Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழ்த் திரையுலக வாரிசுகள்... ஒரு கண்ணோட்டம்!

31 ஜன, 2015 - 10:13 IST
எழுத்தின் அளவு:

தமிழ்நாட்டில் எதற்குப் பஞ்சம் வருகிறதோ இல்லையோ வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. தமிழ்நாட்டு அரசியலில் கூட வாரிசுகள் குறைவுதான், ஆனால் தமிழ்த் திரையுலகில் வாரிசுகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இன்று(ஜன., 31ம் தேதி) மேலும் ஒரு புதிய வாரிசாக விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் 'சகாப்தம்' படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல வாரிசுகள் கலந்து கொண்டு வாழ்த்த இருக்கிறார்கள்.


விஜயகாந்த் வாரிசு சண்முகபாண்டியன்


80களில் நாயகர்களாக அறிமுகமாகி தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நாயகர்கள் பலரின் வாரிசுகளும் தற்போது நடிகர்களாக அறிமுகமாகிவிட்டார்கள். அதில் எஞ்சியிருந்தவர் விஜயகாந்த் மட்டுமே, அவருடைய வாரிசு அறிமுகமாகும் படமும் இசை வெளியீடு வரை வந்தாயிற்று, விரைவில் படமும் வெளியாகி விடும்.


விஜயகாந்த், எம்.ஏ.காஜா இயக்கிய 'இனிக்கும் இளமை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்தாலும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டு தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களிலும், குடும்பப் பாங்கான படங்களிலும் நடித்து தன்னைம் திரையுலகில் வெற்றிகரமான நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டவர். இவருடைய வாரிசு சண்முகப் பாண்டியன் 'சகாப்தம்' படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.


80களில் கோலோச்சிய நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், பிரபு, அர்ஜுன், முரளி, தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரது வாரிசுகள் ஏற்கெனவே களத்தில் உள்ளார்கள். முதலில் இவர்களின் வாரிசுகளைப் பற்றிப் பார்ப்போம்.


ரஜினி வாரிசுகள் - ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா


பெங்களூரிலிருந்து வந்து நடிப்புப் பயிற்சியில் படித்த சிவாஜிராவைப் பார்த்து, அவருக்கு ரஜினிகாந்த் எனப் பெயரிட்டு தான் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாலச்சந்தர். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக குணச்சித்திரக் கதாபாத்திரம், வில்லன் என நடித்து தனது திறமையை உயர்த்தி நாயகனாகவும் வளர்ந்து 80களில் தமிழ் சினிமாவில் ஆட்சி புரிய ஆரம்பித்தார் ரஜினிகாந்த். இன்று வரை ஒரே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார்.


இவருடைய மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், இருவருமே திரையுலகத்தில் இயக்குனர்களாக மாறிவிட்டார்கள். ஐஸ்வர்யா '3' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சௌந்தர்யா, தன்னுடைய அப்பா நடித்த 'கோச்சடையான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஐஸ்வர்யா தற்போது 'வை ராஜா வை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.


கமல் வாரிசுகள் - ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன்


'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், இளமைப் பருவத்தை எட்டியதும் இயக்குனர் பாலசந்தரால் புடம் போடப்பட்டு 'அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின், நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தவருக்கு 'அபூர்வ ராகங்கள்' படம் திருப்புமுனையாக அமைந்தது. அன்று ஆரம்பித்த கமல்ஹாசனின் வெற்றிப் பயணம் இன்று வரை பல அபூர்வ கதாபாத்திரங்களிலும் நடித்து 'உலக நாயகன்' என அவரது ரசிகர்களால் பாராட்டப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது.


அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசன் '7ம் அறிவு' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். ஆனாலும், அதற்கு முன்பே ஹிந்தி, தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது விஜய்யுடன் 'புலி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இளைய மகள் அக்ஷராஹாசன் நாயகியாக அறிமுகமாகும் 'ஷமிதாப்' ஹிந்தித் திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ளது.


சத்யராஜ் வாரிசு சிபிராஜ்


சின்னச் சின்ன அடியாள் கதாபாத்திரங்களில் 'எஸ் பாஸ்' என்ற வசனத்தைப் பேசி நடிக்க ஆரம்பித்து, அப்படியே வளர்ந்து 'காக்கிச் சட்டை' படத்தின் மூலம் 'தகடு தகடு' எனப் பேசி வியக்க வைத்து 'கடலோரக் கவிதைகள்' படத்தில் நாயகனாகவும் நடித்து இன்று வரை நடித்துக் கொண்டிருப்பவர் சத்யராஜ். 'கடலோரக் கவிதைகள்' படத்திற்கு முன்பே 'சாவி, இரவுப் பூக்கள்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


இவருடைய வாரிசு சிபிராஜ் 'ஸ்டூடன்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவிற்கு ஓடினாலும் தொடர்ந்து அவரால் தனி நாயகனாக காலூன்ற முடியவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வந்த 'நாய்கள் ஜாக்கிரதை' அவருக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையைக கொடுத்துள்ளது.


