ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி(வயது 75) உடல்நலக்குறைவு காரணமாக, இன்று(பிப்., 23ம் தேதி) காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்களை பெரிதும் கவர்ந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், நடிப்புத்துறையிலேயே அவரது முழுக்கவனமும் இருந்தது. இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடக கம்பெனியை துவங்கினார். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நாடகத்தில், வில்லன் கேரக்டரில் நடித்தார். கிராம மக்கள் அனைவரும் சக்தியின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாது, அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு ஆதரவு அளித்தனர்
சினிமா ஆசையில், சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில், உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனுடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். அப்போது தான் கமலின் அறிமுகம் கிடைத்தது. கமல், தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்தார்.
அதன்பின்னர், 1972ம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தில் கமலை ஹீரோவாக்கி, அதன்மூலம் இயக்குநராக உயர்ந்தார் ஆர்.சி.சக்தி. தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை தைரியமாக இயக்கியிருந்தார் சக்தி. தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார். கடைசியாக பத்தினி பெண் என்ற படத்தை இயக்கினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி, உடல்நலக்குறைவால் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சக்தி. ஆனால் சிகிச்சை பலன்இன்றி அவரது உயிர் பிரிந்தது. மறைந்த சக்திக்கு, ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.
கமலும், சக்தியும் நெருங்கிய நண்பர்கள். இவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். கடந்தாண்டு தான் சக்தி, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்று இருந்தார். நடிகர் கமலஹாசன், தனது ஒவ்வொரு பேட்டியிலும், ஆர்.சி.சக்தியின் பெயரை குறிப்பிட தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.சி.சக்தியின் மறைவு கமல், உள்ளிட்ட திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமல் அஞ்சலி : ஆர்.சி.சக்தியின் மறைவு செய்தியை கேட்டவுடன் நடிகர் கமல்ஹாசன், உடனே மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், எனது சகோதரன் போல, நண்பனை போல எல்லா வகையிலும் என்னோடு இருந்தவர் சக்தி. அவரது இழப்பு எனக்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறினார். கமல் உடன் நடிகை கௌதமியும் வந்திருந்தார்.
இதனையடுத்து சக்தியின் உடல் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. கனிமொழி எம்.பி., டைரக்டர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் கேயார், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், சக்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.