Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழ் சினிமாவுக்கு.. விநியோகஸ்தர்கள் தேவையா? புதிய வர்த்தகத்துக்கு வழி என்ன?

21 பிப், 2015 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Is-film-distributors-are-necessary-for-Tamil-Cinema

லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள், அப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தொகை 33 கோடியை ரஜினிகாந்த் திருப்பித் தரவேண்டும் என்று கூறி பல வகையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மூத்த நடிகர் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் ரஜினியைப் பற்றி தரக்குறைவாகவும் பேசி வருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி நடித்த படத்தை வாங்கினால் ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைதான் ஏற்படும் என்பதை தெரியப்படுத்தும்வகையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதை ரஜினி வீட்டிலிருந்தே தொடங்க இருப்பதாகவும் ஆணவத்துடன் அறிவித்தனர்.


இந்த சம்பவங்கள் யாவும் தற்போது திரைப்படத்துறையினர் மத்தியில் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் விநியோகஸ்தர்கள் மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.


கூடவே, தமிழ்சினிமாத்துறைக்கு விநியோகஸ்தர்கள் தேவையா? அவர்கள் இல்லாமலே தயாரிப்பாளர்களே நேரடியாக தியேட்டர் அதிபர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு படங்களை திரையிடலாமே என்ற கேள்வியையும் எழுப்பி.. ஆரோக்கியமான புதிய வர்த்தகத்துக்கும் வழிவகுத்திருக்கிறது. பணம் இருந்தால் எவர் வேண்டுமானாலும் படம் எடுத்துவிடலாம். படத்தை வெளியிடுவதுதான் மிகப்பெரிய பிரச்சனை. இதனால் பல நூறு படங்கள் பெட்டிக்குள் சுருண்டு கிடக்கிறது.


சினிமாத்தொழிலை சீரழித்துக் கொண்டிருக்கும் விநியோகமுறைகளே இந்த நிலைக்குக் காரணம்...!


அவுட்ரைட்ஸ்!


அவுட்ரைட்ஸ், எம்.ஜி. என்கிற மினிமம் கியாரண்டி, டிஸ்ட்ரிபியூஷன் என மூன்று வழிகளில் பட விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு படத்தின் மதுரை ஏரியாவின் விலை... இரண்டு கோடி என்று வைத்துக் கொள்வோம். அதை கொடுத்து அவுட்ரைட்ஸ் முறையில் அந்த ஏரியாவின் உரிமையை ஒருவர் வாங்குகிறார் என்றால், அந்தப் படம் வசூல் செய்யும் தொகை அவரைச் சார்ந்தது. பத்து கோடி வசூல் செய்தாலும் அவருக்குத்தான். படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டாலும் அவரே பொறுப்பு!


அடுத்தது....எம்.ஜி.!


அதே மதுரை ஏரியா! இரண்டு கோடி விலை சொல்கிறார் தயாரிப்பாளர். விநியோகஸ்தரோ ஒரு கோடிக்குக் கேட்கிறார். தயாரிப்பாளருக்கு அந்த விலை கட்டுப்படியாகவில்லை. இம்மாதிரியான சூழலில் எம்.ஜி. முறையில் ஒரு கோடிக்கு படத்தை அவருக்கு விற்க சம்மதிப்பார். இப்போதைக்கு ஒரு கோடி நஷ்டம் போல் தோன்றினாலும், படம் வெளியாகி வெற்றி பெற்றால் தயாரிப்பாளருக்கு லாபம். எப்படி? ஒரு கோடி கொடுத்து எம்.ஜி.யில் வாங்கிய படம் மூன்றுகோடி வசூல் செய்திருந்தால், விநியோகஸ்தர் கொடுத்த ஒரு கோடி போக கூடுதலாக வசூலான இரண்டு கோடியை தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் ஏற்கனவே பேசிய ஒப்பந்தத்தின்படி பிரித்துக் கொள்வார்கள். அது மட்டுமல்ல, படத்தின் தலை எழுத்தை வைத்து அப்போதே படத்தை அவுட்ரைட்டும் செய்து கொள்வார்கள். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், கொடுத்தப் பணத்துக்குக் குறைவாக வசூல் செய்திருந்தால், அதனால் ஏற்படும் நஷ்டம் விநியோகஸ்தரைச் சார்ந்தது. தயாரிப்பாளரிடம் கொடுத்த ஒரு கோடியை திருப்பிக் கேட்க முடியாது. கூடாது.


டிஸ்ட்ரிபியூஷன் முறை!


