நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தெருவில் போகும் பிச்சைக்காரனை கூட ஹீரோவாக்குவேன்:மிஷ்கின்
புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற வெறி; தீராத கலைத் தாகம்; வெளிப்படையாக பேசுவதால், விமர்சனங்களுக்கு அடிக்கடி சிவப்பு கம்பளம் விரிக்கச் செய்யும் கோபம்... இவற்றின் ஒட்டு மொத்த கலவை தான், இயக்குனர் மிஷ்கின். வாசிப்பையே சுவாசிப்பாக கருதும் இந்த கலைஞருடன் பேசியதிலிருந்து...
1 இப்போது, பேய் டிரென்ட் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால்,நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி விட்டீர்களா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. வழக்கமாக, பேய் படங்கள் என்றால் பழி வாங்கும் கதைகள் தான் இருக்கும். அந்த மாதிரி படம் பண்ணாமல், மாற்றி யோசித்தேன்; அதன் வெளிப்பாடு தான், பிசாசு.
2 படைப்பாளியான உங்களுக்கு, ஏன் இவ்வளவு கோபம்வருகிறது?
எனக்கு தெரிந்தவரை, நான் கோபப்பட்டது மாதிரி தெரியலை. ஆனால், மற்றவர்களுக்கு, நான் கோபப்படுவது போல் தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
3 உங்களின் எல்லா படங்களிலுமே ஒரு வலி இருக்கிறது; ஜாலியாக படம் செய்ய மாட்டீர்களா?
என்னுடைய வாழ்க்கையில் அதிகமான வலியை சந்தித்திருக்கிறேன். அதனால், என் படங்களிலும் அந்த பீல் இருக்கும். அது ஒன்றும் தப்பு இல்லையே?
4 உங்கள் படத்தை இயக்குனர் பாலா தயாரித்தது பற்றி...
எனக்கும், பாலாவுக்கும் உள்ள நட்பு யாருக்குமே தெரியாது. இன்னும் சொல்ல வேண்டுமானால், என் தாயின் கருவறையில் எனக்கு முன்னால் பிறந்தவர் தான் பாலா. அந்த அளவுக்கு பாலா மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளேன்.
5 பிற மொழி படங்களை காப்பி பண்ணுவது நியாயமா?
எனக்கு சொல்ல தெரியவில்லை. இன்ஸ்பிரேஷன் இல்லாமல் உலகமே கிடையாது. நம்ம அப்பா - அம்மா முகம் தானே நமக்கு இருக்கு? டால்ஸ் ராய், ஷேக்ஸ்பியர் இப்படி பலரும் இன்ஸ்பையர் ஆகி வந்தவங்கதான். ஒரு நல்ல படைப்பு வரும்போது, அதை மக்களுக்கு எவ்வளவு அழகா எடுத்து சொல்லப்போறோம் என்பது தான் முக்கியம் என, நினைக்கிறேன்.
6 மஞ்சப் புடவை, குத்துப்பாட்டை மறந்துட்டீங்க போலிருக்கே...
எனக்கே கொஞ்சம் போர் அடிச்சி போச்சு. ஓநாயும், ஆட்டுக் குட்டியும் படம் பண்ணும்போது கூட, ஒரு குத்துப்பாட்டு வையுங்க, படம், கமர்சியலா நல்ல போகும் என, பலரும் கூறினர். ஆனால், எனக்கு அது நாகரிகமா படவில்லை. பிசாசு படத்தின் கதைக்கு அந்த வகையான பாடல் தேவைப்படவில்லை.
7 உங்களின் படங்களுக்கென தனி அடையாளம் எதுவும் உள்ளதா?
என் படங்கள் எல்லாமே, சமுதாயத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பதிவு
செய்து கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுக்க என் படங்களில் அந்த அடையாளம் இருக்கும். சமுதாயத்தில் ஒரு ஓரமாக, சின்ன மெழுகு வர்த்தியாக இருக்க
ஆசைப்படுகிறேன்.
8 நிறைய புத்தகம் படிக்கிறீங்க. புத்தக வாசிப்பு உங்களை செழுமை ஆக்கியுள்ளதா?
புத்தகம் என்னை செழுமையாக்கவில்லை; எருமை ஆக்கியிருக்கு. அதாவது,
எனக்கு அளவுக்கு அதிகமான பொறுமையை கொடுத்துள்ளது, புத்தக வாசிப்பு தான்.
9 பாலா உங்களுக்கு உதவியது மாதிரி, நீங்கள் யாருக்காவதுஉதவுவீர்களா?
நானே பிச்சைக்காரனாக இருக்கிறேன். கையில், ஐந்து பைசா கூட கிடையாது. இதில்,
மற்றவர்களுக்கு எப்படி என்னால் உதவ முடியும். உங்களுக்கு தெரியுமா?
