‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவின் ஆச்சி என்று எல்லோராலும் அழைப்படுபவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே காமெடியில் கொடி கட்டி பறந்த நடிகை என்றால் அது மனோரமா என்றே சொல்லலாம். காமெடி மட்டும் அல்லாது பல்வேறு குணச்சித்திர வேடங்களில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். மனோரமா ஆச்சிக்கு இன்று(மே 26ம் தேதி) 72வது பிறந்தநாள். மனோரமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உடல்நலக் குறைவால் கடந்தாண்டு சற்று சோர்ந்து போய் இருந்தார். இந்தாண்டு மிகவும் உற்சாகமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். சினிமாவுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பு, முதல்வர் ஜெயலலிதாவுடனான நட்பு உள்ளிட்ட பல விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமின்றி பாட்டும் பாடினார்.
அவர் பேசியதாவது, நான் நலமாக இருக்கிறேன். உடல்நிலை நன்றாக உள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அத்தனை உள்ளங்களுக்கும் என பணிவு கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது ஒவ்வொரு பிறந்தநாளுமே மறக்க முடியாதது தான். உடல்நலம் சரியில்லாமல் போனதால் முன்பு போல் படங்களில் நடிக்கமுடியவில்லை. 12-13 வயதில் நாடகங்களில் நடிக்க தொடங்கினேன். கவிஞர் கண்ணதாசனால் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. அப்போது முதல் நடிக்க ஆரம்பித்தேன்.
பாட்டினால் தான் சினிமாவில் எனக்கு வாய்ப்பே கிடைத்தது. நான் குழந்தையாக இருக்கும் போது நான் பாடிய பாட்டை கேட்டு என் அம்மா என்னை உற்சாகப்படுத்தினார். அப்படியே மேடை நாடகங்களில் பாடினேன். நான் இந்தளவுக்கு வளர்ச்சி பெற பத்திரிகையாளர்களாகிய நீங்களும் ஒரு காரணம். அந்தக்காலத்திலேயே இம்மாத நட்சத்திரம் என்று என்னை பாராட்டி பெருமைப்படுத்தினார்கள்.
இப்போதெல்லாம் சினிமாவில் நடிப்பது சுலபமாகிவிட்டது. ஆனால் அந்தக்காலத்தில் நடிப்பதெல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் நகைச்சுவை காட்சியில் நடிப்பது சுலபம் கிடையாது. மக்கள் தங்களிடத்தில் உள்ள கவலைகளை எல்லாம் மறந்து சிரிக்க வேண்டும் என்று தியேட்டருக்கு வருகிறார்கள், அவர்களை சிரிக்க வைப்பது கொஞ்சம் சிரமமான வேலை தான். அதனால் தான் நிறையபேர் நகைச்சுவை காட்சிகளில் நடிக்க பயப்படுகிறார்கள். சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகளை தமிழக அரசு கொடுப்பது போன்று நகைச்சுவைக்கும் விருது கொடுக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசுகையில், அவரை நாங்கள் அம்மு என்று தான் அழைப்போம். அவர் இன்னும் நீண்ட காலம் நல்ல ஆயுளோடு இப்போது இருப்பது போன்று எப்போதும் வாழ வேண்டும். இறைவன் அவருக்கு துணை நிற்பார். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை நேரடியாக போய் பார்க்க முடியவில்லை. டிவியில் பார்க்கும்போது மனதார வாழ்த்துவேன்.
மனோரமா பேராண்டி என்ற படத்தில் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். தொடர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டபோது, உடல்நலம் சரியில்லாததால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நடிப்பேனா.? என்பதை ஆண்டவன் தான் முடிவு செய்யணும். அனைவருக்கு என் நன்றி!
இவ்வாறு மனோரமா கூறினார்.