டிஸ்ட்ரிபியூஷன் முறை முற்றிலும் வேறு... படத்தை வாங்க யாரும் முன்வராத நிலையில், எப்படியாவது படத்தை வெளியிட்டால் போதும் என்ற சூழ்நிலையில் டிஸ்ட்ரிபியூஷன் முறையில் படத்தை வெளியிடுகிறார்கள். இரண்டு கோடி மதிப்புள்ள ஏரியாவுக்கு ஒரு கோடியைக் கொடுத்துவிட்டு படத்தை வாங்கி, வெளியிடுவார் விநியோகஸ்தர். படம் வெற்றி பெற்று, தயாரிப்பாளர் மூன்று கோடி என்று விலை சொன்னால்... ஏற்கனவே கொடுத்த ஒரு கோடி போக மீதியைக் கொடுத்து, அவுட்ரைட் செய்து கொள்வார் விநியோகஸ்தர். ஒருவேளை தயாரிப்பாளர் சொல்லும் விலை அதிகம் என்று தெரிந்து, படம் எனக்கு வேண்டாம், நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டால், அவரிடம் வாங்கிய ஒரு கோடியை திருப்பிக் கொடுத்துவிடுவார் தயாரிப்பாளர். அதோடு, அதுவரை வசூலான தொகையில், தான் செய்த செலவையும், பத்து சதவிகித கமிஷனையும் பெற்றுக் கொள்வார் அந்த விநியோகஸ்தர்.


படம் வெற்றி பெறும்போது, இந்த டிஸ்ட்ரிபியூஷன் முறையால் பெரிதாகப் பிரச்சனை இல்லை. தோல்வியடைந்தால் தொலைந்தார் தயாரிப்பாளர். வசூலானது ஒரு கோடி என்று வைத்துக் கொள்வோம். அந்த ஒரு கோடியில் அவருக்கு பத்து சதவிகித கமிஷன் பத்து லட்சம், விளம்பர செலவு, தியேட்டர் மானேஜர்களுக்கு கொடுத்த செலவு இதர செலவுகள் என்று சில லட்சங்களை கணக்குக் காட்டுவார்கள். ஏற்கனவே கொடுத்த ஒரு கோடியில் இந்தத் தொகையை கழித்துக் கொண்டு பாக்கிப் பணத்தை உடனே எடுத்து வை என்பார் விநியோகஸ்தர். படம் ஓடாததினால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தயாரிப்பாளரால் அந்தப் பணத்தை உடனே கொடுக்க முடியாது.


அந்தப்பணத்துக்கு இஷ்டத்துக்கு வட்டியைப் போட்டுக் கொண்டே இருப்பார் விநியோகஸ்தர். அந்தத் தயாரிப்பாளர் மறுபடி படம் எடுக்க மாட்டார் என்று தெரிந்தால், கட்டைப் பஞ்சாயத்து, ஆள் வைத்து மிரட்டுவது என்று பணத்தைப் பிடுங்கிவிடுவார். மறுபடி படம் எடுக்கிறார் என்றால், குறிப்பிட்ட அந்தத் தயாரிப்பாளர் தனக்கு இவ்வளவு தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துவிடுவார். வட்டி, வட்டிக்கு வட்டி என்று போட்டு மூன்று கோடி தர வேண்டும் என்பார். கொடுத்துவிட்டால் பிரச்சனையில்லை. தர மறுத்தால் அவரது அடுத்தப் படத்துக்கு விநியோகஸ்தர் சங்கம் தடை (ரெட்) போட்டு விடும். முதல் படத்தில் நஷ்டப்பட்டு, அதை எப்படியாவது ஈடுகட்ட வேண்டும் என்று இரண்டாவது படம் எடுக்கும்போது, இப்படி செய்தால் என்ன செய்வார் தயாரிப்பாளர்? கேட்ட பணத்தை கொடுத்துத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ்சினிமாவின் வியாபார முறை எத்தனை மோசமானது என்று இப்போது புரிகிறதா?


அன்று எப்படி இருந்தது.?!


தமிழ்த்திரைப்படத்துறையில் ஏறக்குறைய 80கள் வரை விநியோகஸ்தர்கள் நேர்மையானவர்களாக மட்டுமல்ல, திரைப்படத்தயாரிப்பில் பங்களிப்பு செய்பவர்களாகவும் இருந்தார்கள். அதாவது அன்றைய காலக்கட்டத்தில் 10 லட்சம் செலவில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். படம் தயாரிப்பவர் கையில் 2 லட்சம் வைத்திருந்தால் போதும். மீதி பணத்தை விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை எடுத்துவிடுவார்கள். படம் பூஜை போடும் போது 10 சதவிகிதம், முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெறும்போது 10 சதவிகிதம், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும்போது 10 சதவிகிதம், கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெறும்போது 10 சதவிகிதம், பிறகு டப்பிங், ரீரெக்கார்டிங் போன்ற போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெறும்போது 10 சதவிகிதம் என படத்தயாரிப்புநிலையில் இருக்கும்போதே சிறுகச்சிறுக 50 சதகிவிதப்பணத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவார்கள். மிச்சமிருக்கும் 50 சதவிகித பணத்தை படப்பெட்டியை வாங்குவதற்கு முன் செலுத்திவிடுவார்கள். இந்த விநியோகமுறையினால்... தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இரண்டு தரப்பினருமே மகிழ்ச்சியுடன் பணச்சுமை இல்லாமல் வர்த்தகம் செய்தார்கள்.


