இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாட்டின் அதிக அதிகாரமிக்க பாராளுமன்றம், நீதிமன்றம் தொடங்கி அரசாங்க அமைப்புகள் அனைத்துமே மக்கள் நலன் சார்ந்து இயங்குவதற்காக உருவாக்கப்பட்டவையே!
இதற்கு எந்தவொரு அரசுத்துறைகளுமே விதிவிலக்கில்லை. திரைப்படங்களை கண்காணிக்கவும், அவற்றை தணிக்கை செய்வதற்காகவும் தொடங்கப்பட்ட தணிக்கைக்குழுவும் இந்த வரையறைக்குள் அடங்கக்கூடிய அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சென்னையில் இயங்கும் சென்சார் போர்டு என்கிற திரைப்படத் தணிக்கைக்குழுவின் சமீபகால நடவடிக்கைகளை கவனிக்கும்போது, அது தன் அதிகார எல்லையை மறந்து வரம்புமீறி செயல்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, தணிக்கைக்குழு அடிக்கடி தன் கடமையிலிருந்து தவறி வருவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
பெரிய தயாரிப்பாளரிள் படம் - சிறிய தயாரிப்பாளரின் படம், பிரபல இயக்குநரின் படம் - புதுமுக இயக்குநரின் படம், முன்னணி நடிகர்களின் படம் - அறிமுக நடிகர்களின் படம் என திரைப்படத்தணிக்கையின் போது பாகுபாடு காட்டப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் என்னை அறிந்தால் படம் தணிக்கை செய்யப்பட்டபோதும், விதிமீறல் நடைபெற்றுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 23.01.2015 அன்று என்னை அறிந்தால் திரைப்படம் தணிக்கைக்குழுவினருக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தில் ஆக்ஷன் என்ற பெயரில் அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் என்னை அறிந்தால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், என்னை அறிந்தால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதில் சென்னை மண்டல தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி விதியை மீறியதோடு, என்னை அறிந்தால் படத்தின் தயாரிப்பாளருக்கு சாதகமான வேலை ஒன்றையும் செய்திருக்கிறார் என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.
அதாவது, என்னை அறிந்தால் படத்தில் சில காட்சியில் விலங்கினம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று ஒரு கடிதம் வாங்கி தணிக்கை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்டால்தான் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்.
என்னை அறிந்தால் படத்துக்காக இந்த விதியை மீறி இருக்கிறார் பக்கிரிசாமி. தணிக்கை விண்ணப்பத்துடன், விலங்குகள் நல வாரியத்தின் கடிதம் இல்லை என்று தெரிந்தே என்னை அறிந்தால் படத்தை தணிக்கைக்காக பார்க்க முன் வந்த பக்கிரிசாமி, அந்தக்கடிதத்தை வாங்காமலே என்னை அறிந்தால் படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி இருக்கிறார். சிறு படத்தயாரிப்பாளர்களிடம் படு கறாராக நடந்து கொள்ளும் தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி, தற்போது என்னை அறிந்தால் படத்துக்கு சாதகமாக நடந்து கொள்வதற்காக விதிகளை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்.
ஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் பக்கிரிசாமி? சென்னை மண்டல தணிக்கை அதிகாரியாக பதவி ஏற்றபோது நேர்மை தவறாத அதிகாரியாக இருந்த பக்கிரிசாமிக்கு சினிமாக்காரர்களிடம் சினேகம் ஏற்பட்ட பிறகு அவரது போக்கில் நிறைய மாற்றம் தென்படுவதாக தணிக்கை அலுவலகத்திலேயே ஆதங்கமாக பேசிக்கொள்கிறார்கள்.
இன்னொரு சம்பவம்..! கடந்த வருடம் வெளியான ஒரு திரைப்படத்தில், ஆண்குறி என்ற அர்த்தம் கொண்ட ஹிந்தி வார்த்தையை ஒரு கதாபாத்திரம் பேசுவதாக ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இது குறித்து நம் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, அது குறித்து விளக்கம் கேட்டபோது, அப்படியா.. அந்த வசனம் கெட்டவார்த்தைதான். ஆனால் குறிப்பிட்ட அந்தப்படத்தில் அந்த வசனம் இருப்பது எனக்கு தெரியாது என்று பொறுப்பற்றமுறையில் பதில் சொன்னார் சென்னை மண்டல திரைப்படத் தணிக்கைக்குழுவின் அதிகாரியான பக்கிரிசாமி.
திரைப்பட தணிக்கைக்குழு என்பது இன்று நேற்றல்ல, காலம் காலமாகவே கடமையிலிருந்து தவறி பாராபட்சமாக நடந்து கொள்வதை தன் குணமாகவே வைத்திருக்கிறது. என்றாலும் பக்கிரிசாமி அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, இந்த போக்கு அதிகமாகிவிட்டதாக சமூக ஆர்வலர்களும், திரைப்படத்துறையினருமே குற்றம் சாட்டுகின்றனர்.
