டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நம்ம ஊர்ல இருக்கிற ஹீரோ இமேஜ் மாதிரி ஒரே அடியில் பத்து பேரை காலி பண்றது மாதிரியான கதையெல்லாம் எனக்கு செட்டாகாது. அதனால் கள்ளப்படம் படத்தில் எப்படி எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்ததோ அதே மாதிரி எனக்கேற்ற கதைகள் அமைந்தால் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் இசையமைப்பாளர் கே.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...
இசை ஈடுபாடு பற்றி?
நான் சின்ன வயதாக இருந்தபோதே இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் வசந்த் பீட்டர் என்கிற மாஸ்டரிடம் முறைப்படி இசை பயிலத் தொடங்கினேன். மேலும், பள்ளியில் பேண்ட் இசைக்கருவியும் வாசித்து வந்தேன். அதோடு பக்தி உள்பட சில ஆல்பங்களில் பின்னணியும் பாடியிருக்கிறேன். மற்றபடி எங்கள் பேமிலியில் இசைக்கலைஞர்கள் யாரும் கிடையாது.
மிஷ்கின் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
எங்க அப்பா ஒரு ரிட்டையர்டு புரொபசர். அவரும், மிஷ்கின் சாரும் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு லைப்ரரியில் மீட் பண்ணினார்களாம். அந்த சமயத்தில் மிஷ்கின் சார் டைரக்டர் கிடையாது. அப்போதில் இருந்து அவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது. அடிக்கடி அப்பாவை பார்க்க வருவார். அவர்கள் எல்லா விசயங்களைப்பற்றியும் நிறைய பேசுவார்கள். அப்போது நானும் மிஷ்கின் சாரிடம் பேசியிருக்கிறேன். ஆனால் ஒரு 15 வருட இடைவெளிக்கு பிறகுதான் மீண்டும் நான் மிஷ்கின் சாரை சந்தித்தேன். அந்த சமயத்தில் அவர் நந்தலாலா படம் பண்ணிக்கொண்டிருந்தார்.
நான் இசையில் முழுசாக இறங்கி விட்டதை அவரிடம் சொன்னேன். அதோடு விளம்பர படங்கள், குறும் படங்களுக்கு இசையமைத்திருந்ததையும் காண்பித்தேன். அதன்பிறகுதான் அவரது யுத்தம் செய், முகமூடி படங்களுக்கு இசையமைக்க வைத்தார்.
உங்கள் பெயரை கே என்று வைத்தது மிஷ்கின்தானா?
இல்லை. நான்தான் வைத்தேன். எனது ஸ்கூல் ப்ரண்சுங்களெல்லாம் என்னை கே என்றுதான் கூப்பிடுவார்கள். அதனால் கிருஷ்ணகுமார் என்ற எனது பெயரை சினிமாவுக்காக கே என்றே வைத்து விட்டேன். இது வழக்கமான பெயராக இல்லாமல் வித்தியாசமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
மிஷ்கின் ரொம்ப டார்ச்சர் கொடுப்பார் என்கிறார்களே?
வெளியில் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. ரொம்ப மென்மையாக பழகக்கூடியவர். ஒர்க்குல சீரியசாக இருப்பார். ஆனால் டார்ச்சரெல்லாம் பண்ண மாட்டார்.24 மணி நேரமும் உழைத்துக்கொண்டேயிருப்பார். அவருடன் பணியாற்றும்போது அவரது எனர்ஜி நம்மையும் தொற்றிக்கொள்ளும்.
ஆனால் சிலசமயங்களில்தான் கொஞ்சம் அவர் கஷ்டம் கொடுப்பதுபோல் தெரியும். அதாவது இரவு முழுக்க கம்போஸிங் நடந்திருக்கும், மறுநாள் காலை 9 மணிக்கே மிண்டும் வந்து நிற்பார். அப்படி நான்-ஸ்டாப்பாக ஒர்க் பண்ணுவார். அவரது ஸ்பீடுக்கு நம்மளால போக முடியாது.
