இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
ரசிகர்களின் கைதட்டல் பெறக்கூடிய இடத்தில் சண்டைக்காட்சி அமைகிறபோதுதான் அது பேசப்படும், அதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்கக்கூடியவர்கள் இயக்குனர்கள்தான். அவர்கள் கொடுக்கும் சூழல்தான் ஸ்டன்ட் மாஸ்டரின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் நாக் அவுட் நந்தா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* சினிமாவில் உங்கள் என்ட்ரி பற்றி?
ஜாகுவார் தங்கம் மாஸ்டரிடம் 6 வருடம், சூப்பர் சுப்பராயனிடம் 9 வருடம், கனல்கண்ணனிடம் 2 வருடம் என பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்களிடம் பணியாற்றி நல்ல அனுபவம் பெற்ற பிறகுதான் நான் தனித்து ஸ்டன்ட் அமைக்கத் தொடங்கினேன். அப்படி நான் ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகமான முதல் படம் ''வீரசேகரன்''. துவார் சந்திரசேகர் என்ற தயாரிப்பாளர்தான் என்னை முதன்முதலாக அறிமுகம் செய்தார். அதன்பிறகு அவர் தயாரித்த கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கனும் போல இருக்கு, தொட்டால் தொடரும் என அந்த கம்பனியின் பல படங்களுக்கு தொடர்ந்து ஸ்டன்ட் அமைத்து வருகிறேன்.
அந்த வகையில் இதுவரை 50 படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக ஒர்க் பண்ணியிருக்கிறேன். மறைந்த நடிகர் முரளி போலீஸ் வேடத்தில் நடித்த முதல் படமும் அவரது கடைசி படமுமான கவசம் படத்திற்கு நான்தான் ஸ்டன்ட் அமைத்தேன். தற்போது, ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ள ''எட்டுத்திக்கும் மதயானை'' மற்றும் புன்னகை பயணம், தொட்டால் தொடரும் என நான் சண்டை பயிற்சி கொடுத்த 8 படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதுதவிர தெலுங்கு, கன்னடம், பெங்காலி படங்களிலும் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
* ஸ்டன்ட் மாஸ்டரின் திறமையை வெளிக்கொண்டு வர எந்த மாதிரி கதைகள் தேவை?
ஒரு படத்தில் சண்டை காட்சி எந்த இடத்தில் அமைகிறது என்பதை பொறுத்துதான் ஸ்டன்ட் மாஸ்டரின் திறமை வெளிப்படும். உதாரணத்திற்கு பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் ரஜினியை, ஆட்டோக்காரன் சீண்டுவான், ரவுடி சீண்டுவான்,. ஆனந்த்ராஜ் சீண்டுவார் இப்படி யார் யாரெல்லாமோ சீண்டுவார்கள். ஆனால் யாரிடமும் எதையும் பேசிக்கொள்ள மாட்டார். சண்டை போட மாட்டார், போய்க்கிட்டே இருப்பார். அவரைப்பார்க்க பயந்தாங்கொள்ளி மாதிரியே தெரியும்.
அதே மாதிரி தம்பிக்கு ஒரு பிரச்னை வரும்போதுகூட அவரைத்தான் இவர் சமாதானப்படுத்துவார். ஆனால் அதையடுத்து அவரது தங்கையாக நடித்திருந்த யுவராணியை ஒருவன் தாக்க, மூக்கில் ரத்தத்தோடு அவர் மீது போய் விழும்போதுதான் டென்சன் ஆவார் ரஜினி. அந்த இடத்தில் ரசிகர்கள் ரஜினி எதிரிகளை தாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற முக்கியமான இடம். அப்போது ஆவேசமாகும் ரஜினி, ஒரு பைப்பை பிடுங்கிக்கொண்டு எதிரிகள் மீது வீசுவார். அவர்கள் ஒரு லைட் கம்பத்தில் போய் விழுவார்கள். அதைப்பார்த்து, தியேட்டரில் உள்ள அத்தனை ரசிகர்களுமே எழுந்து கைதட்டுவார்கள். ஆக, எல்லா படத்திலுமே பைட் சீன் நிற்பதற்கு அதற்கான சீக்வொன்ஸ் தான் காரணம்.
அதே மாதிரி, இப்போது நான், சேது பூமி என்றொரு ஒரு படம் பண்ணியிருக்கிறேன். சட்டப்படி குற்றம் படத்தில் நடித்த தமன் நடிக்கிறார். அந்த படத்தின் இன்ட்ரவல் பிளாக் பைட்லதான் முடியும். அடிக்கலேன்னா ஆடியன்சே டென்சன் ஆவார்கள். அப்படியொரு சீக்கொன்ஸ். அதோடு, பைட்லதான் இன்ட்ரவல் முடியும். கட்டாயம் அடித்தே ஆக வேண்டிய சீன் அது. அந்த படம் வரும்போது அந்த சண்டை காட்சிக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இதுபோன்ற சண்டை காட்சிகளின் சூழல்தான் எங்களின் திறமைக்கு வெளிச்சம் போட்டு காட்டும். இப்போது நான் 50 படம் பண்ணி விட்டபோதும், ரசிகர்களின் கைதட்டல் பெறக்கூடிய இடத்தில் சண்டைக்காட்சி அமைகிறபோதுதான், அது பேசப்படும். அதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியவர்கள் இயக்குனர்கள்தான். அவர்கள் கொடுக்கும் சூழல்தான் ஸ்டன்ட் மாஸ்டரின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
* ஸ்டன்ட் காட்சியில் நடிப்பவர்களுக்கு பாடிலாங்குவேஜ் தேவையா?
