டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்த வாய் பேச முடியாத அபிநயா, என் பிள்ளை மாதிரி என்று டைரக்டர் சமுத்திரக்கனி கூறினார். நடிகை அபிநயா வாய் பேச முடியாத குறைபாடு உடையவர். நாடோடிகள் படத்தில் நடித்தமைக்காக அவரை பலரும் பாராட்டி, கவுரவித்துள்ள நிலையில் விஜய் டிவி., சார்பிலும் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 4வது ஆண்டாக சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் விஜய் டி.வி.யின் விருது விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கு வழங்கப்பட்டது. விருதை பெறுவதற்காக மேடையேறிய அபிநயா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தார். அவருக்கு நடிகர் நந்தா, நடிகை காம்னா ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர். அப்போது தனக்கே உரிய பாஷையில், "என் அப்பா -அம்மாவுக்கு நன்றி'' என்று கூறிய அபிநயா, நாடோடிகள் டைரக்டர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சசிக்குமார் ஆகியோரையும் மேடைக்கு அழைத்தார். டைரக்டர் சமுத்திரக்கனியின் காலை தொட்டு வணங்கிய அவர், தனக்கு கிடைத்த விருதையும் அவர் கையில் கொடுத்து வாங்கினார்.
அதன் பின்னர் பேசிய டைரக்டர் சமுத்திரக்கனி, "அபிநயா என் பிள்ளை மாதிரி. படத்தில் சசிகுமாரின் தங்கையாக வாய் பேசமுடியாத அபிநயாவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது, தயாரிப்பாளர் சசிகுமார் இது முடியுமா? என்று கேட்டார். முடியும் என்றேன். என் எதிர்பார்ப்புக்கும் மேலாக அபிநயா நடிப்பில் ஆச்சரியப்படுத்தினார்'' என்று உருக்கமாக கூறினார்.
தொடர்ந்து மற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது காஞ்சீவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த நடிகை விருது `நான் கடவுள்' படத்தில் நடித்த நடிகை பூஜாவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது நடிகர் விஜய்க்கும், அபிமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை `பசங்க' படத்தில் நடித்த விமல் பெற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்.பியும், நடிகை குஷ்புவும் விருதை வழங்கினார்கள். சிறந்த புதுமுக நடிகை விருதை நாடோடிகள் படத்தில் நாயகியாக நடித்த அனன்யா பெற்றுக்கொண்டார். சிறந்த புதுமுக டைரக்டர் விருதை `பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் இணைந்து வழங்கினார்கள். சிறந்த வில்லனுக்கான விருதை `நான் கடவுள்' படத்தில் நடித்த ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த நகைச்சுவை நடிகர் விருது `சிவா மனசுல சக்தி' படத்தில் நடித்த சந்தானத்துக்கு கிடைத்தது.
நிகழ்ச்சியில் விழாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், கார்த்திக், விஜய், நடிகைகள் கவுதமி, ரீமாசென், அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.