'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கொம்பன் படத்திற்கு எழுந்துள்ள பிரச்னையால், படத்தை ஒருநாள் முன்னதாகவே அதாவது நாளை ஏப்ரல் 1ம் தேதியே ரிலீஸ் செய்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை குட்டிபுலி இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற 2ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தடை கோரி வழக்கு
இந்நிலையில், கொம்பன் படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு கொம்பன் படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகளுக்கு படம் திரையீடு
அதன்படி இன்று(மார் 31ம் தேதி) காலை நீதிபதிகள் அடங்கிய குழுவினருடன் கிருஷ்ணாசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் கொம்பன் படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நீதிபதிகள் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது. நீதிபதிகள் படத்தை பார்த்து உரிய அறிக்கையை சென்னை ஐகோர்ட் மூலமாக மதுரை ஐகோர்ட் கிளைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒன்று திரண்டு திரையுலகம்
இதுஒருபுறமிருக்க கொம்பன் படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் அதிகரித்தன.கொம்பனுக்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர். இதற்கிடையே இப்பிரச்சனையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு கொம்பன் படத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தது. முன்னதாக இவர்கள் அனைவரும் கொம்பன் படத்தை பார்த்தனர்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு
பின்னர் அவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக சந்தித்தனர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, அழகன் தமிழ்மணி, ரமேஷ் கண்ணா, மதுரை அன்பு, கதிரேசன், பெப்சி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கார்த்தி, கருணாஸ், ராதாரவி, டி.ஜி.தியாகராஜன், எடிட்டர் மோகன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்று கொம்பன் படத்திற்கு தங்கள் ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
கொம்பன் ஒருநாள் முன்னதாக ரிலீஸ்
கொம்பன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுபடி இரண்டு நீதிபதிகளுக்கு கொம்பன் படத்தை திரையிட்டு காட்ட அனைத்து ஏற்பாடுகளையும் 7 மணிக்கே செய்துவிட்டோம். எங்களது தரப்பில் இருந்து எல்லாம் தயாராக இருந்தது. ஆனால் கிருஷ்ணசாமி ஆட்கள் மட்டும் ஒருமணி நேரம் தாமதமாக வந்தனர். வந்தவுடன் படத்தை பார்க்காமல் படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை கேட்டனர். கோர்ட் உத்தரவுபடி படத்தை பார்க்கத்தான் அனுமதி, ஒருவேளை கோர்ட் உத்தரவு அளித்தால் அதையும் நாங்கள் காட்ட தயாராக இருக்கிறோம். இப்படி சின்ன சின்ன விஷயங்களை மேற்கோள் காட்டி இரண்டு மணிநேரம் தாமதத்திற்கு பின்னர் படத்தை பார்த்தனர்.
படம் ஆரம்பித்த நான்கு நிமிடங்களுக்குள் இந்த காட்சி எனக்கு சரியாக புரியவில்லை, மீண்டும் திரையிட்டு காட்டுங்கள் என்றனர். க்யூபிக் முறையில் படத்தை திரையிடுவதால் தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் சில சிக்கல்களை சந்தித்தோம். கிருஷ்ணசாமி ஆட்கள் இதுபோன்று நடப்பதை பார்த்த நீதிபதிகள் இவர்கள் படம் பார்க்க வரவில்லை வேறு எதையோ மனதில் வைத்து இப்படி செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டனர். எனக்கு கிருஷ்ணசாமிக்கும் எந்த அறிமுகமாமோ, பிரச்னையோ கிடையாது, இப்போது தான் அவரை முதன்முறையாக நேரில் சந்திக்கிறேன். எங்கள் தரப்பிலிருந்து எந்த பிரச்னையும் இல்லை, படத்தை நாளைக்கே நாங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கண்ணீர் மல்க கூறினார்.
