பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
வர வர சினிமா மேடையும், அரசியல் மேடை போல ஆகிக்கொண்டிருக்கிறது. அநாகரீக பேச்சுக்களும், நடத்தையும் அரங்கேறத் தொடங்கிவிட்டது. மைக் கிடைத்தால் போதும் எது வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலை வந்திருக்கிறது. இது பாரம்பரிய சினிமா கலைஞர்களையும், தரமான சினிமா ரசிகர்களையும், விமர்சகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா மேடைகள் நாகரீமாக இருந்தது ஒரு காலம். என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்றவர்கள் சினிமா மேடையில் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பினார்கள், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் மக்களுக்கு அரசியலை போதித்தார்கள். ரஜினி, கமல் மக்களுக்கு பொழுதுபோக்கை கொடுத்தார்கள். இப்போது சினிமா மேடைகள் முழுவதுமாக மாறிவிட்டது.
சமீபகாலமாக சினிமா மேடைகளில் நடிகைகள் ஒரு போகப்பொருளாகவும், பொதுச் சொத்தாகவுமே பார்க்கப்படுகிறார்கள். சில நடிகர்கள் பேசும்போது "என்னுடன் நடித்த ...... தனியாக என்னிடம ஒரு நாள்கூட சிரித்து பேசவில்லை. காமெடியன்கூடத்தான் கடலை போட்டுக் கொண்டிருந்தார்" என்று கூசாமல் பேசுகிறார்கள்.
"ஹீரோயின், ஹீரோவைத்தான் கண்டுகொண்டார் என்னை கண்டுகொள்ளவில்லை" என்று காமெடியன்கள் பேசுகிறார்கள். ஹீரோயின்கள் என்றால் ஹீரோக்களிடம் எப்போதும் வழிந்து கொண்டே இருக்க வேண்டுமா என்ன? சில ஹீரோக்கள் "அந்த ஹீரோயின் என்னை அண்ணா என்று அழைத்து ஏமாற்றி விட்டார்" என்பார்கள். பிறகு என்ன உறவு சொல்லி இவர்களை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். "ஹீரோயின் தயாரிப்பாளர் மீதுதான் அன்பாக இருந்தார்" என்று இயக்குனரும், "ஹீரோயினை இயக்குனர் கண்ணிலேயே காட்டவில்லை" என்று தயாரிப்பாளரும் பொது மேடையிலேயே புலம்புகிறார்கள். இதற்கு என்ன பொருள் ஹீரோயின்களிடம் இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்.
அந்த நடிகையின் கண் அழகு, இடுப்பு அழகு , அது அழகு, இது அழகு என்பார்கள். இந்த வர்ணனைகள் எதற்காக. இதையெல்லாம் தாண்டி இப்போது சமீபகாலமாக வேறு மாதிரியான தோற்றங்களை சினிமா மேடை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சில சமீபத்திய உதாரணங்கள்...
நான் சிகப்பு மனிதன் பாடல் வெளியீட்டு விழாவில் விஷ்ணு பேசும்போது "நான் லட்சுமி மேனனை பார்க்க பலமுறை செட்டுக்கு போனேன். கடைசி வரை விஷால் அவரை கண்ணில் காட்டவில்லை" என்றார். சம்பந்தமில்லாத பட செட்டுக்கு இவர் ஏன் போகவேண்டும். விஷால் நண்பர் என்றால் அவர் ஏன் அவருக்கு ஏன் லட்சுமி மேனனை இவருக்கு காட்ட வேண்டும் என்று புரியவில்லை.
பூஜை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா "பூஜை தைரியாமாக பொங்கலுக்கு கொண்டு வருகிறேயே என்று விஷாலிடம் கேட்டேன். அதற்கு அவர், எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்றார்" என்று ஆர்யா பேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு நாள் விஷால் "ஆர்யா அப்படி பேசியது எனக்கு அதிர்ச்சி. யாரும் பிரச்னையாக்கிவிடுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளை எதுவும் நடக்கவில்லை இனி பட விழாக்களுக்கு நண்பர்களை அழைக்க மாட்டேன்" என்று கூறவேண்டிய நிலை வந்தது.
ஆர்யா தன் தம்பி நடித்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தியபோது, அதில் நயன்தாரா, தரிஷா, ஆண்ட்ரியா, பூஜா கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர்கள் ஆர்யாவை நடிகைகள் ஏன் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவர் மச்சக்காரன், கொடுத்து வைத்தவர், எங்க பிக்அப் பண்ணுகிறார். எங்க டிராப் பண்ணுகிறார் என்று தெரியவில்லை. அந்த ரகசியத்தை ஆர்யா எங்களுக்கும் சொல்லித் தரவேண்டும், என்ற தங்கள் ஆதங்கத்தை, வயிற்றெரிச்சலை பல வித பேச்சுக்களால் வெளிப்படுத்தினார்கள்.
பவர் ஸ்டாராக உருவெடுத்திடுக்கும் அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன் "நானே பணம் இல்லாமல் செக் கொடுப்பதில் வல்லவன், சினிமா தயாரிப்பாளர்கள் எனக்கே பவுன்ஸ் செக் தருகிறார்கள். பணம் இல்லாமல் ஏன் படம் எடுக்க வருகிறார்கள்" என்று பேச... கடுப்பான தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா "சதாரண சித்த வைத்தியர், பவர் ஸ்டாரானது தயாரிப்பாளர்களால்தான் இப்படி மேடையில் பேசுவது. இதுதான் கடைசி முறையாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்தார்.
வஜ்ரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் மயில்சாமி பேசும்போது... குரங்களுக்கு மது ஊற்றிக் கொடுத்து ரசித்த கதையை சொல்ல, விலங்குகள் நல வாரியம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. "அய்யய்யோ... அது சும்மா காமெடிக்காக பேசியது...மன்னிச்சுசூ..." என்று சரணாகதி அடைய பிரச்சினையிலிருந்து தப்பித்தார்.
இவைகள் ஒரு சில உதாரணங்கள்தான். சொல்லப்படாத உதாரணங்கள் நிறைய இருக்கிறது. சினிமா மகத்தான மக்கள் ஊடகம். அதில் இருப்பவர்கள் கண்ணியமாக இருக்க வேண்டியது சமூக கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போதுதான் மேடை நாகரீகம் வளரும், படைப்பாளிகள் பண்பட்டவர்களாக இருந்தால்தான் படைப்பும் பண்பட்டதாக மக்களை பக்குவப்படுத்துவதாக இருக்கும்.