தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரீட்சை நேரத்தில் மார்ச் மாதம் வெளியான படங்களில் சில எதிர்பாராத தோல்விகளும், சில எதிர்பாராத வெற்றிகளும் இருந்தன. பரீட்சைகள் முடிந்து ஏப்ரல் மாதம் பிறந்ததுமே திரையுலகத்தைப் பொறுத்தவரை கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது.
பொதுவாக ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் கோடை விடுமுறையையும் கொண்டாடும் விதத்தில் புத்தம் புது தமிழ்ப் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், கடந்த ஓரிரு வடங்களாக திரையுலகிலும் பல வழக்கங்கள் மாறிவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியன்றே புதிய படத்தை வெளியிட்டு கோடை விடுமுறையை ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று மே 31ம் தேதியுடன் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளும் திறந்துவிட்டார்கள். இந்த ஏப்ரல், மே இரண்டு மாத காலத்தில் வெளியான படங்களின் பட்டியல்...
ஏப்ரல் 1
கொம்பன்
ஏப்ரல் 2
நண்பேன்டா, சகாப்தம்
ஏப்ரல் 10
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, துணை முதல்வர்
ஏப்ரல் 17
ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2
ஏப்ரல் 24
கங்காரு, யூகன், இரிடியம், நீதானே என் கோவில்
மே 1
வை ராஜா வை
மே 2
உத்தம வில்லன்
மே 8
இந்தியா பாகிஸ்தான், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் நற்பணி மன்றம், நீயும் நானும், காதல் இலவசம்
மே 15
36 வயதினிலே, புறம்போக்கு என்கிற பொதுவுடமை
மே 22
டிமான்ட்டி காலனி, கமரகட்டு, திறந்திடு சீசே, சிறுவாணி, நண்பர்கள் நற்பணி மன்றம், விந்தை
மே 29
மாஸ், இருவர் ஒன்றானால், சோன்பப்டி
இந்த ஆண்டின் கோடை விடுமுறை 'கொம்பன்' படம் மூலம் கொண்டாட்டமாகவே ஆரம்பித்தது. சாதி மோதலை உருவாக்கும் படமாக இருக்கும் என்று சிலர் பிரச்சனையைக் கிளப்ப, வழக்கு, திரையுலகினரின் கூட்டுக் கூட்டம் என பரபரப்பைக் கிளப்பி சொன்ன தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே படத்தை ஏப்ரல் 1ம் தேதியே வெளியிட்டு வெற்றியும் பெற்றார்கள்.
'கொம்பன்' படத்திற்குப் போட்டியாக வெளிவந்த உதயநிதி ஸ்டாலினின் மூன்றாவது படமான 'நண்பேன்டா' மீண்டும் ஒரு வழக்கமான காதல் படமாகவே அமைந்து மிக மிகச் சுமாரான வெற்றியைப் பெற்றது. இனி வரும் படங்களில் தன் கதாபாத்திரத்தையும், கதையையும் மாற்றிக் கொண்டால்தான் உதயநிதி தாக்குப் பிடிப்பார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
சகாப்தம்
திரையுலகின் அடுத்த வாரிசாக அறிமுகமான விஜயகாந்தின் வாரிசு சண்முகப்பாண்டியன் நடித்து வெளிவந்த 'சகாப்தம்' படம் அந்தோ, பரிதாபம் என பேசப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு படத்திலா விஜயகாந்த் தன் மகனை அறிமுகப்படுத்துவார் என கேள்விகள் பலமாக எழுந்தன.
தான் நடித்த படத்தையே வெளிவர விடாமல் தடுக்க முயற்சித்த பாபி சிம்ஹா என செய்திகளில் அடிபட்டு 'சென்னை உங்களை வரவேற்கிறது' படம் வெளிவந்தது. கூடவே வந்த 'துணை முதல்வர்' முதலுக்கும் சேர்த்து மோசத்தைக் கொடுத்த படமாக அமைந்தது.
மணிரத்னத்திற்கு மீண்டும் ஒரு புத்துணர்வு
ஏப்ரல் 17ம் தேதி வெளிவந்த இரு படங்களான 'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' ஆகிய படங்களில் 'காஞ்சனா 2' வசூல் சாதனை புரிந்த படமாக அமைந்துவிட்டது. இன்று வரை பல ஊர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 60 கோடிக்கும் மேல் படம் வசூலித்து படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது. கோடை விடுமுறையின் உண்மையான கொண்டாட்டம் இந்த 'காஞ்சனா 2'வுக்குத்தான் என்கிறார்கள்.
தனது தொடர் தோல்விகாளல் துவண்டு போயிருந்த மணிரத்னத்திற்கு புத்துணர்வு கொடுத்த படமாக 'ஓ காதல் கண்மணி' படம் அமைந்தது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி வெளிவந்த நான்கு படங்களில் ஒரு படம் கூட ஓடிய படமாக அமையவில்லை. சாமி இயக்கத்தில் வெளிவந்த 'கங்காரு' திரைப்படம் மட்டுமே கொஞ்சம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது, ஆனால், அதுவும் பெரிதாக கவரவில்லை.
ஏப்ரலில் - 27 சதவீதம் மட்டுமே வெற்றி!
ஏப்ரல் மாதம் வந்த 11 படங்களில் 'காஞ்சனா 2, கொம்பன், ஓ காதல் கண்மணி' வெற்றிப் படங்களாக அமைந்தன. ஏப்ரல் மாதத்திய வெற்றி வெறும் 27 சதவீதம் மட்டுமே.