பாடலே பிடிக்காது என்று சொல்லும் மிஷ்கினை பாட வைத்தது எப்படி?
அவருக்கு பாடலே பிடிக்காது என்று சொல்ல முடியாது. நன்றாக ரசிக்கக்கூடியவர். அவர் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் ஆவதற்கு அவர்தான் காரணம். சரியான டியூனை செலக்ட் பண்ணுவார். மற்றபடி படத்துக்கு பாடல் தேவையில்லை என்றால் அனுமதிக்க மாட்டார். அதனால்தான் அவரது ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு படங்களில் பாடல்களே வைக்கவில்லை.
மேலும், அவர் நன்றாக பாடுவார் என்பதினால்தான் கள்ளப்படம் என்ற படத்துக்காக அவரை வெள்ளக்கார ராணி கொல்லிமலைத்தேனி என்ற பாடலை பாட வைத்தோம். அந்த பாடலையும் மிஷ்கின் சாரேதான் எழுதினார். அப்படம் அவரது உதவியாளர் வடிவேலுவின் படமாக இருந்தபோதும் மிஷ்கின் சாரும் அந்த பட வேலைகளில் அவ்வப்போது கலந்து கொண்டார். அதேபோல், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் கிருமி என்ற படத்துக்காக எனது இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த படத்தில் மதயானைக்கூட்டம் கதிர் நடித்திருக்கிறார்.
கவுண்டமணியின் 49 ஓ படத்துக்கு எந்த மாதிரி பாடல்களை கொடுத்துள்ளீர்கள்?
அது கொஞ்சம் வித்தியாசமான படம். கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறார். அதோடு தப்பானவனுக்கு ஓட்டுப்போட்டா நாசமா போயிடுவே -என அவர் நக்கல் பண்ணுவது போல் ஒரு பாட்டு உள்ளது. அதில் கொஞ்சம் குத்து பாட்டு ஸ்டைலும் இருக்கும். அதேபோல் விவசாயத்தின் பெருமையை சொல்லும் பாடலும் இந்த படத்தில் உள்ளது. ஒரு சின்ன நாட்தான். ஆனா ஜாலியான படமா இருக்கும்.
நடிக்க வேண்டும் என்பது நீண்டகால கனவா?
கள்ளப்படம் படத்தில் இசையமைப்பாளராக நடிக்க வேண்டும் என்ற சொன்னபோதுதான் நான் நடிப்பது பற்றியே யோசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்பு வரை நடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததுகூட இல்லை. அதிலும் ஹீரோ, லவ் என்று சொல்லியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். இசையமைப்பாளர் கேரக்டர் என்பதினால்தான் நடித்தேன்.
இசையமைப்பதை விட நடிப்பது கடினமாக இருந்ததா?
ஏசி ரூமில் தனிமையில் அமர்ந்து இசையமைத்து விடுகிறோம். ஆனால் நடிப்பது முற்றிலும் விததியாசமாக உள்ளது. அவுட்டோரில் நம்மை சுறறி நிறையபேர் நின்றுகொண்டிருக்க நடிக்க வேண்டியதிருக்கிறது. அதோடு ஒரு பாடல் காட்சியிலும் டான்ஸ் ஆடினேன். என்னதான் ரிகர்சல் பார்த்து விட்டு ஸ்பாட்டுக்கு போனாலும், அங்கு போனபிறகு வேறுமாதியாக உள்ளது.என்றாலும் நடிப்பு ரொம்ப புதுசாக பாசிட்டீவான அனுபவமாக இருந்தது.
விஜய்ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் போன்று டூயட் பாடுவீர்களா?
கள்ளப்படம் படத்தில் எப்படி எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்ததோ அதே மாதிரி எனக்கேற்ற கதைகள் அமைந்தால் நடிப்பேன். முக்கியமாக நல்ல டீமாக இருக்க வேண்டும். மேலும், இப்போதெல்லாம் எல்லாரும் எல்லாம் பண்றாங்க, நடிகர்கள் பாட்டு எழுதுறாங்க, பாடுறாங்க, டைரக்ட் பண்றாங்க எப்படி எல்லாமே ஈசியாப்போச்சு.
