‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என அழைக்கப்பட்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவருக்கு இன்று(ஜூன் 24ம் தேதி) 87வது பிறந்தநாள். சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வருகிறார் எம்.எஸ்.வி. இந்தசூழலில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக சென்னையில் உள்ள போர்டிஸ் (முன்னாள் மலர் மருத்துவமனை)ல் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர்.அனந்த பத்மநாபனின் கண்காணிப்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட எம்.எஸ்.வி., கடந்த இரு தினங்களாக ஐசியூ.வில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இதுப்பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது... எம்.எஸ்.விக்கு 87வயதாகிறது. அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. அதோடு மூச்சு திணறலும் ஏற்பட்டது. முதுமையின் காரணமாக வருவது தான் இந்த மூச்சு திணறல். தற்போது அவர் நலமாக இருக்கிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இருதினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் சினிமாவின் இசை அரசராகவும், மெல்லிசை மன்னராகவும் வலம் வந்த எம்.எஸ்.விக்கு இன்று 87வது பிறந்தநாள். இந்தநாளில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது கோடான கோடி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எம்.எஸ்.வி., பற்றிய சில தகவல்கள்...
* 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி., இவரது முழுப்பெயர் மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். இதை தான் இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சுருக்கி கொண்டார்.
* 1952-ம் ஆண்டு என்.எஸ்.கிருஷ்ணன், தனது படமான பணம் படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு வாய்ப்பு அளித்தார்.
* 1952ம் ஆண்டு பணம் படத்தில் துவங்கிய இந்த இரட்டையர்களின் வெற்றி கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர்.
* தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் விஸ்வநாதன்.
* ஒரு பாடலுக்கு 3 இசை கருவியையும், 300 இசை கருவியையும் பயன்படுத்திய ஒப்பற்ற இசையமைப்பாளர்.
* நடிகர் சிவாஜி கணேசன் அவர்களால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை பெற்று இன்று மெல்லிசை மன்னராக வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.எஸ்.வி.
* காதலா காதலா, காதல் மன்னன், தகதிமிதா, அன்பே வா (புதியது), மஹாராஜா, தில்லு முல்லு (ரீ-மேக்) போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.
* இவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் உள்ளத்தில் நல்ல உள்ளம்(கர்ணன்), மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம்(சுமைதாங்கி), வசந்தத்தில் ஓர் நாள்(மூன்று தெய்வங்கள்), எங்கே நிம்மதி(புதிய பறவை), அவளுக்கு என்ன அழகிய முகம்(சர்வர் சுந்தரம்), அதோ அந்த பறவை (ஆயிரத்தில் ஒருவன்) உள்ளிட்ட காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்கள் தந்தவர் எம்.எஸ்.வி.,
* இளையராஜாவுடன் இணைந்து மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஷ்வ துளசி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
* எம்.எஸ்.வி., இசையமைத்தது மட்டுமல்லால் 500 பாடல்கள் வரை பாடியுள்ளார். அதில் 200 பாடல்கள் பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.
* கலைமாமணி, பிலிம்பேர், வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான கவுரவங்கள் இவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், தேசிய விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட எதுவும் இதுவரை வழங்காதது துரதிர்ஷ்டமே.