'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவும், அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று. காங்கிரஸ் கட்சி நாட்டு விடுதலைக்காக நாடகத்தை பயன்படுத்திக் கொண்டதைப்போல, திராவிட கட்சிகள் தங்கள் கட்சி வளர்ச்சிக்காக சினிமாவை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதிலிருந்து சினிமாவும், அரசியலும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா என 5 முதல்வர்கள் சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள். அல்லது சினிமா உலகோடு தொடர்புடையவர்கள். விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர், குஷ்பு, ரஜினி, விஜய், விஷால், கார்த்திக் என முதல்வர் இடத்துக்காக வெயிட்டிங் லிஸ்ட்டில் நிறைய சினிமாகாரர்கள் இருக்கிறார்கள்.
பிரிக்க முடியாத சினிமாவும், அரசியலும்...!
அரசியல் சினிமாவை பயன்படுத்திக் கொண்டதைப்போல, சினிமாவும் அரசியலை பயன்படுத்திக் கொண்டது. அரசின் மீது மக்களுக்கு உள்ள கோபத்தை பயன்படுத்தி பல அரசியல் சினிமாக்கள் வெளிவந்து வசூலை குவித்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியின் பிரச்சாரங்களுக்கு சென்று கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள் பணம் சம்பாதித்தார்கள். நாட்டின் எத்தனையோ நலிந்த தொழில்கள் இருந்தபோதும் சினிமாவுக்கு அபிரிமிதமான சலுகைகளை அரசு வழங்கியது. இப்படி ஒன்றையன்று சார்ந்து இருந்தது. இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து லைட் மேன் சங்கம் வரை ஆளும் கட்சிகாரர், எதிர்கட்சிகாரர் என்கிற அடையாளம் உண்டு. இப்படி சினிமாவும், அரசியலும் நகமும் சதையுமாக இருக்கும் நிலையில் இப்போது சமீபகாலமாக மூன்றாம் தொங்கு சதையாக சினிமாவுக்குள் ஜாதியும், மதமும் நுழைய ஆரம்பித்திருக்கிறது.
சினிமாவில் புற்றுநோய் போல பரவும் ஜாதி
சில நட்சரத்திரங்கள் தங்களை இந்த ஜாதி என்று வெளிப்படையாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ஜாதி அமைப்புகளின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள். ஏன் சில நடிகர்கள் ஜாதி அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார்கள். சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதிலும், வாய்ப்புக்கு உதவுவதிலும் திரைமறைவில் ஜாதிகளின் ஆதிக்கம் நிறைய இருக்கிறது. இப்படி சினிமாவுக்குள் புற்று நோய் போல் பரவியிருக்கும் ஜாதி இப்போது சினிமாவுக்கு வெளியே நின்றும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறது.
80-90களில் யாரும் தடுக்கவில்லை
அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த நாயகன் காதலுக்காக அந்த ஜாதி அடையாளத்தை அறுத்து எரிந்தபோது எந்த ஜாதியும் பொங்கி எழவில்லை. ஹீரோயின் மத அடையாளத்தை அறுத்து எறிந்தபோது அந்த மதமும் கோபம் கொள்ளவில்லை. சிறை படத்தில் உயர் ஜாதியை சேர்ந்த நாயகி, தன்னை கெடுத்த இன்னொரு ஜாதிக்காரனோடு வாழ்ந்ததை எந்த ஜாதியும் கண்டுகொள்ளவில்லை. பாரதிராஜா இயக்கிய மண் வாசனை, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை படங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களின் வாழ்வியிலை சொன்னது. குறிப்பாக முதல் மரியாதை ஒரு ஜாதியின் பெரிய மனிதன், ஒரு தாழ்த்தப்பட்டது என கருதப்படும் ஜாதி பெண்ணை நேசிப்பதான கதை. எந்த ஜாதி அமைப்பும் அதனை எதிர்க்கவில்லை.
80 மற்றும் 90களில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் உயர்ஜாதி பெண்ணை மற்ற ஜாதி ஆண்கள் காதலிப்பதாகத்தான் வந்தது. அந்த பெண்ணும் ஜாதியின் ஆச்சாரம் அனுச்சாரங்களை மீறி அவர்களை கைபிடிப்பதாகத்தான் படங்கள் வந்தது. அதை யாரும் தட்டிக் கேட்டதில்லை. கே.பாலச்சந்தர் ஒரு உயர்ஜாதி பெண் பாலியல் தொழில் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றுவதாக எடுத்த அரங்கேற்றம் படத்தை யாரும் தடுக்கவில்லை. இப்படி மாற்றங்களை ஏற்றுக் கொண்டும், சகிப்புத்தன்மையோடும் படைப்புகளை ஏற்றுக் கொண்ட சமூகத்தில்தான் இப்போது அந்த படம் எங்கள் ஜாதியை குறை சொல்கிறது, இந்த ஜாதியை உயர்த்துகிறது என்று சில ஜாதி அமைப்புகள் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது.
