உலகம் சுற்றும் வாலிபன் விஷால்!
20 ஜன, 2015 - 12:32 IST
பொங்கலுக்கு வெளியிட தயார்நிலையில் இருந்த கொம்பன், காக்கிசட்டை, அனேகன் உட்பட பல படங்கள் ஐ படத்தின் ரிலீஸுக்கு பயந்து பின்வாங்கி பதுங்கிக்கொண்டன.
ஆம்பள என்ற தலைப்புக்கு ஏற்ப ஐ படத்தைக் கண்டு அஞ்சாமல் களத்தில் இறங்கியது விஷாலின் ஆம்பள படம். விஷாலின் தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசாக ஆம்பள படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்திருக்கிறது. அப்படத்தின் சூப்பர்ஹிட் வெற்றி தந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்கள் நடிகர் விஷாலும், இயக்குநர் சுந்தர்.சியும். பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி வெளியான ஆம்பள படம் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 20 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகக் கூறுகிறது விஷால் தரப்பு. அது மட்டுமல்ல, விஷால் நடித்த படங்களிலேயே ஆம்பள படத்துக்குக் கிடைத்த ஓப்பனிங் மிகப்பெரிய ஓப்பனிங்காகவும் கருதப்படுகிறது. ஆம்பள படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷாலுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படம் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாம். இதே பாணியில் ஒரு படத்தை இயக்க வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாராம் இயக்குனர் சுந்தர்.சி. ஆனால், அதேபோன்ற படத்தை எடுக்க வேண்டுமென்றால் பல நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அந்தத் திட்டத்தை தள்ளிப்போட்டு வைத்திருந்தாராம். இப்போது ஆம்பள வெற்றி தந்த உற்சாகத்தில் விஷாலையே நாயகனாக வைத்து அப்படத்தை இயக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம். இப்படத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் துவங்கும் என்று என்று சொன்ன இயக்குனர் சுந்தர்.சி சொல்லாத விஷயம்...அந்தப்படத்துக்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற டைட்டிலையே வைக்க இருக்கிறார் என்பதுதான். இதற்கான முயற்சியில் ரகசியமாக இறங்கி இருக்கிறார்.
Advertisement
பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்