பாடிலாங்குவேஜ் தேவைதான். ஆனால் அப்புக்குட்டி நடித்த மன்னாரு என்றொரு படத்தில் அவர் நான்கு வில்லன்களுடன் மோதுவார். முறைப்பொண்ணை காப்பாற்ற வேண்டிய இடம். அந்த சீக்கொன்சுக்கு அது தேவைப்பட்டது. அவருக்கு பெரிய பாடிலாங்குவேஜ் கிடையாது. ஆனால் சண்டை காட்சி அமைந்த இடம் சரியான இடம். அதனால் அதற்கு எனக்கும் அந்த காட்சிக்காக ஓரளவு பெயர் கிடைத்தது.
மற்றபடி பெரிய அளவிலான காட்சிகளில் சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் நடிக்கிறார்கள் என்றால் அதற்கு பாடிலாங்குவேஜ் அவசியம்தான். அவர்கள் கொடுக்கிற ரியாக்சன் ரொம்ப முக்கியம். மற்றபடி ஹீரோ சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்கிறவர், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்று வருகிறபோது பெரிய அளவில் அவர்கள் சண்டை செய்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களுக்கேற்ப சண்டை காட்சிகளை அமைப்போம். அதனால் அந்தந்த கதைகளுக்கேற்ப சண்டை காட்சிகளும் மாறும்.
* சண்டை காட்சிகளில் உங்கள் பாணி என்று எதையாவது வெளிப்படுத்துவீர்களா?
சினிமாவைப் பொறுத்தவரை அந்த கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்ய முடியும். முக்கியமாக டைரக்டர்கள் எந்த மாதிரியான சண்டை காட்சியை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் நாங்கள் செய்து கொடுக்க முடியும். அந்த வகையில் இதுவரை நான் டைரக்டர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை மட்டுமே செய்து கொடுத்திருக்கிறேன். எனது தனிப்பட்ட பாணிக்கு அங்கே இடமில்லை.
* எந்த மாதிரி சண்டை காட்சிகள் அதிக ரிஸ்க்கானது?
சண்டை காட்சி என்றாலே ரிஸ்க்தான். ஓடிச்செல்கிறவர், ஒரு புல் தட்டி தடுக்கி விழுந்தாலகூட அது ரிஸ்க்தான். அதனால் எந்த நேரமும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
* பெரும்பாலும் ரிஸ்க்கான காட்சிகளுக்கு டூப் நடிகர்களையே பயன்படுத்துவதாக கூறப்படுகிறதே?
முன்பெல்லாம் அதிக டூப் போட்டது உண்மைதான். ஆனால் இப்போது ரோப் ஸ்பெசலிஸ்ட்டெல்லாம் வந்த பிறகு எல்லா ஹீரோக்களுமே டூப் இல்லாமல் தாங்களே ரிஸ்க் எடுக்க தயாராகி விட்டனர். அதனால் நாங்கள் டூப் நடிகர்களை அழைத்து சென்றால்கூட ஹீரோக்களே அதெல்லாம் வேண்டாம். நாங்களே நடிக்கிறோம் என்று முன்வருகிறார்கள். முக்கியமாக ஆடியன்சு டூப் என்பதை கண்டு பிடித்து விடுவதால் நடிகர்கள் தாமாகவே ரிஸ்க் எடுக்க தயாராகி விட்டனர்.
ஆனால் அவர்கள் அப்படி சொல்வதால் நாங்கள்தான் பயப்படுகிறோம். ஏதாவது விபத்து ஏற்பட்டால் படப்பிடிப்பு தாமதமாகும். அல்லது முகம் போன்ற இடங்களில் கீறல் விழுந்து விடக்கூடாது. அவர்களை நம்பித்தான் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார் என்பதால் நாங்கள்தான் சண்டை காட்சி முடிகிறவரை பயந்து கொண்டே இருப்போம். முக்கியமாக நம்ம சைடில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் உஷாராக இருப்போம்.
* உங்களது எச்சரிக்கையையும் மீறி உங்கள் படங்களில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதா?
நான் பைட்டராக இருந்தபோது நடந்துள்ளது. மாஸ்டர் ஆனபிறகும் நடந்திருக்கிறது. திருப்பூர் என்ற படத்தில் ஒரு சண்டையில் ஒரு புது நடிகர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தவர் கோமா ஸ்டேஜ்க்கு சென்று விட்டார். அதன்பிறகு நான்தான் அவரது கன்னத்தில் நாலு தட்டு தட்டினேன் அதன்பிறகு சுயநினைவுக்கு வந்தார். 3 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று அதன்பிறகு நடிக்க வந்தார். அவருக்கு அது முதல் படம் என்பதால் தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட விபத்துதான் அது.