கே.பாக்யராஜ் வாரிசுகள் சாந்தனு மற்றும் சரண்யா


பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து அப்படியே கதை, வசனகர்த்தாவாக மாறி 'புதிய வார்ப்புகள்' படத்தில் நாயகனாகவும் அறிமுகமானவர் கே.பாக்யராஜ். அடுத்து அவருடைய இயக்கம் நடிப்பில் வந்த 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படமும் வெற்றி பெற்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து திரைக்கதை மன்னன் என பெயரெடுத்தவர். தமிழ்த் திரையுலகில் திரைக்கதை சொல்லும் விதத்தில் இன்று வரை இவரை மிஞ்ச யாரும் வரவில்லை.


இவருடைய மகன் சாந்தனு, அப்பா பாக்யராஜ் இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'வேட்டிய மடிச்சுக் கட்டு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் 'சக்கரக்கட்டி' படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் இன்னும் திருப்புமுனையான படம் இவருக்கு அமையவில்லை. விரைவில் இவர் நடித்துள்ள 'வாய்மை' திரைப்படம் வெளிவர உள்ளது.


பாக்யராஜின் மகளான சரண்யா, அப்பா இயக்கிய 'பாரிஜாதம்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அவர் அடுத்து நடித்த 'திக் திக்' படம் பல ஆண்டுகளாக வெளிவராமலே இருக்கிறது. அதன் பின் ஏனோ நடிப்பதை விட்டே விலகிவிட்டார்.


டி.ராஜேந்தர் வாரிசுகள் - சிம்பு மற்றும் குறளரசன்


'ஒருதலை ராகம்' படம் அந்தக் காலத்தில் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம். புதுமுகங்களால் சாதிக்க முடியும் என நிரூபித்த அந்தப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் டி.ராஜேந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் கோலோச்சிய 80களில் அவர்களுக்கு இணையாக இவரது படங்களும் வசூலை வாரிக்குவித்தன. இப்போதும் 'ஒரு தலைக் காதல்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இவருடைய மகன் சிலம்பரசன், அப்பா இயக்கத்தில் குழந்தையாக இருந்த போதே நடிக்க ஆரம்பித்தார், தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர் அப்பா டி.ராஜேந்தர் இயக்கிய 'காதல் அழிவதில்லை' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வெற்றிகளையும், தோல்விகளையும் சரிக்கு சமமாகக் கொடுத்து வருபவர். சிறிய இடைவெளிக்குப் பிறகு 'இது நம்ம ஆளு' படத்துடன் விரைவில் திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளார்.


டி.ஆரின் இளைய மகன் குறளரசன் அண்ணன் வழியில் நடிக்கப் போகாமல் 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


கார்த்திக் வாரிசு - கௌதம் கார்த்திக்


குணச்சித்திர நடிகராகவும், நாயகனாகவும் வெற்றிகரமாக வலம் வந்த முத்துராமனின் மகன் கார்த்திக் பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்து அந்தக் காலத்தில் பல பெண்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் என்று பெயர் பெற்றார். இப்போதும் 'அனேகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இவருடைய வாரிசு கௌதம், மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமானார். அடுத்து இவர் நடித்த 'என்னமோ ஏதோ' படமும் தோல்வியடைந்தது. தற்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் 'வை ராஜா வை' படத்த எதிர்பார்த்துக் காத்துள்ளார்.


பிரபு வாரிசு - விக்ரம் பிரபு


நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வாரிசான பிரபு அப்பா நாயகனாக நடித்த 'சங்கிலி' படத்தில் வில்லனாக அறிமுகமானார். அடுத்து கதாநாயகனாக உயர்ந்தவர் பல வெற்றிப் படங்களில் நடித்து, இன்று தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


இவருடைய மகன் விக்ரம் பிரபு 'கும்கி' படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து நடித்த 'இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு,' படங்கள் இவருக்கு சுமாரான வெற்றியைக் கொடுக்க சமீபத்தில் இவர் நடித்து வந்த 'வெள்ளக்கார துரை' அதிக வசூலை அள்ளிக் கொடுத்தது. தற்போது 'இது என்ன மாயம்' படத்தில் நடித்து வருகிறார்.


