தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முன்பெல்லாம் குழந்தைகளை மையமாக வைத்து அரிதாக சில படங்கள் வரும். ஆனால் இப்போது குழந்தைகளை மையமாக வைத்து நிறைய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. முன்பு குழந்தைகள் வயதுக்கு மீறிய செயல்களை செய்பவர்களாக, பாம்பு, குரங்குடன் நட்பாக இருப்பவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். இப்போது குழந்தைகள் யதார்த்தமாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படம்தான் இதன் ஆரம்பபுள்ளி. குழந்தைகள் படம் என்றாலே குதூகலமான படம் என்பதை மாற்றி அவர்கள் உலகத்தை தெளிவாக காட்டியது பசங்க. பின்பு பாண்டிராஜே மெரீனா பீச்சில் சுண்டல் விற்கும் குழந்தைகளைப் பற்றிய படத்தை மெரீனா என்ற பெயரில் எடுத்தார்.
தங்க மீன்கள் படமும் ஒரு வகையில் குழந்தைகள் படம்தான். படிப்பு வராத ஒரு குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்து கொடுமைப்படுத்துவதும். அந்த குழந்தையின் நியாயமான ஆசையும்தான் படம். கோலிசோடா எங்கெங்கிருந்தோ வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வாழும் சிறுவர்கள் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை தேடுவதைப் பற்றிச் சொன்னது. இந்த படங்கள் எல்லாம் வெற்றியும் பெற்றது.
சமீபத்தில் வெளிவந்த புதியதோர் உலகம் செய்வோம் என்ற படம். தவறான வழியில் செல்லும் பெற்றோர்களை திருத்தும் குழந்தைகள் பற்றிய படமாக அமைந்தது. தற்போது தயாரிப்பில் இருக்கும் சில குழந்தைகள் படங்கள் பற்றி பார்க்கலாம்.
காக்கா முட்டை
சென்னை நகர்புறத்து குடிசை பகுதியில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கை கதை. இருக்கிற வசதிக்குள் அவர்கள் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதுதான் மைய கரு. அவர்கள் பகுதியில் புதிதாக தொடங்கப்படும் ஒரு பீட்சா கடையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஒரு பீட்சா சாப்பிட வேண்டும் என்பது அவர்கள் கனவு. அதனை அவர்கள் எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. வெற்றி மாறன் உதவியாளர் மணிமாறன் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார்.
குற்றம் கடிதல்
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். தவறான வழிகாட்டுதல், கூடா நட்பு இவற்றால் தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தர குற்றவாளிகளாக கருதி அவர்களை ட்ரீட் பண்ணும்போது அவர்கள் மனநிலை என்னவாகிறது என்கிற கருவைக் கொண்டது குற்றம் கடிதல். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார்.
கத சொல்லப்போறோம்
குழந்தைகள் பற்றிய 6 குறும்படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் என்பவர் இயக்கி உள்ள படம். இது குழந்தைகளின் சென்டிமெண்ட் ஏரியாவை கவர் செய்கிறது. பணக்காரர்கள் வாழும் பகுதியில் ஒரு அநாதை இல்லம் இருக்கிறது. அந்த இல்லத்து அநாதை குழந்தைகளுக்கும், பணக்கார வீட்டு குழந்தைகளுக்கும் இடையே உள்ள கள்ளம்கபடமில்லாத உறவையும், பாசத்தையும் சொல்கிற படம். குழந்தைகளுடன் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், பசங்க சிவகுமார் நடித்துள்ளனர்.
சாப்ளின் சாமந்தி
இது ஒரு வித்தியாசமான குழந்தைகள் படம். ஒரு கிராமத்து குழந்தைகக்கு ஹாலிவுட் காமெடி நடிகர் சார்லின் சாப்ளின் மீது தணியாத ஆர்வம். மற்ற குழந்தைகள் விஜய், அஜீத் ரசிகராக இருக்கும்போது சாமந்தி மட்டும் சார்லின் சாப்ளின் ரசிகையாக இருக்கிறாள். பக்கத்து ஊருக்கு நடந்தே சென்று படிக்கிறாள். சைக்கிள் வாங்க வசதியில்லை. அவள் பள்ளியில் ஒரு மாறுவேட போட்டி வருகிறது. அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு சைக்கிள் பரிசு என்று அறிவிக்கிறார்கள். சார்லின் சாப்ளினாக வேஷம்போட்டு அந்த சைக்கிளை பரிசாக பெற விரும்பும் சாமந்ததி அதற்கான கோட், சூட், கைத் தடி, தொப்பியை தேடி அலைகிறாள். அவளுக்கு சைக்கிள் கிடைத்ததா என்பது படத்தின் கதை. கண்ணன் என்பவர் இயக்கி உள்ளார். லையா என்ற சிறுமி சாமந்தியாக நடித்துள்ளார்.
அப்பாவின் மீசை
நடிகை ரோகினி இயக்கி வரும் அப்பாவின் மீசையும் குழந்தைகள் படம்தான். தந்தையின் மீசையால் கவரப்படும் ஒரு சிறுவனின் கதை. தந்தை மகன் உறவை வித்தியாசமாக சொல்கிற படம். மீசைக்கார தந்தையாக பசுபதி நடித்துள்ளார்.
பாண்டிராஜ் படம்
பசங்க, மெரீனா படங்களில் குழந்தைகளின் உலகத்தை படம்பிடித்த பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு குழந்தைகள் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஜோதிகாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சூர்யா தயாரிக்கிறார்.
இந்த படங்கள் எல்லாமே எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. வெளியிடுவற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதுவரை உலக படவிழாக்களுக்கு சென்று பாராட்டுதல்களை பெற்று வருகிறது. இந்த பட்டியலில் வராமலும் பல குழந்தைகள் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.