தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. எல்லா முன்னணி ஹீரோக்களும் ஒரு போலீஸ் கதையிலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மினிமம் கியாரண்டி கதை என்று போலீஸ் கதையை கோலிவுட்டில் சொல்வார்கள். எம்.ஜி.ஆர் (காவல்காரன்), சிவாஜி (தங்கபதக்கம்), ரஜினி (மூன்று முகம்), கமல் (காக்கி சட்டை, வேட்டையாடு விளையாடு), விஜய் (துப்பாக்கி), அஜீத் (என்னை அறிந்தால்), சூர்யா (காக்க காக்க, சிங்கம் 1, 2) கார்த்தி (சிறுத்தை), விக்ரம் (சாமி), இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் போலீஸ் படங்கள் ஸ்பெஷலாக இருக்கும். கடைசியாக சிவகார்த்திகேயன் காக்கி சட்டையில் போலீஸ் யூனிபார்ம் மாட்டி கொண்டார்.
திருடன் போலீஸ், என்னை அறிந்தால், என் வழி தனி வழி, சண்டமாருதம், தொப்பி, எட்டுத்திக்கும் மதயானை, நாய்கள் ஜாக்கிரதை, மீகாமன், டமால் டுமீல், சிகரம்தொடு, கதம் கதம் போன்றவை சமீபத்திய போலீஸ் படங்கள். இவற்றில் பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தவை. அந்ததந்த நடிகர்களுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தவை.
ஆம்பள படத்திற்கு பிறகு விஷால், சுசீந்திரன் இயக்கும் படத்தில் போலீசாக நடிக்கிறார். மீகாமன் படத்தில் போலீசாக நடித்த ஆர்யா அடுத்து மீகாமன் இயக்குனர் மகிழ்திருமேனியின் அடுத்த படத்திலும் போலீசாக நடிக்கிறார். வெளிவர இருக்கும் விஸ்வரூபம் 2 வில் கமல் போலீசாக நடித்துள்ளார். அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போகும் படமும் போலீஸ் கதைதான் என்கிறார்கள். புறம்போக்கு படத்தில் ஷாம் போலீசாக நடிக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை படத்தில் போலீசாக நடித்த சிபிராஜ், அதன் இரண்டாம் பாகத்திலும் போலீசாக நடிக்கிறார். இது தவிர இன்னும் பல போலீஸ் படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் பெரிய நடிகர்களே போலீஸ் கேரக்டர்களில் நடிப்பார்கள். இப்போது வளரும் நிலையில் உள்ள அடக்கத்தி தினேஷ், சிவகார்த்திகேன், ஆர்யா தம்பி சத்யா போன்றவர்கள்கூட போலீசாக நடிக்கிறார்கள். போலீஸ் வேடத்திற்கு பொருத்தமே இல்லாதவர்கள்கூட போலீஸ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அறிமுகமாகும் முதல் படத்திலேயே போலீசாக நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
போலீஸ் கதை என்றாலும் இஷ்டத்துக்கு ஆக்ஷன் காட்சிகள் வைக்கலாம். அதன் மூலம் படத்துக்கு விறுவிறுப்பு கூட்டலாம். பன்ஞ் டயலாக் வைக்கலாம். லாஜிக்கே இல்லாமல் வில்லன்களை போட்டுத் தள்ளலாம். ஹீரோயிச பில்டப்புகளை ஏற்றிக் கொள்ளலாம். இப்படி பல சவுகரியங்கள் போலீஸ் கதையில் இருக்கிறது.
போலீஸ் ஹீரோவின் அப்பா நேர்மையான போலீசாக இருந்து வில்லன்களால் கொல்லப்பட்டிருப்பார், அப்பா வேலைக்கு மகன் வந்து கொன்றவர்களை பழிவாங்குகிற கதைகள்தான் பெரும்பாலான போலீஸ் கதைகள். கடைசியாக வெளிவந்த திருடன் போலீஸ், சிகரம் தொடு, காக்கி சட்டை படங்களில் கதை இதுதான். நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனைவியை வில்லன்கள் கொன்று விடுவார்கள். அவர்களை பழிவாங்க துப்பாக்கி தூக்குவார் ஹீரோ போலீஸ், அவரை இளம்பெண் ஒருவர் இரண்டாவதாக காதலிப்பார். கமலின் போலீஸ் படங்களின் கதை இப்படித்தான் இருக்கும் அஜீத்தின் என்னை அறிந்தால் கதையும் இதுதான்.
லாஜிக் இருக்கிறதோ இல்லையோ திரைக்கதையை மட்டும் விறுவிறுப்பாக்கி விட்டால் போலீஸ் கதைகள் வெற்றியை ருசித்து விடும். அதனாலேயே சினிமா வாய்ப்பு தேடும் எல்லா புது இயக்குனர்களின் கையிலும் ஒரு போலீஸ் கதை தயாராக இருக்கும். நல்ல போலீஸ் கதை இருந்தால் சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டிருக்கும் ஹீரோக்களும் உண்டு.
ஆனால் ஹீரோயின்கள் பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக நடிக்க விரும்பவுதில்லை. விஜயசாந்திக்கு பிறகு அப்படி ஒரு வாய்ப்பு எந்த நடிகைக்கும் அமையவில்லை. சினேகா, நமீதா என சில நடிகைகள் முயற்சித்து பார்த்தார்கள். அது ரசிக்கப்படவில்லை. ஒரு வேளை போலீசாக நடித்தாலும் அதில் கவர்ச்சி இருக்கும், இல்லாவிட்டால் காமெடி இருக்கும்.
போலீஸ் கதைகள் பொருந்துவது ஹீரோக்களுக்குதான். ஹீரோவின் தோற்றமும், சரியான திரைக்கதையும் அமைந்து விட்டால் அது ரசிக்கப்படுகிற படமாக அமைந்து விடும். இந்த இரண்டில் ஒன்று சொதப்பினாலும் படம் தேறாது. முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக விரும்புகிறவர்கள் தேர்ந்தெடுப்பதும், வேறு டிரண்டில் இருக்கிற ஹீரோக்கள் ஆக்ஷன் அவதாரம் எடுப்பதற்கும் போலீஸ் கதைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இருக்கிறவரை போலீஸ் கதைகளுக்கு தனி மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும்.