அர்ஜூன் வாரிசு - ஐஸ்வர்யா


கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அர்ஜூன் என்ற நடிகரை தன்னுடைய 'நன்றி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தார் இராம.நாராயணன். தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களில் நடித்து ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்தார் அர்ஜுன். கடந்த ஆண்டு இவர் இயக்கி, நடித்து வெளிவந்த 'ஜெய்ஹிந்த் 2' படமும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.


இவருடைய வாரிசான ஐஸ்வர்யா, விஷால் நாயகனாக நடித்த 'பட்டத்து யானை' படத்தில் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றி பெறாததால் தொடர்ந்து ஐஸ்வர்யா நடிக்காமல் இருக்கிறார். விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


முரளி வாரிசு - அதர்வா


பாலசந்தர் தயாரிப்பில் வெளிவந்த 'பூ விலங்கு' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் முரளி. தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்து தனக்கென்றும் ரசிகர்களை உருவாக்கியவர். இன்றும் காதலைச் சொல்லாத நாயகன் என்று பேசப்படுபவர். 'இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க' படங்கள் என்றும் மறக்க முடியாதவை.


இவருடைய வாரிசு அதர்வா 'பாணா காத்தாடி' படம் மூலம் நயகனாக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் வெளிவந்த 'பரதேசி' படம் அதர்வாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. விரைவில் இவர் நடித்துள்ள 'சண்டி வீரன்' படம் வெளிவர உள்ளது.


தியாகராஜன் வாரிசு - பிரஷாந்த்


பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் தியாகராஜன். தொடர்ந்த சில படங்களில் வில்லனாக நடித்தாலும் அப்படியே நாயகனாகவும் மாறி சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்க, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்தவர். இயக்குனராகவும் சில வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.


இவருடைய வாரிசு பிரசாந்த் 'வைகாசி பொறந்தாச்சு' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தவருக்கு தற்போது ஒரு சிறிய இடைவெளி. இவர் தற்போது நாயகனாக நடித்துள்ள 'சாகசம்' படம் விரைவில் வெளியாக உள்ளது.


ஆனந்த் பாபு வாரிசு - கஜேஷ்


நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனான ஆனந்த் பாபு, 'நியாயம் கேட்கிறேன்' என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின் அவர் நடித்து வெளிவந்த 'பாடும் வானம்பாடி' படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. “சிகரம், சேரன் பாண்டியன், வானமே எல்லை, புது வசந்தம், நான் பேச நினைப்பதெல்லாம்'' ஆகிய படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.


இவருடைய வாரிசு கஜேஷ் கடந்த ஆண்டு வெளிவந்த 'கல்கண்டு' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.


பாண்டியராஜன் வாரிசு - பிருத்வி


பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜன் 'கன்னிராசி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரே இயக்கி நாயகனாக நடித்த 'ஆண் பாவம்' படம் அப்போது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. காமெடி கலந்த நாயகன் கதாபாத்திரத்தில் தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.


இவருடைய வாரிசு பிருத்வி, அப்பா இயக்கத்தில் வெளிவந்த 'கை வந்த கலை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனார். தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நாயகனாக நடித்தார். ஆனால், இவருக்கு இன்னும் திருப்புமுனையாக எந்தப் படங்களும் அமையவில்லை.


சிவக்குமார் வாரிசுகள் - சூர்யா மற்றும் கார்த்தி


மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாரிசுகள் எல்லாம் 80களில் தமிழ்த் திரையுலக ஆட்சி புரிந்தவர்களின் வாரிசுகள். ஆனால், அதற்கும் முன்பே திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி 80களிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சிவக்குமார்.


இவருடைய வாரிசுகளான சூர்யா, கார்த்தி இருவருமே வெற்றிகரமான நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சூர்யா மணிரத்னம் தயாரித்த 'நேருக்கு நேர்' படத்திலும், கார்த்தி, அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' படத்திலும் நாயகனாக அறிமுகமானார்கள். அண்ணன், தம்பிகளாக இருந்தாலும் ஆளுக்கொரு பாதையில் சூர்யாவும், கார்த்தியும் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.


சரத்குமார் வாரிசு - வரலட்சுமி


நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சிம்பு ஜோடியாக 'போடா போடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.


நடிகர்களின் வாரிசுகளைத் தவிர தயாரிப்பாளர்களின் வாரிசுகளும், இயக்குனர்களின் வாரிசுகளும், இசையமைப்பாளர்களின் வாரிசுகளும், தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகளும் என தமிழ்த் திரையுலகம் 'வாரிசு' களால் நிறைந்து காணப்படுகிறது.


* இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசுகளான கார்த்திக் ராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இசையமைப்பாளர்களாக உள்ளனர். மகள் பவதாரிணி பின்னணிப் பாடகியாக உள்ளார்.


* இசையமைப்பாளர் தேவாவின் வாரிசு ஸ்ரீகாந்த் தேவாவும் இசையமைப்பாளராக உள்ளார்.


* இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரசின் வாரிசுகளான வெங்கட் பிரபு இயக்குனராகவும், பிரேம்ஜி நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.


* இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமாக வலம் வர முடியாததால் தற்போது 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தை இயக்க உள்ளார்.


எஸ்.ஏ.சி.யின் வாரிசு - விஜய்


இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் வாரிசான விஜய் அப்பா இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் சில படங்களில் சிறுவனாக நடித்தவர். அப்பா இயக்கத்தில் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' படத்தில் நாயகனாக அறிமுகமானார். இன்று தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பெரிய அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.


பி.வாசுவின் வாரிசு - ஷக்தி


இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி குழந்தை நட்சத்திரமாக 'சின்னத் தம்பி' படத்தில் நடித்தார். பின்னர் 'தொட்டால் பூ மலரும்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனாலும் இன்னும் பெரிய வெற்றிகளைக் கொடுக்காமலே இருக்கிறார்.


கஸ்தூரி ராஜாவின் வாரிசுகள் - செல்வராகவன் மற்றும் தனுஷ்


இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன்களான செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இளைய மகன் தனுஷ் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நாயகனாக அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அமிதாப்புடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.


எடிட்டர் மோகனின் வாரிசுகள் - 'ஜெயம்' ராஜா மற்றும் 'ஜெயம்' ரவி


தயாரிப்பாளரும், எடிட்டிருமான மோகனின் மூத்த மகன் 'ஜெயம்' ராஜா, 'ஜெயம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது 'தனியொருவன்' படத்தை இயக்கி வருகிறார். 'ஜெயம்' படத்தில் நயாகனாக அறிமுகமான 'ஜெயம்' ரவியும் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.


ஜி.கே.ரெட்டியின் வாரிசுகள் - அஜய் மற்றும் விஷால்


தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மூத்த மகன் விக்ரம் கிருஷ்ணா, அஜய் என்ற பெயிரில் சிவாஜிகணேசன் நடித்த 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். அடுத்து 'லவ் மேரேஜ்' படத்தில் நடித்து விட்டு அதன் பின் நடிப்பதை விட்டுவிட்டார்.


இவருடைய இளைய மகன் விஷால் 'செல்லமே' படத்தில் நாயகனாக அறிமுகமாகி , தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது தமிழில் முன்னணி நடிகராக உள்ளார்.


ஆர்.பி.சௌத்ரியின் வாரிசுகள் - 'ஜித்தன்' ரமேஷ் மற்றும் ஜீவா



தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ் 'ஜித்தன்' படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவரால் வெற்றிகரமாக ஜொலிக்க முடியவில்லை. இவரின் இளைய மகன் ஜீவா 'ஆசை ஆசையாய்' படத்தில் நாயகனாக அறிமுகமானாலும், அமீர் இயக்கிய 'ராம்' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த்து. வெற்றி, தோல்வி என மாறி மாறி தவித்துக் கொண்டிருந்தாலும் திறமையான நடிகர் என பெயரைப் பெற்றுவிட்டார் ஜீவா.


தமிழ்த் திரையுலக வாரிசுகளைப் பற்றி இன்னும் கூட சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு நீ.........ளமான பட்டியல் உள்ளது. இருந்தாலும் வாரிசு என்பது ஒருவரது அடையாளமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்றால் அதற்கென்று திறமை இருந்தால் மட்டுமே முடியும்.


எல்லா வாரிசுகளுமே சாதித்து விடவில்லை. அவர்களுக்குள் இருக்கும் திறமையும், உழைப்பும், ஆர்வமும்தான் படிக்கட்டுக்களாக அமைந்து அவர்களை வெற்றி என்ற உயரத்திற்குக் கொண்டு செல்கிறது.


கமல்ஹாசன் ஒரு விழாவில் இந்த 'வாரிசு' பற்றி பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. “ஜீன்' இருந்தாலும், கடுமையாக உழைத்தால்தான் வெற்றி பெற முடியும்”, என்று நடிகர் திலகம் குடும்பத்தின் வாரிசு விக்ரம் பிரபுவின் 'சிகரம் தொடு' இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதுதான் உண்மை...வாரிசு என்பதையும் மீறி உழைப்புதான் ஒரு மனிதனின் நிலையைத் தீர்மானிக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in