இன்றைக்கு எப்படி இருக்கிறது?


படத்தின் ஏரியாவை வாங்க வரும் விநியோகஸ்தர் ஒரு லட்சத்தையோ, இரண்டு லட்சத்தையோ அட்வான்ஸாகக் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு விட்டு, பாக்கியை அடுத்த வாரம் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு போய்விடுவார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இருக்காது.


தயாரிப்பாளர் காத்திருக்க, விநியோகஸ்தரோ, குறிப்பிட்ட படத்தை நான்தான் வாங்கியிருக்கிறேன். இந்தப் படத்தை உங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் இவ்வளவு அட்வான்ஸ் கொடுங்கள் என்று ஒவ்வொரு தியேட்டர்காரர்களிடம் வசூல் வேட்டையில் இறங்கி, பல லட்சங்களை தேற்றி இருப்பார். அதோடு, விநியோகஸ்தர் சங்கத்திலும், குறிப்பிட்ட படத்தை தான் வாங்கிவிட்ட தகவலைச் சொல்லி விடுவார். அதை நோட்டீஸ் போர்டிலும் ஒட்டி விடுவார்கள். அதன் பிறகு எந்த விநியோகஸ்தரும் குறிப்பிட்ட அந்தப்படத்தை வாங்க முயற்சிக்க மாட்டார்கள். எந்தப்படத்தின் பெயரைச் சொல்லி தியேட்டர்களில் பணத்தை வசூல் செய்தாரோ அதை அந்தத் தயாரிப்பாளரிடமும் கொடுக்காமல், அந்தப் பணத்தைக் கொண்டு வேறு படத்துக்கு அட்வான்ஸ் கொடுப்பார். அவரிடம் படத்தை விற்று விட்டு, சொன்ன தேதியில் பணம் வராமல் ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர், பொறுத்தது போதும் என்று அவரிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு யாருக்காவது படத்தை விற்க நினைத்தால், நான் வாங்கிய படத்தை இன்னொருவருக்கு விற்கப் பார்க்கிறார் என்று தயாரிப்பாளர் மீது புகார் கொடுப்பார், அந்தப்படத்துக்கு ரெட் போட்டுவிட்டும் விநியோகஸ்தர் சங்கம்.


ரிலீஸுக்கு முந்தைய நாள் தயாரிப்பாளர் அனுபவிக்கும் சித்ரவதைக்கு நிகரான சித்ரவதை உலகத்தில் வேறெதுவுமில்லை. காரணம்.... விநியோகஸ்தர்கள்தான்! பத்து லட்சம் கொடுக்க வேண்டியவர் எட்டு லட்சத்தை எடுத்து வருவார். இருபது லட்சம் கொடுக்க வேண்டியவர் பதினைந்தைக் கொண்டு வருவார். இப்படி எல்லா விநியோகஸ்தர்களுமே கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையில் குறைவான தொகையையே கொண்டு வருவார்கள். கடைசி நேரத்தில் இப்படி கழுத்தை அறுத்தால், படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்தால் போதும் என்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு பெட்டியை கொடுத்து விடுவார்கள்.


எப்படியாவது படம் ரிலீஸானால் போதும் என்று பல தயாரிப்பாளர்கள், தலைவிதியை நொந்து கொண்டு படப் பெட்டியை கொடுக்கவும் செய்கிறார்கள். பட வெளியீட்டின்போது இப்படி பாதிப்பணத்தைக் கொடுப்பதை ஒரு உத்தியாகவே செய்து கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விநியோகஸ்தர்களின் இந்த சூழ்ச்சியைப்புரிந்து கொண்டு துண்டு விழும் தொகையை முன் கூட்டியே ஏற்பாடு செய்து கொண்டு படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்குபவர்களால்தான் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்யவே முடியும். இப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று தெரியாத புதிய தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து படம் எடுத்த பட நிறுவனங்கள் படம் எடுக்காமல்போனதற்கும், புதிதாக படம் எடுக்க வந்தவர்கள் கோடம்பாக்கத்தை நோக்கி புழுதியை வாரி இறைத்துவிட்டுப் போவதற்கும் இப்படிப்பட்ட விநியோகஸ்தர்களே காரணம்.


இந்த வர்க்கம் அழிந்து, படம் எடுப்பவர்களே நேரடியாக படத்தைத் திரையிடும் புதிய தொழில் முறை ஏற்பட்டால் மட்டுமே திரையுலகம் செழிக்கும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படாதவரை திரையுலகின் சிதைவை எவராலும் தடுக்க முடியாது என்பதே யதார்த்தம்.


லிங்கா பட விவகாரத்தில் நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள்... திரைப்படத்துறையில் புதிய வர்த்தகத்துக்கு வழி அமைத்துக்கொடுத்திருக்கிறது. பயன்படுத்திக்கொள்வார்களா பட அதிபர்கள்?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in