துப்பாக்கி, மான்கராத்தே, கத்தி, ஐ என தொடர்ந்து பல படங்களில் பெண்கைளை இழிவுபடுத்தக்கூடிய பொட்டை என்ற வார்த்தை சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பற்றி தணிக்கைக்குழுவினர் கண்டு கொள்வதே இல்லை. காரணம்..மேற்சொன்ன அத்தனை படங்களுமே பெரிய இயக்குநர்களின், நிறுவனங்களின் படங்கள்.
திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகளிலும், மதுபாட்டில்கள் இருக்கும் காட்சிகளிலும் குடி குடியைக் கெடுக்கும் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என்பது விதி. அண்மையில் வெளியான லிங்கா படத்தில் ரஜினி ரயிலில் வரும் காட்சியில் பின்னணியில் மது பாட்டில்கள் இடம்பெற்றிருக்கும். இன்னொரு காட்சியில் ரஜினியின் பார்ட்டியில் வெள்ளைக்கார கவர்னரும் சியர்ஸ் சொல்லி மது குடிப்பார்கள். இந்த இரண்டு காட்சிகளிலும் குடி குடியைக் கெடுக்கும் வாசகம் இடம்பெறவில்லை. காரணத்தை பக்கிரிசாமிதான் விளக்க வேண்டும். சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஐ படத்தில் திருநங்கைகள் இழிவு செய்யப்பட்ட விவகாரத்திலும் தணிக்கைக்குழு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. அதுமட்டுமல்ல, ஐ படத்துக்கு ஆதரவாக பேட்டியளித்தார் தணிக்கை அதிகாரி.
ஐ படத்தால் திருநங்கைகளுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு, ஐ திரைப்படத்தில் ஒரு திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றார். அவரை கதாநாயகனும் அவருடைய நண்பனும் பாட்டுப் பாடி கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் உள்ள ஒரு சிலர் திருநங்கைகளை பார்ப்பது போன்று தான் படத்தின் கதாநாயகனும் திரைப்படத்தில் பார்க்கிறார். இந்த ஒரு காட்சியை மட்டும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவது சரியான அணுகுமுறையல்ல. படத்தின் கதை அமைப்பிலேயே அப்படி ஒரு காட்சி தேவைப்படுவதால் அதனை அனுமதித்தோம். இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்த நிலைக்கு போக வேண்டும்.
- என்று பதில் அளித்திருக்கிறார்.
சினிமாவை பார்த்து தாங்கள் கிண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக திருநங்கைகள் கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு, திருநங்கைகளுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினையை போக்க சமுதாயமே சேர்ந்து மாற்ற வேண்டும். அனைவரும் இந்த விஷயத்தில் இணைந்து பாடுபட வேண்டும். மாறாக சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து முடிவெடுக்க கூடாது. மாறாக காட்சியையும் தடை செய்யுங்கள் என்று கூற கூடாது. திரைப்பட காட்சியை பார்த்து கிண்டல் செய்யும் வக்கிரபுத்தி கொண்டவர்களை போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதே ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அழகாகும். என்று பொறுப்பற்றமுறையில் பதில் அளித்து தன் கடமையை தட்டிக்கழித்திருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்து, சினிமாக்காரர்களுக்கு சாதகமான ஒரு கருத்தையும் கூறி அதை பொதுக்கருத்தாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார் தணிக்கை அதிகாரி. அதாவது, தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு யு சான்றிதழ் கிடைத்தால்தான் தமிழக அரசிடமிருந்து வரிவிலக்கு கிடைக்கும். யு/ஏ அல்லது ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டால் வரிவிலக்கு கிடைக்காது. எனவே தணிக்கையின்போது யு வாங்குவதற்காக பல வேலைகளை தயாரிப்பாளர்கள் செய்து வருகின்றனர். யு கிடைத்துவிட்டால் வரிவிலக்கு என்ற பெயரில் சுமார் ஐந்து கோடிவரை கூடுதல் லாபம் அடைகின்றனர் தயாரிப்பாளர்கள். இது அனைத்தும் மக்களுக்கு சேர வேண்டிய பணம். அதை அவர்களுக்கு கொடுக்காமல் தாங்களே பங்குபோட்டுக்கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் யுஏ சான்றிதழ் பெற்ற படங்களுக்கும் வரிவிலக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார் தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி.
இப்படி ஒரு கோரிக்கையை தயாரிப்பாளர்களே வைக்காதபோது இவருக்கு என்ன வந்தது? இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது பக்கிரிசாமியின் தலைமையிலான சென்னை மண்டல தணிக்கைக்குழு வரம்பு மீறுவதாகவே தோன்றுகிறது.