'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நஸ்ரியா, ஜனனி அய்யர், நந்திதா ஆகியோர் என்னை அதிகம் கவர்ந்த நடிகைகள். இவர்களில் நஸ்ரியா பர்பாமென்ஸ் ரீதியாக என்னை அதிகமாக பாதித்த ஒரு நல்ல நடிகை. அந்த வகையில், இப்போதைய நடிகைகளில் நான் நஸ்ரியாவோட ரசிகன் என்கிறார் காளி வெங்கட். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* சினிமாவில் என்ட்ரி ஆனது பற்றி சொல்லுங்கள்?
கோவில்பட்டியில் இருந்து 1998ல் சென்னைக்கு வந்தேன். ஆனால் அப்போது நான் நடிக்க முயற்சி எடுக்கவில்லை. 2006ல்தான் நடிப்பதற்கான முயற்சி எடுக்கத் தொடங்கினேன். சிலரைப்போன்று பத்து வருடம் பதினைந்து வருடம் என்று என்னை அலைய விடாமல், சினிமா கதவுகள் எனக்கு உடனே திறந்து விட்டது. அதனால் குறுகிய காலத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன்.
அதிலும், நான் நடித்ததில் உதயம் என்எச்4, தெகிடி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட சில படங்கள் எனனை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தன. அதனால் இப்போது உருமீன், இந்தியா பாகிஸ்தான், காத்தாடி, சதுரன், இறுதிச்சுற்று என பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.
* நீங்கள் காமெடியனா? குணசித்ர நடிகனா?
ஹீரோவுடன் படம் முழுக்க வருவதால் இப்போதைய சினிமா நிலவரப்படி என்னை காமெடியனாகத்தான் நினைப்பார்கள். ஆனால், காமெடியனாக மட்டுமே நான் நடிக்கவில்லை. சில வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறேன். மேலும் என்னைப்பொறுத்தவரை காமெடியன் என்கிறபோது நீண்டகாலம் நிலைக்க முடியாது என்று கருதுகிறேன். காரணம், தொடர்ந்து காமெடி என்கிறபோது ரசிகர்களுக்கு நம்முடைய நடிப்பு போரடித்து விடும். அதனால் படத்துக்குப்படம் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து ஒரு நல்ல குணசித்ர நடிகனாக நீண்டகாலம் சினிமாவில் நிலைக்கவே ஆசைப்படுகிறேன்.
மேலும், குணசித்ர வேடம் என்கிறபோது ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான வேடத்தில் நடிக்க முடியும். அதனால் வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்து ரசிகர்களின் மனதில் நிறைந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்போது நடித்து வருகிறேன்.
* உங்களை பெரிய அளவில் கவர்ந்த நடிகர்கள் யார் யார்?
சிவாஜிகணேசன் நடித்த படங்களை சின்ன வயதில் இருந்தே விரும்பி பார்ப்பேன். அவருக்கு அடுத்தபடியாக இருவர் படத்தில் நடித்த மோகன்லால், அவதாரம் படத்தில் நடித்த நாசர் என பல ஜாம்பவான்களை எனக்கு பிடிக்கும். அவர்கள் என்னை அதிகமாக பாதித்திருக்கிறார்கள். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், அனிபா, விஜயசேதுபதி, விஷ்ணு, தெகிடி அசோக்குமார் என மேலும் பலரும் நடிப்பால் என்னை கவர்ந்திருக்கிறார்கள்.
மற்றபடி, நடிகைகளை எடுத்துக்கொண்டால், நஸ்ரியா, ஜனனி அய்யர், நந்திதா ஆகியோரை பிடிக்கும். இவர்களில் நஸ்ரியா பர்பாமென்ஸ் ரீதியாக என்னை அதிகமாக பாதித்த ஒரு நல்ல நடிகை. இப்போதைய நடிகைகளில் நான் நஸ்ரியாவோட ரசிகன். எந்த கேரக்டரில் நடித்தாலும் அதற்கு தேவையான நூறு சதவிகித நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை. அவர் நடித்த வாய் மூடி பேசு படத்தில் நானும் நடித்தேன். ஆனால் அவருடன் காம்பினேசன் காட்சிகள் எனக்கு இல்லை. அதனால் மனதளவில் அது ஒரு சிறிய வருத்தமாகவும் அமைந்தது. அதேசமயம், நஸ்ரியா நடித்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்றொரு சந்தோசமும் கிடைத்தது.
* கேரக்டர் பிடித்தால் மட்டுமே ஓ.கே செய்கிறீர்களா? இல்லை கிடைக்கிற படங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறீர்களா?
சினிமாவில் இப்போதுதான் நான் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகன். அதனால் இந்த வேடத்தில் காளியை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர்கள் நம்பி கொடுக்கிற வேடங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்கிறேன். காரணம், இன்னும் எனக்கென்று ஒரு இமேஜ் உருவாகவில்லை. அதனால் கிடைக்கிற ஒவ்வொரு வேடத்திலும் எனது நடிப்பை டைரக்டர்கள் எதிர்பார்க்கும் வகையில் கொடுத்து வருகிறேன்.
