ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய உலகம் மிக வேகமானது. நம் தாத்தாவின் பெயர் நமக்குத் தெரியும். நம் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்றால் நிச்சயமாக பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. காரணம் அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுமாதிரிதான் திரைப்பட கலைஞர்களும், தமிழில் சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் சினிமாவை வளர்த்த அற்புதமான கலைஞர்களை எத்தனை பேருக்குத் தெரியும். தியாகராஜ பாகவர், பி.யூ.சின்னப்பா போன்றவர்களை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம். அவர் காலத்தில் இருந்த மற்ற கலைஞர்கள் பற்றி யாருக்குத் தெரியும். அப்படி காலம் மறந்த அற்புத கலைஞர்தான் டி.ஆர்.மகாலிங்கம்.
செந்தமிழ் தேன் மொழியாள்...
"செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்...", "ஆடைகட்டி வந்த நிலவோ..." திருவிளையாடல் படத்தில் வரும் "இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..." பாடல்களை இப்போதும் கேட்டு உருகிவிடுகிறோம். ஆனால் அதை பாடியதும், அந்த பாடலில் நடித்ததும் டி.ஆர்.மகாலிங்கம் என்ற மகா கலைஞன் என்பது பலருக்குத் தெரியாது.
ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தந்த வாய்ப்பு
1924ம் ஆண்டு மதுரை சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ராமகிருஷ்ணன், லட்சுமி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன் சுருக்கமே டி.ஆர்.மகாலிங்கம். பள்ளி படிப்பு படிக்காமல் பாடத்தான் பிடித்தது மகாலிங்கத்திற்கு காரணம் அவரது குடும்பமே கனபாடிகள் குடும்பம்தான். வாய்ப்பாட்டு கற்றுக் கொண்ட மகாலிங்கம், ராஜரத்தினம் பிள்ளையின் பாய்ஸ் நாடக கம்பெனியில் பாடகராக வேலைக்குச் சேர்ந்தார். சில வேடங்களில் நடிக்கவும் செய்தார். ஒரு முறை நாடகத்தில் மகாலிங்கத்தின் நடிப்பை பார்த்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "வாப்பா உன்னை சினிமாவில் நடிக்க வைக்கிறேன்" என்று தனது ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
புகழ் தந்த ஸ்ரீவள்ளி
1937ம் ஆண்டு நந்தகுமார் படத்தில் பால்ய வயது கிருஷ்ணராக நடித்தார். அந்த படம் ஹிட்டானதும் அதன் பிறகு கிருஷ்ணர் வேடம் என்றால் மகாலிங்கத்தை தேட ஆரம்பித்தார்கள். பக்தபிரகலாதன், பரசுராமன் உள்பட பல படங்களில் கிருஷ்ணனாகவே நடித்தார். முருகனாக நடித்த ஸ்ரீவள்ளிதான் டி.ஆர்.மகாலிங்கத்தின் புகழுக்கு மகுடம் சூட்டியது. 52 வாரங்கள் ஓடி அந்தப் படம் சாதனை படைத்தது. தியாகராஜ பாகவதருக்கு பிறகு பாடி நடிக்கும் நடிகர்களில் முதன்மையாக திகழ்ந்தது டி.ஆர்.மகாலிங்கம்தான். நடிப்பில் தியாகராஜபாகவதரின் மறு உருவமாகவும், பாடலில் பி.யூ.சின்னப்பாவின் வாரிசாகவும் சினிமாவில் வலம் வந்தார்.
புகழின் உச்சியில் இருக்கும்போது தன் இஷ்டப்படி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அமையாததால் தானே சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்தார். மோகசுந்தரம், சின்னதுரை, மச்சரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். அத்தனையும் தோல்வி அடையவே நடித்து சம்பாதித்த அத்தனை செல்வத்தையும் இழந்தார். பிறகு சினிமா மீது வெறுப்பு கொண்டு மீண்டும் நாடகத்திற்கே திரும்பினார். திரைப்படங்களுக்கு நிகராக நாடகங்கள் நடத்தி அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.
கவியரசர் கண்ணாதாசன் தனது மாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்தப் படம் மாபெரும் பெற்றிபெற மீண்டும் சினிமாவில் வெற்றிகரகமாக வலம்வரத் தொடங்கினார். திருவிளையாடல் உள்ளிட்ட பல புராண படங்களில் மீண்டும் நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி மீண்டும் மேடைதோறும் பாடி மக்களை மகிழ்வித்தார். கடைசி வரை மக்களை தன் இனிய குரலால் தாலாட்டிய டி.ஆர்.மகாலிங்கம் 1978ம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் நிரந்தரமாக தூங்கிவிட்டார். சினிமாவை துச்சமென மதித்து நாடகத்தை உயிராக நினைத்து வாழ்ந்த உத்தம கலைஞன் அவர்.