மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளி்ட்ட தென்னிந்திய மொழிகளில், 250க்கும் மேற்பட்ட படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றிய உடுப்பி லட்சுமி நாராயணன், மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானார்.
1926ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, உடுப்பி லட்சுமிநாராயணன் பிறந்தார். சிறுவயதிலேயே நடனம் மீது ஈடுபாடு கொண்டிருந்த உடுப்பி லட்சுமி நாராயணன், பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கினார். காஞ்சிபுரம் ஸ்ரீ எல்லாப்ப முதலியாரிடம் அவர் முறைப்படி நடனம் பயின்றார். 1962ம் ஆண்டு பரதநாட்டிய மஞ்சரி என்ற பெயரில் நடன பள்ளியை துவக்கினார். பின்னர், அதன் பெயர் நாட்டிய மஞ்சரி என்று பெயர் மாற்றப்பட்டது.
நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடன மாஸ்டராக பணியாற்றி வந்தார் நாராயணன். பின்னர் சிவாஜியே பங்களுக்கும் நடனம் அமைக்க சொல்லி கேட்டு கொண்டதற்கு இணங்க சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக மாறினார். முதன் முதலில், சுமதி என் சுந்தரி என்ற படத்திற்கு நடன அமைத்த நாராயணன், தொடர்ந்து கௌரவம், பொன்னூஞ்சல், உழைக்கும் கரங்கள், பாட்டும் பரதமும், பிரபுதேவா நடித்த காதலன் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, கொங்கனி உள்ளிட்ட பல மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். சினிமாவில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்துள்ளார். சினிமா தவிர்த்து இந்தியாவின் பல ஊர்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, கர்நாடக அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நாராயணனுக்கு இன்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது. நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், பிரபாவதி, கலாவதி, ஹேமாவதி, முரளி கிருஷ்ணா, மதுமதி என ஐந்து வாரிசுகளும் உள்ளனர். நாராயணன் நடத்தி வந்த நாட்டிய மஞ்சரியை, தற்போது அவரது மகள் மதுமதி நடத்தி வருகிறார்.
நாராயணனின் உடல், அஞ்சலிக்காக சென்னையில் உள்ளது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கு நாளை(மார்ச் 18ம் தேதி) காலை 8.00 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நடைபெற இருக்கிறது.