தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
தயாரிப்பு - கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி, உண்டர்பார் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள் - வெற்றிமாறன், தனுஷ்
வெளியீடு - ஃபாக்ஸ் ஸ்டார்
எழுத்து, இயக்கம் - மணிகண்டன்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு - ரமேஷ், விக்னேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபு ஆண்டனி மற்றும் பலர்.
சிறுவர்களை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வமான ஒன்று. இந்தப் படத்தை இரண்டு ஏழைச்சிறுவர்களை மையப்படுத்தி ஒரு யதார்த்தமான படமாகக் கொடுத்து இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் மணிகண்டன்.
இந்தத் திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக பிரீமியர் பிரிவில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு திரையிடப்பட்டது. அடுத்து ரோம் திரைப்பட விழா, துபாய் சர்வதேச திரைப்பட விழா, பிரிஸ்பேன் ஏசியா பசிபிக் திரைப்பட விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா, கோல்ட் கோஸ்ட் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு திரையிடப்பட்டது.
2014ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. அதோடு படத்தில் நடித்துள்ள ரமேஷ், விக்னேஷ் இருவரும் 2014ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன், இதற்கு முன் திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக இருந்தவர். 2010ம் ஆண்டு வின்ட் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். தான் இயக்கிய முதல் திரைப்படமான காக்கா முட்டை படத்திலேயே உலக அளவிலான கவனத்தையும், இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரமான தேசிய விருதையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
ரமேஷ், விக்னேஷ் இருவரும் அண்ணன் தம்பிகள், அம்மா, பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டு கேட்கும் எதையுமே அவர்கள் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷ், வாங்கித் தருவதேயில்லை. ஒரு முறை அவர்கள் டிவி ஒன்று வேண்டும் என்று கேட்க, அவர்கள் அம்மா கஷ்டப்பட்டு ஒரு பழைய டிவியை வாங்கித் தருகிறார்கள். ஒரு நாள் டிவியில் பீட்சா ஒன்றின் விளம்பரத்தை ரமேஷும், விக்னேஷும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அந்த பீட்சாவை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால், அதை வாங்கி சாப்பிட காசு வேண்டும். அப்படி பீட்சா சாப்பிட ஆசைப்பட்டவர்களின் ஆசை நிறைவேறியதா, அதற்காக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்திற்கான கதையை தன் மகனுடன் பீட்சா சாப்பிடச் சென்றிருந்த போது அங்கு காத்துக் கொண்டிருந்த போது, சில சிறுவர்கள் பீட்சா வாங்க வந்திருந்தார்கள். சிறுவர்கள் அப்படி வருவதற்குக் காரணமாக விளம்பரங்கள்தான் இருக்கிறது. ஏழைச் சிறுவர்கள், வாங்க முடியாத அவர்கள் அதை வாங்க ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என நான் யோசித்ததுதான் இந்தப் படத்தின் கதை உருவாகக் காரணமாக இருந்த்து என்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை, சிறுவர்களை மையப்படுத்திய ஒரு கதையில் சித்தரித்ததால் இந்தப் படத்திற்கு சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. படத்தில் நடித்த இரு சிறுவர்களுமே நடித்திருக்கிறோம் என்று தெரியாத அளவிற்கு மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளனர். அதுதான் தேசிய விருது தேர்வுக் குழுவினரை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரமேஷ், விக்னேஷ் இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளனர்.
இந்தப் படத்தில் சிறுவர்களுக்கு அம்மாவாக வளர்ந்து வரும் இளம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். “ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், விரைவில் வெளிவர உள்ள இடம் பொருள் ஏவல் படங்களில் நாயகியாக நடித்துள்ளவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தில் அவருடைய தோற்றத்தைப் பார்த்தால் அவ்வளவு ஆச்சரியமாக உள்ளது. ஐஸ்வர்யாவா இது என அதிசயப்பட வைக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் படத்தைப் பற்றி படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்றுள்ள அனைவருமே மிகவும் பெருமையுடன் அவர்களது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
“இந்தப் படத்துக்காக கதை எழுதும் போது எல்லாருக்கும் பிடிச்ச படமா எடுக்கணும்னு ஆசை இருந்தது. முதல் படம் எப்படியாவது தயாரிப்பாளரைத் தேடிக் கண்டு பிடிச்சிடலாம். ஆனால், உனக்கு பிடிச்ச மாதிரி எடு, உங்களுக்கு இது ஓகேன்னா, ஓகேதான்னு தயாரிப்பாளர்கள்கிட்ட இருந்து கேக்கறது ரொம்ப கஷ்டம். வெற்றிமாறன் ஸாரும், தனுஷ் ஸாரும் எனக்குக் கொடுத்த சுதந்திரத்துக்குதான் நான் நன்றி சொல்லணும்.
இந்தப் படத்துல நடிச்ச பசங்களை முதல்ல ஒரு மாதிரிக்காகத்தான் தேர்ந்தெடுத்தேன், ஆனால், அவங்களே நடிப்பாங்கன்னு நான் நினைக்கவேயில்லை. இந்தப் படத்தோட கதையும், இந்தப் பசங்களோட நிஜ வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்துல கனெக்ட் ஆகியிருக்கு. இந்தப் படமும், பசங்களும் கண்டிப்பாக உங்க மனசுல இடம் பிடிச்சிடுவாங்க,” என இயக்குனர் மணிகண்டன் தெரிவிக்கிறார்.
