ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கருப்பு வெள்ளை சினிமா கலர் சினிமாவாக மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி. நடிகைகளின் ரசிப்பை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதையும் தாண்டி ஒரு நடிகையையும் தனியாக ரசிக்கத் தொடங்கியது சரோஜாதேவியிடமிருந்துதான்.
பானுமதி, சாவித்ரி, பத்மினி, அஞ்சலிதேவி என தமிழ் நாட்டில் நடுத்தர வயதை தாண்டிய ஹீரோயின்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் 23 வயதில் துள்ளித் திரியும் புள்ளிமான் என பளிச்சென்று நுழைந்து பரவசப்படுத்தினார். இதுவும் எளிதில் நடந்து முடிந்து விடவில்லை. திடீரென்று ஒரே படத்தில் அவர் பிரபலமானது கன்னடத்தில்தான். தமிழில் படிப்படியாகத்தான் அவர் நம்பர் ஒண் இடத்தை பிடித்தார்.
சரோஜாதேவி பெங்களூரைச் சேர்ந்த பணக்கார வீட்டு பெண். கான்வெண்டில்தான் படித்தார். அப்பா பெரிய போலீஸ் அதிகாரி. சரோஜாதேவி நன்றாக பாடுவார். அவரை நல்ல பாடகியாக்க வேண்டும் என்றுதான் அவர் தந்தை விரும்பினார். கன்னட நடிகரான ஹொன்னப்ப பாகவதர் முன் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் சரோஜாதேவி பாடினார். எல்லோரும் அவர் பாட்டை ரசித்துக் கொண்டிருக்க பாகவதர், சரோஜாதேவியின் அழகையும், அவரது முகபாவங்களையும் கவனித்தார். இவர் பாடகியாக வேண்டியவர் அல்ல நடிகையாக வேண்டியவர் என்பதை கணித்தார். சரோஜாவின் அப்பாவிடம் "என் படத்தில் உங்கள் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன். அவள் பெரிய இடத்துக்கு வருவாள்" என்றார். ஆனால் சரோஜாதேவியின் தந்தைக்கு மகள் நடிகையாவதில் விருப்பம் இல்லை.
தொடர்ந்து பாகவதர் வற்புறுத்தலாலும், கவி காளிதாஸ் படத்தின் கதை கன்னியமானது என்பதாலும் "இந்த ஒரு படத்தில்தான் நடிப்பாள்" என்ற நிபந்தனையோடு நடிக்க சம்மதித்தார். 1955ம் ஆண்டு வெளிவந்த கவி காளிதாஸ் கன்னடப்படம் அதிரிபுதிரி ஹிட். கன்னட ரசிகர்கள் சரோஜாதேவியை கொண்டாடினார்கள். தினமும் நூற்றுக்கணக்கானபேர் அவரை பார்ப்பதற்காக வீட்டு முன் திரண்டார்கள். அந்த புகழைப் பார்த்தும் மகளை முழுநேர நடிகையாக சம்மதித்தார் தந்தை. அதன் பின் அவர் நடித்த கன்னட படங்கள் அனைத்தும் ஹிட்டானது.
அப்போது தென்னிந்திய படங்கள் அனைத்தும் சென்னையில்தான் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகைகளுக்கும் தமிழ் சினிமா மீது ஒரு கண் இருக்கும். அப்படி சரோஜாதேவிக்கும் இருந்தது.
இல்லறமே நல்லறம் படத்தில் ஒரு நாட்டியக்காரி வேடத்தில் அறிமுகமானார். யார் இந்தப் பெண் இத்தனை அழகாக இருக்கிறாளே என்று எல்லோரும் கவனித்தார்கள். அப்படி கவனித்தவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். அவர் தனது சொந்த படமான நாடோடி மன்னன் படத்தில் இரண்டாம் பகுதியில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அதுதான் சரோஜாதேவியை தமிழ்நாட்டுக்கே அடையாளம் காட்டியது. அதன் பிறகு திருடாதே, தாய் சொல்லை தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, அன்பே வா படங்களில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடிகளாக வலம் வந்தார்கள்.
எம்.ஜி.ஆருடன் கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்தாலும் கல்யாண பரிசு, பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை படங்களில் சிவாஜியோடு போட்டிபோட்டு நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தனித்தனி குரலில் டி.எம்.சவுந்தராஜன் பாடியதைப்போல இருவர் படத்துக்கும் தனித்தனி நடிப்பை வழங்கினார் சரோஜாதேவி. 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரோஜாதேவி தமிழில் கடைசியாக நடித்த படம் ஆதவன்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், வாழ்நாள் சாதனையாளர் என பல தேசிய விருதுகளை பெற்றுள்ள சரோஜாதேவிக்கு இன்று (ஜன 7) 77வது வயது, நல்ல மனது, தூய வாழ்க்கை, அவரை இந்த வயதிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பெங்களூருக்கு இப்போதும் யார் தமிழ் நாட்டிலிருந்து போன் செய்தாலும் "நல்லா இருக்கீங்களா, உடம்பு நல்லா இருக்கா? வீட்டுல நல்லா இருக்காங்களா?" என்று கேட்ட பிறகு "நீங்க யார் பேசுறீங்க?" என்பார். இந்த எளிமையும், அக்கறையும்தான் சரோஜாதேவி.
77 வயதை அடைந்தாலும் இந்த லப் பேர்ட்ஸ்க்கு மட்டும் வயது ஏறுவதே இல்லை. இன்னும் ஆயிரம் பிறை காண வாழ்த்துவோம்...!