இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால், மக்கள் ஜனாதிபதி என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, கனவு காணுங்கள் என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இரவு, மாரடைப்பால் காலமானார். அவரது மறைவைக்கு நாடே கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்களது இரங்கலை தெரிவித்து வண்ணம் உள்ளனர். திரைபிரபலங்களும் அப்துல் கலாமின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிவக்குமார் கூறியுள்ளதாவது...
உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு, நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும், எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும். உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம். பதவியில் இருந்த போதும், பதவியில் இல்லாத போதும் உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப்பட்ட மகான்! இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த
அற்புத மனிதர்!
என்று கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து வரைந்துள்ள இரங்கல் கடிதத்தில்...
இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது.
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பெருமுயற்சியால் இந்தியா தன் சொந்த ஏவுகணையைச் செலுத்தியபோது வெள்ளைமாளிகையே அண்ணாந்து பார்த்தது. அவர் அறிவின் துணையால் பொக்ரான் அணுகுண்டு சோதிக்கப்பட்டபோது வல்லரசுகளெல்லாம் மூக்கின்மேல் விரல் வைத்தன. அரசியலுக்கு வெளியே இருந்து அவர் குடியரசுத் தலைவர் ஆனபோது இந்தியாவே எழுந்து நின்று கைதட்டியது. தாய்மொழிவழி கல்வி கற்ற ஒருவர் தாயகத்தையே ஆளமுடியும் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் அப்துல் கலாம்.
அவர் படிப்பில் ஞானி. பழக்கத்தில் குழந்தை. நாற்பது பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்றும் அதைத் தன் தலையில் சூடிக்கொள்ளாதவர். இந்த நூற்றாண்டில் இளைய சமுதாயத்தின் கனவு நாயகன். இளைஞர்களைக் கனவு காணச் சொன்னவர். தூங்கிக் காண்பதல்லை கனவு; உங்களைத் தூங்க விடாததே கனவு என்று லட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர்.
தன் கடைசி நிமிடம் வரை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவரது காலம் கழிந்திருக்கிறது. சென்ற ஆண்டு என் மணிவிழாவிற்கு வந்து வாழ்த்திய பெருமகனுக்கு ஒரு மாலை அணிவித்தேன். அந்த மாலைகூடத் தனக்குச் சொந்தமாகிவிடக்கூடாது என்று அதை எனக்கே அணிவித்துவிட்ட புனிதர் அவர். அவர் பிரம்மச்சாரிதான், ஆனால் இந்தியாவே அவரது குடும்பம். அவர் எந்தச் செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவரது ஞானச் செல்வம்தான் அவர் இந்தியாவிற்கு எழுதி வைத்திருக்கும் சொத்து.
தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதிவைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும். அப்துல் கலாம் தன் செயல்களால் வாழ்ந்துகொண்டேயிருப்பார். தேசத்தின் நதிகளிலும், மலைகளிலும், மரங்களிலும், மலர்களிலும், மக்கள் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.
அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்.
கண்ணீரோடு வணங்குகிறான் அய்யா உங்கள் வைரமுத்து என்று கூறியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளதாவது... இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம். ஆழ்ந்த வருத்தங்களுடன் பாரதிராஜா என்று கூறியுள்ளார்.