ஏன்.? எதற்காக...?
கமல் நடித்த சண்டியர் படத்தின் தலைப்புக்கே துள்ளி குதித்தவர்கள். அதே தலைப்பில் சமீபத்தில் ஒரு படம் வந்தபோது கண்டுகொள்ளவே இல்லை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அவர்கள் பிரச்சினை தலைப்பு அல்ல... கமல். சமீபத்தில் வெளிவந்த கொம்பன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள், அதைவிட ஜாதி அடையாளத்தோடு வந்த திலகர் படம் கண்டுகொள்ளப்படவில்லை என்பது இன்னும் கவனிக்கத்தக்கது. படத்தின் கதை தெரியாது, வசனம் தெரியாது, அப்படி இருந்தும் படத்திற்கு எதிராக போராட்டங்கள், அறிக்கைகள், வழக்குகள். இவையெல்லாம் ஏன்? இதனால் யாருக்கு என்ன லாபம் என்பது முக்கியமானது.
லெட்டர்பேர்டு அமைப்புகள்
தமிழ்நாட்டில் லெட்டர்பேர்டு ஜாதி அமைப்புகள் மட்டும் ஆயிரக் கணக்கில் இருக்கும். இவர்களுக்கு விளம்பர வெளிச்சம் கிடையாது. அவர்களுக்கு தங்கள் அமைப்பின் முகவரியும், தங்கள் முகமும் வெளியில் தெரிய வேண்டுமானால் அதற்கு சினிமாவை சீண்ட வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பெருகி விட்ட விஷூவல் மீடியாக்களுக்கு 24 மணி நேரமும் செய்தி தீனி தேவைப்படுகிறது. மக்கள் சினிமா தொடர்புடைய செய்திகளை சற்று உற்றுக் கவனிப்பதால். சினிமா தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் அதனை முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். மீடியாக்களின் இந்த பலவீனம்தான் லெட்டர்பேடு அமைப்புகளின் பலம்.
சில சினிமாக்காரர்களின் மலிவான விளம்பரம்
இது ஒருபுறம் இருக்க, சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஒரு பிரச்னை வலிந்து தேடிக் கொள்வதும் கசப்பான உண்மை. வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய காட்சிகளை வைப்பது. அதற்கு வரும் எதிர்ப்பு மூலம் விளம்பரம் தேடிக்கொண்டு பிறகு அந்த காட்சியை நீக்கி வெளியிடுவார்கள். இது ஒரு மலிவான விளம்பர தந்திரம்.
கேள்விகுறியாகும் சினிமா எதிர்காலம்.?!
ஒரு படத்தை மக்கள் பார்க்கலாமா? வேண்டாமா என்பதை தீர்மானிப்பது தணிக்கை குழு. அரசு அதிகாரிகளுடன் பலதரப்பட்ட சமூக பிரநிதிதிகள் தணிக்கை குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்தை மக்கள் பார்க்கலாம். இந்த வயதுடையவர்கள் பார்க்கலாம் என்று சான்று தருகிறார்கள். அதையும் தாண்டி ஒரு படம் வெளிவரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அரசோ, காவல்துறையோ கருதினால் நீதிமன்றம் மூலம் அந்த படத்தை தடுக்கலாம். ஆனால் யாரோ ஒரு சிலர் நினைத்தால் பலகோடி ரூபாய் முதலீட்டில் தயாரான படத்தை தடுக்கலாம் என்ற நிலை தொடர்ந்தால் அது சினிமாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், பிரச்னை செய்பவர்களை தனியாக சந்தித்து அவர்களை உரிய முறையில் கவனித்து சமாதானம் செய்து கொள்ளும் போக்கை கைவிட்டு உரிமைக்காக போராட வேண்டும். இல்லாவிட்டால்; உரிய கவனிப்புக்காகவே பிரச்னை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
வருமுன் காப்பதே நலம் என்பதை சினிமா புரிந்து கொள்ள வேண்டும்!