மேலும் நம்ம ஊர்ல இருக்கிற ஹீரோ இமேஜ் மாதிரி ஒரு அடியில் பத்து பேரை காலி பண்றது மாதிரியான கதையெல்லாம் எனக்கு செட்டாகாது. அந்த மாதிரி இல்லாத என் பாடி லாங்குவேஜ்க்கும் பொருத்தமான கதைகள் வந்தால் நடிப்பேன்.
சமீபகாலமாக இசையே தெரியாதவர்களெல்லாம் பாட வந்துவிட்டது பற்றி?
இது நல்ல விசயம் இல்லைதான். இசைக்கு மரியாதை இல்லாமல் போயிடுது.ஆனால் அது இப்ப எல்லா துறையிலுமே இருக்கு. டெக்னாலஜி வளர்ந்துட்டதாலே யாரு வேணும்னாலும் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்னு ஆயிடுச்சு. நல்லதா கெட்டதான்னு ஜட்ஜ் பண்ண கஷ்டமா இருக்கு. இருந்தாலும் இது நல்ல விசயம் இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன்.
ஹீரோக்கள் பாடினால் எளிதில் ஹிட்டாகி விடும் என்கிறார்களே?
அது தப்பான கருத்து. யார் பாடினாலும் பாட்டு நல்லா இருந்தால்தான் ஹிட்டாகும். ஆனா சில பாடல்கள் ஹிட்டாகி விடுவதால் நடிகர்கள் பாடினால் பாடல் ஹிட்டாகும் என்று நினைக்கிறார்கள். மேலும், எனது படங்களில் இதுவரை நடிகர்களை பாட வைக்கும் முயற்சியை நான் எடுக்கவில்லை.
பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு எப்போது இசையமைப்பீர்கள்?
எனக்கு பெரிய ஹீரோ படம், பெரிய படம் என்பதை விட நல்ல படங்கள் நிறைய பண்ணனும் என்பதுதான் ஆசை. காரணம், பெரிய ஹீரோ படத்துக்கு ஒர்க் பண்றோம்னா நிறைய பேரோட கருத்து கேட்க வேண்டியதிருக்கும். பெரிய பிரஷர் இருக்கும். நம்மளோட சுதந்திரம் போயிடும். அதனால் பெரிய படங்களுக்காக ஆசைப்படுறதில்லை. இப்ப பண்ற மாதிரியே போனா ஜாலியா என்சாய் பண்ணி படங்களுக்கு மியூசிக் பண்ணலாம்.
மேலும், வெறும் குத்துப்பாடல்களாக போடாமல் நல்ல மெலோடியான பாடல்களாக இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காரணம், அந்த மாதிரி பாடல்கள்தான் நீண்டகாலம் ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்படும். முகமூடி, காடு படங்களில் எனது பாடல்களை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்றால் மெலோடி முக்கிய காரணம். அதோடு, கன்னித்தீவு பொண்ணா என்ற குத்துப்பாடலில்கூட நான் மெலோடியை கலந்துதான் டியூன் போட்டேன். அதனால்தான் அந்த பாடல் இப்போதும் கேட்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் நான் இசையமைத்த அன்னயும் ரசூலும் என்ற படத்தில் மெலோடியான பாடல்களை கொடுத்தேன். அது அங்கு மிகப்பெரிய ஹிட்டானதாக சொன்னார்கள். அவர்கள் குத்துப்பாட்டு கேட்டெல்லாம் டிமாண்டு செய்வதில்லை. ஸ்லோவான மெலோடி பாடல்களைத்தான் கேட்கிறார்கள். அநதவகையில், தமிழ், மலையாள ரசிகர்களுக்கிடையேயும் ரசனையில் வேறுபாடு உள்ளது என்கிறார் இசையமைப்பாளர் கே.