ஐபிஎல் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்த சமயத்தில் மே முதல் வாரங்களில் வெளிவந்த படங்கள் ஐபிஎல் போட்டியாலும், வெயில் சூட்டாலும் கொஞ்சம் பாதிக்கப்பட்டன. அதே சமயம் வெளிவந்த படங்களிலும் நம்மைக் குளிர வைக்கும் விஷயங்களும் பெரிதாக இல்லை.
வை ராஜா வை
தனுஷின் மனைவியும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இரண்டாவது படமாக வெளிவந்த 'வை ராஜா வை' படத்தை அவர்களே வெற்றிப் படம், வெற்றிப் படம் என இன்று வரை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். படத்தை அவர்கள் மார்க்கெட்டிங் செய்த அளவிற்கு மக்கள் மனதில் படம் இடம் பெறவில்லை என்பதே உண்மை.
ஏமாற்றிய கமல்
வருமா, வராதா என ஏங்க வைத்து பல பேச்சுகள், பல பஞ்சாயத்துகள் என ஒரு வழியாக சொன்ன தேதிக்கு ஒரு நாள் தாமதமாக கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படம் வெளிவந்தது. வழக்கம் போல ரசிகர்களைக் கவராத தனக்கு மட்டுமே பிடிக்கும்படியான படத்தை கமல்ஹாசன் கொடுத்துவிட்டார் என்று பெருவாரியாக விமர்சனம் எழுந்தது.
மே 8ம் தேதி வெளிவந்த நான்கு படங்களில் 'இந்தியா பாகிஸ்தான்' படம் மட்டுமே கொஞ்சம் கவனத்தை ஈர்த்தது. தன்னுடைய முந்தைய இரண்டு படங்களைத் த்ரில்லராகக் கொடுத்து வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, தேவையேயில்லாமல் நகைச்சுவை படத்தைக் கொடுத்து தடுமாறிவிட்டார்.
ஜோதிகாவுக்கு ஒரு ரீ-என்ட்ரி
மே 15ல் வெளிவந்த படங்களில் '36 வயதினிலே' படம் முன்னாள் முன்னணி ஹீரோயின் ஜோதிகாவின் ரீ-என்டரியாக அமைந்தது. மல்டிபிளக்ஸ்களில் நல்ல வரவேற்பையும் மற்ற ஊர்களில் சுமாரான வரவேற்பையும் பெற்ற இந்தப் படம் அதிகமான தயாரிப்புச் செலவு இல்லாததால் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றியைப் பெற்றது என படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனமே அறிவித்துவிட்டது.
விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற புறம்போக்கு
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்த படம், நல்ல கருத்தைச் சொன்ன படம் என்று விமர்சன ரீதியில் பாராட்டு பெற்ற படம் வசூல் ரீதியில் ஏன் பாராட்டைப் பெறவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக அமைந்தது.
யாரும் எதிர்பார்க்காத ''டிமான்ட்டி'' வெற்றி
மே 22ம் தேதி வெளிவந்த ஆறு படங்களில் இன்னுமொரு பேய்ப்படமா என அலுப்பைத் தந்த 'டிமான்ட்டி காலனி' படம் எதிர்பாராத வெற்றியைக் கொடுத்துள்ளது. வெளிவருவதற்கு முன்னர் வரை அந்தப் படம் பற்றி பெரிதாக எந்த செய்திகளும் வெளிவராத நிலையில் இந்தப் படம் வெற்றி பெற்றது ஆச்சரியமான ஒன்று. கூட வந்த மற்ற படங்கள் இந்த ஆண்டின் படங்களின் எண்ணிக்கையில் மட்டும் சேர்ந்தன.
கோடை விடுமுறையில் கடைசியாக வந்த மாசு
கோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில், பள்ளிகள் திறக்க சில நாட்களே இருக்கும் நிலையில் வந்த படம்தான் 'மாசு என்கிற மாசிலாமணி'. பெரிதாக ஓபனிங் இல்லை என்று சொல்லப்பட்டாலும் கடந்த இரண்டு நாட்களாக இந்தப் படம் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்து போவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், விமர்சன ரீதியாக இந்தப் படம் நிறையவே குட்டுப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்துடன் போட்டி போட்டு வந்துள்ள 'இருவர் ஒன்றானால்' வித்தியாசமான முயற்சி, ஆனால், படத்தைப் பற்றி வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்னரே படம் பற்றி மக்களுக்குத் தெரிய வந்தது படத்திற்கு மிகப் பெரும் மைனஸ் பாயின்ட்.
மே மாதத்தில் வெளிவந்த 17 படங்களில் எந்தப் படமுமே வசூல் ரீதியாக மிகப் பெரும் வெற்றியைப் பெறவில்லை. 'மாசு' படத்தின் உண்மை நிலவரம் இன்னும் சில நாட்களில்தான் தெரிய வரும்.
ஆக, மொத்தமாக கோடை விடுமுறையில் வந்த 28 படங்களில் “கொம்பன், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 36 வயதினிலே, டிமான்ட்டி காலனி' ஆகிய படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக குறிப்பிட்டுச் சொல்லும்படங்களாக அமைந்துள்ளன.
100-ஐ நெருங்குகிறது
இந்த மே மாதம் முடிய 2015ம் ஆண்டின் ஐந்து மாதங்களில் இதுவரை 88 படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் அதாவது அரையாண்டுக்குள் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொட்டுவிடும். கடந்த ஆண்டைப் போலவே இந்த 2015லும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம்.