இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் தொடங்கி, கடந்த 85 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் குறைவில்லாமல் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் கதை அம்சங்களை எளிதில் வகைப்படுத்திவிட முடியும்.
பெரும்பாலான திரைப்படங்கள் காதல் என்ற உணர்வை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. அநீதிக்கு எதிரான கதாநாயகனின் போராட்டம் என்பது மற்றொரு வகை. இந்தவகைப்படங்களிலும் காதல் கிளைக்கதையாக சொல்லப்பட்டிருக்கும். ஏறக்குறைய 75 வருடங்களுக்கு மேலாக, செக்கு மாட்டைப்போல் குறிப்பிட்ட தடத்தில் மட்டுமே சுழன்று கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்படங்கள் அபூர்வமாக... அத்திபூத்தாற்போல் அந்த வட்டத்தைவிட்டு விலகி வித்தியாசமான கதைகளையும் சொல்லி இருக்கின்றன. அப்படிப்பட்ட பல படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்ததோடு காலத்தைக் கடந்த படைப்புகளாகவும் மக்கள் மனதில் நிலைபெற்றிருக்கின்றன.
திரைப்படம் என்பது வெகு மக்களின் ஊடகமாக இருந்தாலும், அவை அம்மக்களின் பிரச்சனைகளையோ அவர்கள் சார்ந்த சமூகத்தின் அவலங்களையோ பேசியதே இல்லை.
மாறாக குரங்குவித்தையைப்போல்.... அம்மக்களை குஷிப்படுத்துகிற வேலையை மட்டுமே செய்து வந்தன. உண்மையில் திரைப்படம் என்பது வலிமையானதொரு கலை ஊடகம். அது மக்களின் பிரச்சனைகளை பேசத்தொடங்கினால்.. சமூகத்தில் மட்டுமல்ல, அரசியல் மட்டத்திலும், அதிகார வர்க்கத்தினர் மட்டத்திலும் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உண்டு. துரதிஷ்டவசமாக இப்படியொரு திருப்பணியை நம் திரைப்படங்கள் செய்யத்தவறிவிட்டன. தப்பித்தவறி ஏதோ ஒரு உண்மையைச் சொல்ல விழைந்தாலும், இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளும் கதாபாத்திரங்களும், வசனங்களும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல என்று எச்சரிகை வாசகத்தைப் போட்டு தப்பித்துக்கொண்டன. இந்த எச்சரிகை வாசகம் இல்லை என்றால் தணிக்கையின்போது எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்ச உணர்விலேயே இதுபோன்ற தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாக இருக்கிறது.
அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடிய அல்லது அரசுக்கு எதிரான விஷயங்கள் திரைப்படங்களில் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட தணிக்கைக்குழு, உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லவும் திரைப்படங்களை அனுமதிப்பதில்லை. அதையும் மீறி சாதுர்யமாக சில விஷயங்களை திரைப்படங்கள் கோடிட்டுக்காட்டவே செய்கின்றன.
என்னை அறிந்தால்
சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் இதற்கொரு உதாரணம். வில்லனை அழிக்கும் ஹீரோ என்ற நேர்க்கோட்டில் பயணிக்கும் வழக்கமான மசாலாப்படம்தான் இது. எனினும் அப்படத்தில் அடிநாதமாக சொல்லப்பட்ட ஒரு விஷயம் அதிர வைப்பதாக இருந்தது. உடல் உறுப்புகள் திருட்டு என்ற விஷயத்தை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது - என்னை அறிந்தால் படம். குழப்பமான திரைக்கதை அமைப்பினால் அப்படம் சொன்ன செய்தி, முழுமையாய் தெளிவாய் மக்களின் மண்டைக்குள் செல்லவில்லை.
காக்கி சட்டை
சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான காக்கி சட்டை படத்தின் கதையும் ஏறக்குறைய என்னை அறிந்தால் படத்தின் கதையும் ஒன்றே. இப்படத்திலும் உடல் உறுப்புகள் திருடப்படுவதையே காட்சிகளாக்கி உள்ளனர். மேம்போக்காக... மேலோட்டமாக அல்லாமல், புத்திசாலித்தனமாக.. பொட்டில் அடித்ததுபோல் சொல்லி இருக்கிறார்கள். வேறு சில விஷயங்களையும் சுட்டிக்காட்டி, அதற்கும் உடல் உறுப்பு திருட்டுக்கும் தொடர்பு இருப்பதாய் திரைக்கதை மூலம் திகைக்க வைத்திருக்கின்றனர்.
மூளைச்சாவு
மூளைச்சாவு என்ற வார்த்தையையும், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது என்ற செய்தியையும் நாம் சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படுகிறோம். குறிப்பாக ஹிருதயேந்திரன் என்ற சிறுவனின் இறப்புக்குப் பிறகே இந்த மூளைச்சாவு என்ற வார்த்தை பிரபலமடையத்தொடங்கியது. அதற்கு முன் யாரும் மூளைச்சாவு அடைந்ததாகவோ... அவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாகவோ நாம் அறிந்ததில்லை.
மெடிக்கல் டூரிசம்
இது ஒரு பக்கம் இருக்க, மெடிக்கல் டூரிசம் என்ற வார்த்தையும் சமீப காலமாகத்தான் அடிக்கடி புழக்கத்தில் இருக்கிறது. அதாவது, வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை காஸ்ட்லியாக இருப்பதால், மற்றநாடுகளைவிட மலிவானவிலையில் தரமான சிகிச்சை கிடைப்பதால் வெளிநாட்டினர் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அதிக அளவில் வருகின்றனர். இதையே மெடிகல் டூரிசம் என்கின்றனர்.
அதுமட்டுமல்ல, வட இந்திய மாநிலங்களில் இருந்து இங்கே வந்து வேலை செய்யும் அப்பாவி தொழிலாளர்கள் விபத்தில் மாண்டுபோவதும் அடிக்கடி நடக்கிறது. இது உண்மையிலேயே விபத்தா? அல்லது அந்த அப்பாவி தொழிலாளர்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்காக ஏற்படுத்தப்படும் விபத்தா? என்ற கேள்வியையும் காக்கி சட்டை படம் எழுப்புகிறது. காக்கி சட்டை படத்தில் காதல் இருக்கிறது. கிச்சுகிச்சுமூட்டும் காமெடி இருக்கிறது. எல்லாவற்றையும்விட அந்தப்படத்தில் மிகப்பெரிய சமூகப்பிரச்சனை குறித்த கேள்வி இருக்கிறது.
வட இந்திய தொழிலாளர்களின் மரணம்...
உடல் உறுப்புகள் திருட்டு....
இந்தியாவைத் தேடி வரும் வெளிநாட்டு நோயாளிகள்...
மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததுபோல் தெரியும் இந்த மூன்று விஷயங்களையும் தொடர்புபடுத்தியது மட்டுமல்ல, இந்த மெடிகல் டூரிசத்தையும், மூளைச்சாவு அடைவதால் உடல் உறுப்புதானம் கொடுக்கப்படுவதையும் முடிச்சுப்போட்டு மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது காக்கி சட்டை படம்.
காக்கி சட்டை படம் எழுப்பும் கேள்விகளுக்கு உண்மையான காக்கி சட்டைகள் விடை தேட வேண்டும்?