காக்கா முட்டை படம் ரிலீசுக்கு முன்னாடியே எங்களுக்குப் பெருமை சேர்த்துக்கிட்டிருக்கிற படம். இந்தப் படத்தைத் தயாரிச்சது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பெருமை. இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டை பத்து பக்கம்தான் படிச்சேன். உடனே இந்தப் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணேன். இந்தப் படத்துல வர்ற சின்ன காக்கா முட்டைதான் நான், பெரிய காக்கா முட்டை எங்க அண்ணன் செல்வராகவன்.
எங்களோட லைஃபை அந்த ஸ்கிரிப்ட் பேப்பர்ல அப்படியே பார்த்தேன். படத்துல வர்றா மாதிரியே நாங்க சுத்தியிருக்கோம், அப்படியே வாழ்ந்திருக்கோம். படத்துல பசங்க பண்ண பாதி விஷயங்களை நாங்க பண்ணியிருக்கோம். ஸ்கிரிப்ட்டை ரொம்ப ரிலேட் பண்ணிக்க முடிஞ்சது, எமோஷனலா இருந்தது. இந்தப் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். படத்துல நடிச்ச இந்த இரண்டு பசங்களும் எங்களுக்கு ரொம்பப் பெரிய பெருமையை சேர்த்திருக்காங்க.
என்னைக்காவது ஒரு நாள் இவங்க அளவுக்கு நான் யதார்த்தமா நடிச்சேன்னா, ரொம்ப பெருமைப்பட்டுக்குவேன். அந்த அளவுக்கு இவங்க இரண்டு பேரும் யதார்த்தமா நடிச்சிருக்காங்க. காக்கா முட்டை படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் ஏற்கெனவே லாபகரமான ஒரு தயாரிப்பாளராதான் இருக்கேன். இந்தப் படத்தை என்கிட்ட கொண்டு வந்த வெற்றிமாறனுக்கும், அழகா இயக்கிக் கொடுத்த மணிகண்டனுக்கும், சிறப்பா நடிச்சிக் கொடுத்தவங்களுக்கும் என் நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்,” எனத் தெரிவித்தார் தனுஷ்.
“இந்தப் படத்துல நடிச்ச பசங்களுக்கு அம்மாவா நான் நடிச்சிருக்கேன். நிறைய பேர் வந்து இந்த கேரக்டரை பண்ணாதீங்க, ஹீரோயினா வளர்ந்துட்டு வர்றீங்க, இதை மாதிரி கேரக்டர்லா பண்ண வேண்டாம்னு சொன்னாங்க. இதை நான் ஏன் பண்ணக் கூடாது, பண்ணால் என்ன நடக்கும்னு கேள்வி கேட்டுக்கிட்டேன். அம்மா கேரக்டர்ல பண்ணிட்டீங்கன்னா அப்புறம் அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள்தான் பண்ணனும்னு சொன்னாங்க. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு, அதனால என்னோடத் திறமையை நிரூபிக்கணும்னு நான் நினைச்சேன். இந்தப் படத்துல நடிச்சதுக்கு நான் மகிழ்ச்சியாவும், பெருமையாவும் நினைக்கிறேன். மணிகண்டன் சார் இயக்கத்துல நடிச்சது, இன்னும் நான் எத்தனை படம் ஹீரோயினா நடிச்சால் கூட என்னோட கேரியர்ல இந்தப் படம் மறக்க முடியாத ஒரு படமா இருக்கும்,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றி மாறன் பேசும் போது, “மணிகண்டனோட ஒரு குறும்படத்தைப் பார்த்துட்டு, ஏதாவது ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கன்னு சொன்னேன். அப்ப அவர் இரண்டு ஐடியா சொல்லியிருந்தாரு, இந்த ஐடியா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உலக அளவில கவனத்தை ஈர்க்கக்கூடிய திரைப்படங்களைப் பண்ணணும்னு ரொம்ப நாளாவே எனக்கு ஆசை இருந்தது. இந்தப் படத்தோட கதை என் வாழ்க்கையிலயும் நடந்த விஷயம்தான், இந்தப் படத்தோட கதையைப் பத்தி தனுஷ் கிட்ட சொன்ன போது, ஸ்கிரிப்ட் அனுப்பச் சொன்னார். பத்து சீன் மட்டும் படிச்சிட்டு, படம் பண்ணலாம்னு சொன்னாரு. இந்தக் கதை அவருடைய வாழ்க்கையிலயும் நடந்த விஷயமா இருந்தது. நம்ம எல்லாராலேயும் அடையாளப்படுத்திக்கக் கூடிய படமா இருந்ததுன்னா கண்டிப்பா இன்டர்நேஷனல் லெவல்ல இந்தப் படத்தைப் பார்க்க வைக்க முடியும்கற நம்பிக்கை எனக்கு இருந்தது.