* அஜீத், விஜய் மாதிரி மேல்தட்டு ஹீரோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்திருக்கிறார்களா?
சினிமாவைப்பொறுத்தவரை பெரிய வெற்றிதான் நம்மை மேல்தட்டுக்கு கொண்டு செல்லும் அப்படி வரும்போதுதான் நாம் ஒரு படம் பண்ணுவோம் என்றுஅவர்கள் அழைப்பார்கள். மற்றபடி நான் ஸ்டன்ட் அமைத்த படங்கள் பெரிய சக்சஸ் ஆகவில்லை என்றபோது அவர்களிடம் போய் நிற்க எனக்கே கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கும். மேலும், சினிமாவில் ஹிட் படத்தில் இருந்தால்தான் மரியாதை. அந்த கலைஞர்களை மற்றவர்களும் சுற்றுவர்கள். இப்போது அவர்கள் ஒரு மைண்டு செட்டில் இருப்பார்கள். அதனால்தான் அவர்களை நெருங்கவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் நான் ஒர்க் பண்ணியுள்ள படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்து அந்த படங்களின் போஸ்டர்களில் என் பெயரும் இடம்பெறும்போது அதற்கான சூழல்கள் வருமென்று எதிர்பார்க்கிறேன்.
* உங்களது ஸ்டன்ட் காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்த படம் எது?
நந்தா நந்திதா தமிழ்-தெலுங்கு படங்களுக்கு நான்தான் சண்டை பயிற்சி கொடுத்தேன். பெரும்பாலும் ஆடியோ விழாக்களில் படங்களின் பாடல்களைத்தான் திரையிடுவார்கள் ஆனால் அந்த படத்தின் சண்டை காட்சிகளையும் திரையிட்டு காட்டினார்கள்,. அந்த விழாவுக்கு வந்திருந்த பஞ்சு அருணாசலம, கேயார் போன்றோர் பாடல்களை விட சண்டை காட்சிகளை புகழ்ந்து பேசினர்கள். சூப்பர் சூப்பராயன்கிட்டத்தான் இப்படியொரு சண்டை காட்சிகளை பார்க்க முடியும். இப்போது அவரது அசிஸ்டென்ட்டும் அதற்கு இணையாக சண்டை அமைத்திருக்கிறார் என்று பாராட்டினார்கள். அது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால் அந்த படம் பெரிதாக போகவில்லை என்பதால் அது வெளியில் தெரியாமல் போய் விட்டது.
* நிறைய ஸ்டன்ட் மாஸ்டர்கள் சண்டை காட்சிகளில் நடிக்கிறார்களே. நீங்கள் அந்த மாதிரி நடித்திருக்கிறீர்களா?
ரெண்டு குதிரையில் சவாரி செய்ய எனக்கு விருப்பமில்லை. அதனால் அதை அவாய்டு பண்ணி வருகிறேன். ஆனாலும் சில சமயங்களில் அவாய்டு பண்ண முடியாத நிலை ஏற்படும். திருப்பூர் என்ற படத்தில் ஒரு ஆர்ட்டிஸ்டு வரவில்லை. அதனால் படப்பிடிப்பே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அப்படி நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு 7 லட்சம் ரூபாய் நஷ்டமாகும் என்றார்கள். அதனால் நீங்களே அந்த கேரக்டரில் நடித்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்றனர். அதனால் அந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன் பாடல் காட்சிகளிலும் ஆடியிருக்கிறேன்.
அதன்பிறகும் தவிர்த்து வந்தபோதும், மனம் நில்லுனா நிக்காதடி -என்ற படத்திலும் ரொம்ப தவிர்க்க முடியாதநிலை ஏற்பட்டதால், ஒரு சீனிலும், சண்டை காட்சியையும் வந்து ஆரம்பித்து வத்து விட்டு செல்வது போன்றும், ஒரு பாடல் காட்சியிலும் நடித்திருப்பேன. டான்செல்லாம் எனக்கு தெரியாது என்றபோதும், எதையும் கூச்சமில்லாமல் செய்கிறவன் என்பதால் டான்ஸ் மாஸ்டர் சொன்னது போல் பண்ணினேன்.
* சில ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். சிலர் டைரக்டராகிறார்கள். உங்களுக்கு அந்த மாதிரி ஐடியாக்கள் ஏதேனும் உள்ளதா?
ஸ்டன்ட் மாஸ்டராக நல்ல பெயரெடுக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது. படம் இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. ஸ்டன்ட் மாஸ்டர் என்று எடுத்துக்கொண்டால், சூப்பர் சூப்பராயன், கனல் கண்ணன், ஜாகுவார் தங்கம் என ஒரு பத்து பேர்தான் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ரேஞ்சுக்கு ஒரு பெயரை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உழைத்து வருகிறேன். அதற்கான பலனும் சீக்கிரமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் நாக்அவுட் நந்தா.