாறினீர்கள்?
நான், பயங்கர மார்டன் பெண். ஆனால், இந்த படத்தில், ஒரு நூல் புடவை கட்டி, தாலி போட்டு, 'மேக்கப்' இல்லாமல், ஒரு பொட்டு மட்டும் வைத்து, என்னை அப்படியே கிராமத்து சாந்தியா மாற்றிவிட்டார், இயக்குனர். நான் பேசும் தமிழே, புதுசாக இருந்தது. நான் தானா என, என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
'திமிரு' படத்துக்கு பின், உங்களை ரொம்ப எதிர்பார்த்தோமே?
எனக்கு முதலில், நல்ல கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். சும்மா, பேருக்காக நடிப்பது பிரயோஜனம் இல்லை. அப்படி காத்திருந்து கிடைத்த படம் தான், 'அண்டாவக் காணோம்!' படம் வெளியானதும், பார்த்துட்டு சொல்வீர்கள்.
உங்களை, 'திமிரு' படத்தில் பார்த்தபின், நிறைய பேர் பேசவே பயந்து இருப்பரே?
ஆமாம், அது உண்மை. என் கணவரே என்னிடம் பேச பயந்தார். படம் வெளிவந்து இரண்டு, மூன்று நாள் பின், வெளியே சென்றால், 'சூப்பராக நடித்துள்ளீர்கள்' எனக்கூறி, எட்டி நின்றே கை கொடுத்து பாராட்டினர். அதன்பின், நிறைய கதாநாயகர்கள் பேசவே பயந்தனர். என் பார்வை அப்படி இருந்துள்ளது. என் கால், பெண் கால் போல் இருக்காது. ஆம்பளை மாதிரி சதை பிடிப்போட இருக்கும். 'அய்யோ... இந்த பெண் வேற டைப்பா இருக்கிறது' என, போய் விடுவர். ஆனால், வீட்டில் நான் தான் செல்லம். அப்புறம் தான், என் கணவர் விக்ரம், கணவரின் சகோதரரும், நடிகருமான விஷால் எல்லாரும். நான் மிகவும் சாதாரணமான பெண்; யாரும் பயப்பட தேவையில்லை.
எப்படி உடம்பை இப்படி கட்டமைப்புடன் வைத்துள்ளீர்கள்?
என் அப்பா கிரிக்கெட் வீரர். அதனால் பள்ளி படிக்கும் போதே உடற்பயிற்சி பழக்கம் உண்டு. தினம், ஒரு மணிநேரம் பயிற்சி எடுப்பேன். உடற்பயிற்சி மட்டும் போதும் என்று, நிறைய பேர் நினைக்கின்றனர்; அப்படி இல்லை. உணவு பழக்கமும் முக்கியமான விஷயம். இதை கடைபிடித்தாலே மிகவும் இளமையாக, அழகா தெரிவர்.
வீட்டில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளேன். கடற்கரையில் காலையில், ஓட்டப்பயிற்சி எடுப்பேன்; கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவேன். முடிந்தவரை உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வேன்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, உடலை பராமரிக்க ஏதேனும் குறிப்பு சொல்லுங்கள்?
வீட்டிற்குள்ளே குறைந்தபட்சம், 10 ஆயிரம் அடியாவது நடக்கணும். கிடைப்பதெல்லாம் சாப்பிடக் கூடாது. மாலை 6:00 மணிக்கு மேல், வெள்ளை உணவு, சாதம், இட்லி, தோசை என, இப்படி எதுவும் எடுத்துக் கொள்ள கூடாது. உப்பும், சர்க்கரையும் அதிகம் சேர்க்கக் கூடாது; வறுவல், பொறியல் தொடவே கூடாது. உடற்பயிற்சியோடு உணவுக் கட்டுப்பாடு இருந்தாலே போதும். வீட்டில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே, உடற்பயிற்சி செய்யலாம். பெண்கள் உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
ஒரு கால கட்டத்தில், 'டிவி'யில் கலக்கிட்டு இருந்தீங்க... உங்களுக்கு என, ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தீர்கள். திரும்பவும், 'டிவி' பக்கம் வர ஆசை உள்ளதா?
ஆங்கில இசை சேனல் வந்த சமயம், தமிழக மக்கள் அந்த அளவு ரசிப்பர் என, யாருமே எதிர்பார்க்கவில்லை. சேனல் துவங்கிய, ஆறு மாதத்தில், எனக்கு அவ்வளவு நல்ல பெயர் கிடைத்தது. மக்கள் கொண்டாடினர் என்று கூட சொல்வேன். இப்பவும் நிறைய, 'டிவி'களில் கேட்டு வருகின்றனர். ஆனால், கொஞ்சம் வித்தியாசமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே செய்வேன். 100 சதவீதம் நான் திரும்பவும், 'டிவி' பக்கம் வருவேன்.
எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?
நான் நடிக்கும் கதாபாத்திரம், பேசப்பட வேண்டும்; என்னை முதலில் பாதிக்க வேண்டும். என் மனதிற்குள் அந்த கதாபாத்திரம் வந்து உட்கார வேண்டும். தமிழில், மிரட்டுவது போல், ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அப்புறம், பி.டி.உஷா பற்றி படம் எடுக்க, யாராவது முன்வந்தால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை.
நடிகர் விஷால் அண்ணியாக, எப்போது விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க போறீங்க?