மேலும், இப்படித்தான் இந்த மாதிரி வேடங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்கிற வட்டத்திற்குள் நான் நிற்கவில்லை. எந்த மாதிரியான வேடத்திலும் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். அதனால் என்னை நம்பி டைரக்டர்கள் கொடுக்கிற எந்த மாதிரியான கேரக்டர்களிலும் தொடர்ந்து நடிப்பேன்.
* கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தால் ஏற்பீர்களா?
இப்போதைக்கு அந்த மாதிரியெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால் யாராவது டைரக்டர்கள் அந்த வேடத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்று என்னை அழைத்தால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்காக அந்த வேடத்தில் நடிப்பேன். என்னைப்பொறுத்தவரை எனக்கு வாய்ப்பு தரும் டைரக்டர்களின் நம்பிக்கைக்கு உரிய நடிகனாக இந்த சினிமாவில் என்றென்றும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.
* உங்களை அதிகமாக பாதித்த டைரக்டர்கள் யார்?
மணிரத்னம் சார் ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் இயக்கிய கடல் படத்தில் நடிக்க எனக்கு சான்ஸ் கிடைத்தபோது ரொம்ப சந்தோசப்பட்டேன். ஆனால், புட்டேஜ் ப்ராபளம் காரணமாக சில காட்சிகளை கத்தரித்தபோது நான் நடித்த 3 காட்சிகளுமே கத்தரிக்கு இறையாகி விட்டது. அதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று ரொம்ப பீல் பண்ணினேன். இருப்பினும் இது ஆரம்பம்தானே இன்னும் சினிமாவில் நாம் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது. அதற்குள் மணிரத்னம் சார் மட்டுமின்றி பேவரிட் இயக்குனர்கள அனைவரது படங்களிலும் நடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் மனதை தேற்றிக்கொண்டேன்.
* சினிமாவில் உங்களை வளர்த்துக்கொள்ள நடனம், சண்டை பயிற்சிகள் எடுக்கிறீர்களா?
இதுவரை எனக்கு நடனமாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் நடனம் பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் இப்போதுதான் இறுதிச்சுற்று என்ற படத்தில் ஒரு பாடலில் நானும் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு நடனமாடிய அனுபவம் இல்லை என்றாலும், தினேஷ் மாஸ்டர் என்னையும் இடுப்பை வளைத்து நடனமாட வைத்து விட்டார். அவர் கொடுத்த பயிற்சியினால் மற்றவர்களுடன் இணைந்து நானும் முடிந்தவரை நடனமாடினேன். பின்னர், அதைப்பார்த்தபோது, நானா இப்படி ஆடியிருக்கிறேன் என்று ஆச்சர்யப்பட்டேன். மற்றபடி சண்டை காட்சிகளில் நடிக்க சந்தர்ப்பம் வரும்போது அதற்கான பயிற்சிகளை எடுப்பேன்.
* ரிகர்சல் பார்க்கும் பழக்கம் உண்டா?
காட்சியை சொல்லி டயலாக் பேப்பரை டைரக்டர் கொடுத்ததுமே அந்த கேரக்டரின் தன்மை நமக்கு தெரிந்து விடும். அதையடுத்து, அதில் எந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று டைரக்டர் சொல்வது போல் நடிப்பேன். அது காம்பினேசன சீனாக இருந்தால் உடன் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகளுடன் இணைந்து ரிகர்சல் பார்த்துக்கொண்டே நடிப்போம். முண்டாசுப்பட்டியில் விஷ்ணுவுடன் நடித்தபோது ஒவ்வொரு காட்சிகளில் நடிப்பதற்கு முன்பும் நாங்கள் ரிகர்சல் பார்த்துக்கொண்டோம். அந்த காட்சிகள் நன்றாக வந்திருந்தது.
* நடிகர் விஷ்ணுவும் நீங்களும் நல்ல நண்பர்களாமே?
அவர் ரொம்ப இயல்பாக பழகக்கூடியவர். அதனால் எளிதில் அவருடன் நண்பராகி விட்டேன். அதேபோல் விஜயசேதுபதி, அசோக்குமார் என்று என்னுடன் நடித்த ஹீரோக்கள் அனைவருமே எனது நண்பர்கள்தான். அதோடு, எனக்கு சான்ஸ் கொடுத்த டைரக்டர், தயாரிப்பாளர் என அனைவரிடமும் நான் நட்புடன் பழகி வருகிறேன். அந்த வகையில் இந்த சினிமாவில் பணம் சம்பாதித்தேனோ இல்லையோ நண்பர்களை நிறைய சம்பாதித்து விட்டேன். அது எனக்கு மனநிறைவாக உள்ளது என்கிறார் காளி வெங்கட்.