நிறைமாத கர்ப்பிணி போல சென்சாருக்கு போகும் படங்கள் - தாணு
தயாரிப்பாளர் தாணு பேசுகையில், ஒரு படத்தை எடுத்து முடித்து அதை சென்சாருக்கு அனுப்பும் போது கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணி போன்று அந்த படம் செல்கிறது. வெட்டு குத்து உள்ளிட்ட சின்ன சின்ன சிசேரியன்களை எல்லாம் கடந்து படம் வௌியாகிறது. அப்படி வௌியாகும் படங்களில் 10 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.
கொம்பன் படத்தை இப்போது தான் பார்த்தேன். படத்தில் எந்தவொரு தனி அமைப்பையோ, ஜாதியையோ குறிப்பிட்டு காட்சிகள் அமைக்கப்படவில்லை. மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையேயான உறவை அழகாக சொல்லியிருக்கிறார்கள். இந்த வார்த்தை சத்தியம், இப்படியொரு படத்தை எடுத்த இயக்குநரை கூப்பிட்டு மற்றொரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகரித்துள்ளது. ஒரு படம் சென்சார் ஆன பிறகு இதுபோன்று பிரச்னைகளை கிளப்பாதீர்கள் என்று மன்றாடி கேட்டு கொள்கிறேன் என்றார்.
ஒட்டுமொத்த சினிமாவும் துணை நிற்போம் - சரத்குமார்
சினிமா உலகம் நல்ல சூழலில் இயங்குகிறது என்று சொன்னாலும் இப்போது தொழில் செய்வது கஷ்டமாகவே தான் உள்ளது. படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பி, அவர்கள் அதை சென்சார் செய்த பின்னர் படத்தை திரையிட விடாமல் இடையூறு செய்வது நியாயமில்லை. தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இனி வருங்காலங்களில் எந்த தனி நபரும் இதுபோன்று படத்தை தடை செய்ய முடியாது. ஒட்டு மொத்த சினிமா துறையும் ஒன்று திரண்டு துணை நிற்போம்.
நாங்கள் இப்போது தான் படத்தை பார்த்தோம், குடும்ப சூழலை ஒற்றுமையாக இருக்க சொல்லி வலியுறுத்தியிருக்கிறார்கள். எந்தவொரு ஜாதி பிரச்னையையும், சமுதாய பிரச்னையையும் தூண்டும் வகையில் படத்தில் காட்சிகள் எதுவும் இல்லை. சென்சார் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கலைத்துறைக்கும் சமுதாய பொறுப்பு இருக்கிறது என்றார்.
சினிமா துறையை விட்டு விலகுகிறேன் - விக்ரமன்
இயக்குநர் விக்ரமன் பேசுகையில், இயக்குநராக இல்லாமல் ஒரு ரசிகனாக படத்தை பார்த்தேன். படத்தில் எந்தவொரு ஜாதியையும், சமூகத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால் எதற்காக வழக்கு தொடர்ந்தார்கள் என்று தெரியவில்லை. இந்தப்படத்தை பத்திரிகையாளர்களாகிய நீங்களும் பாருங்கள்... உங்களது பல பேரிடம் எனது போன் நம்பர் இருக்கும். இவர்கள் சொல்வது போன்ற பிரச்னைகள் இருந்தால் நிரூபியுங்கள், நான் இந்த சினிமாவை விட்டே விலகுகிறேன், இனி நான் படங்கள் இயக்கவே மாட்டேன். படம் அவ்வளவு அருமையாக வந்துள்ளது. குறிப்பாக பின்பாதியை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். இப்படிப்பட்ட படத்திற்கு தடை செய்ய சொல்லி வழக்கு தொடர்ந்ததில் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்று கூறினார்.
புதன் அன்று தீர்ப்பு
இதனிடையே இவ்வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்தது. நீதிபதிகள் படம் பார்த்த அறிக்கையை கோர்ட்டில் சமர்பித்தனர். இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன் மற்றும் ஆறுமுக பெருமாள் ஆதித்தன் ஆகியோர் ஏற்று கொண்டனர். பின்னர் இவ்வழக்கு மீதான தீர்ப்பை புதன்கிழமை மதியத்திற்கு ஒத்தி வைத்தனர்.