ஓநாயும், ஆட்டுக்குட்டியும் படத்துக்கு பின், ஆறு மாதங்களுக்கு எனக்கு சரியான சாப்பாடே கிடைக்கவில்லை.
10 நீங்கள் எது செய்தாலும் விமர்சனமாகி விடுகிறதே?
அது தான், எனக்கும் புரியவில்லை. இப்போது உதவி இயக்குனர் வேலைக்கு ஆள் தேவையில்லை என, வீட்டு கதவில் எழுதி ஒட்டினால் கூட, விமர்சனமாகி விடுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பேசாமல் ஊமையாகி விடலாமா; கழுத்தை தைச்சுக்கலாமா? என, தோன்றுகிறது. நம் நாட்டில், 2,000 வருஷமா கருத்து சுதந்திரமே இல்லை; இனியும், கருத்து சுதந்திரம் கிடைக்குமா என, தெரியவில்லை.
11 கதைக்காக ஹீரோவை தேர்வு செய்வீர்களா; ஹீரோவுக்காக கதையை தேர்வு செய்வீர்களா?
இந்த இரண்டு விஷயத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. என் கதைக்கு இவர் தான் ஹீரோ என முடிவு செய்து விட்டால், தெருவில் போகும் பிச்சைக்காரனை கூட ஹீரோவாக்கி விடுவேன்.
12 உங்களுக்கும் இசை அமைப்பாளர்களுக்கும் உள்ள உறவு புரிதல் எப்டி இருக்கு ?
என் வாழ்க்கையே இசைதான் , ஒரு ஷாட் முடிவு பண்ணா கூட அதில இசையின் பங்கு இருக்கும், பிசாசு இசை அமைப்பாளரை சந்தித்தேன் ,5 வயசில இருந்து வயலின் கத்துருக்கான். பெரிய வயலினிஸ்ட் ,இந்த படத்தில வாசித்த எல்லா வயலின் இசையும் அவன் சொந்தமா வாசித்தது, 6 மாதம் என்னோடு உழைச்சிருக்கான் , அதனால் அந்த பையனை என்னால் விட முடியல ,எதிர் காலத்தில பெரிய இசை அமைப்பாளரா வருவான் , எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் அவன் , எல்லா இசை அமைப்பாளர்களோடும் எனக்கு நல்ல உறவு இருக்குனு சொல்வேன்.
13. முகமூடி பட இசைவெளியீட்டில் அடுத்தடுத்த பார்ட் கதை ரெடியா வச்சிருக்கிறதா சொன்னீங்க ,திரும்ப முகமூடி பார்ட் 2 ஏதும் பண்ணுவீங்களா?
முகமூடி படம் பெரிய பிளாப் , சோ அந்த ஐடியா எல்லாம் எனக்குளே போட்டு எரிச்சி்ட்டேன்னு தான் சொல்வேன்
14. கிட்டத்தட்ட 120 ஹீரோயின்கள் பார்த்து பிரயாகா என்ற புதுமுகத்தை தேர்வு செய்து , அந்த பெண்ணுக்கு ஒரு டயலாக் கூட படத்தில் வைக்கலியே ஏன் ?
எனக்கு கதாபாத்திரம் டயலாக் சொன்னாலே பிடிக்காது , மேலும் அந்த கதாபாத்திரத்துக்கு டயலாக் தேவை இல்லன்னு நினைக்கிறேன் ,சினிமாங்கறது விசுவல் மீடியம் , கதை எழுதி முடித்த பிறகு தான் டயலாக் ஏதும் வைக்கலயேன்னு நினைச்சேன் , அந்த பா என்ற ஒரு
வார்த்தையே 2000 வார்த்தைகளுக்கு சரிசமமா இருந்தது ,அதனால் அந்த ஒரு டயலாக் போதும்னு நினைச்சி விட்டுட்டேன் . அந்த பொண்ணுக்கு டயலாக் தான் இல்ல, ஆனா 20 நாள் அந்த பொண்ணை மேலிருந்து கீழே கட்டி தொங்க விட்டு , நிறைய அடிபட்டு , ரொம்ப உழைச்சி கொடுத்தது
பிரயாகா , நல்ல டான்சர் , தமிழ் நல்லா பேசும் பொண்ணு , சோ எனக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சி
15. கடைசி வரை ஹீரோ முகத்தை முழுமையா காட்டலியே?
அவன் முடி எல்லாம் முகத்தை மறைத்து சீன்ஸ் எடுக்கப்பட்டது , கதையே பார்த்தீங்கனா ஒரு கண்ணில் தான் அவன் உலகத்தையே பார்த்திருப்பான் ,ரெண்டு கண்ணால் உலகத்தை பார்த்திருந்தா கதை வேற மாதிரி இருந்திருக்கும் என்று சொல்லவே அப்படி எடுத்தேன்