ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
எந்தவொரு படமாக இருந்தாலும், அதில் எப்படி பர்பாமென்ஸ் பண்ணுவது, ரசிகர்களை எப்படி கவர்வது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவேன். மற்றபடி, இந்த படம் அப்படி ஓடும், இப்படி ஓடும். அதன்பிறகு நாம் இப்படி ஆகிவிடுவோம் என்றெல்லாம் நான் கணக்குப்போட்டு நடிப்பதில்லை என்கிறார் ஆதி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த சிறப்புப்பேட்டி...
* யாகவராயினும் நாகாக்க எந்த மாதிரியான படம்?
மனிதர்கள் பேசும்போது ரொம்ப கவனமாக பேச வேண்டும். காரணம், சில சமயங்களில் ஒரு வார்த்தையானது பெரிய பெரிய பிரச்னைகளை உண்டு பண்ணி விடும். முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெருசாகும்போது, முதலில் சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே மோதிக்கொள்வார்கள். ஆனால், அதையடுத்து பத்து பேர் சம்பந்தப்பட்டதாகும், அதன்பிறகு நூறு பேர் சம்பந்தப்பட்டதாகும். அதையடுத்து இரண்டு ஊர் சம்பந்தப்பட்டதாகும். அதையடுத்து இரண்டு நாடு சம்பந்தப்பட்டதாககூட மாறிவிடும். அதனால் யாராக இருந்தாலும் கவனமாக வார்த்தை விட வேண்டும். நம்மை கண்ட்ரோல் பண்ணிக்கொள்வது நமக்கு நல்லது என்ற கருத்தை இப்படம் சொல்கிறது. அந்த வகையில், இது இளவட்டங்களுக்கான படமா? பெரியவர்களுக்கான படமா? என்று பிரிக்க முடியாது. இது அனைவருக்குமான படம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
* நீங்கள் இந்த படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள்?
பைனல் இயர் படிக்கும் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறேன். டிசம்பர் 31-ந்தேதி இரவு சென்னையில் நான்கு நண்பர்களுடன் செல்லும்போதுதான் ஒரு பிரச்னை ஆரம்பிக்கிறது. அதன்பிறகு ஏற்படும் வாக்குவாதமே பெரிய மோதலாகி விடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த கதை முழுக்க முழுக்க நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு காட்சிகளும் யதார்த்தமாக இருக்கும். படம் முழுக்க ரியாலிட்டியாக இருப்பதால் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
* இந்த படத்தில் இந்தி நடிகர் மிதுன்சக்ரவர்த்தி எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறார்?
தென்னிந்திய சினிமாவில் அவர் நடிக்கிற முதல் படம் இது. அதனால் அவருக்கு பேசப்படக்கூடிய வேடமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த மாதிரியான வேடம் என்பதை இப்போது சொன்னால் கதை ஓப்பனாகி விடும். மேலும், இந்த படத்தில் வில்லனாக பாண்டியநாடு படத்தில் நடித்த ஹாரிஸ் நடித்துள்ளார். பசுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
* அரவானுக்குப்பிறகு உங்களுக்கு பெரிய இடைவெளி விழுந்து விட்டதே என்ன காரணம்?
நான் மிருகம் படத்தில் நடித்த பிறகு உடனடியாக ஈரம் படத்தில் நடிக்கவில்லை. ஒரு வருடம் கழித்துதான் நடித்தேன். காரணம், மிருகம் படத்திற்கு பிறகு அதே பாணியில் 8 படங்கள் என்னைத்தேடி வந்தன. ஆனால் எனக்கு தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்க விருப்பமில்லை என்பதால் அந்த படங்களை தவிர்த்தேன். அதன்பிறகு ஈரம் கதை பிடித்திருந்தது. என்னை வேறு கோணத்தில் காண்பிக்கும் படம் என்பதால் அப்படத்தில் நடித்தேன்.
அதேபோல் அரவானும் புதுமாதிரியான படம்தான். ஆனால் அந்த படத்திற்கு பிறகும் அதே சாயலில்தான் எனக்கு படங்கள் வந்தன. அதனால்தான் வித்தியாசமான கதை தேடி வந்தேன். அப்போது கிடைத்த படம்தான் இந்த யாகவராயினும் நாகாக்க. இனி இதே மாதிரி மாறுபட்ட கதைகளாக தேடிப்பிடித்து நடிப்பேன். நல்ல கதைக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும காததிருக்க நான் தயார்.
* ஹீரோ பத்து பேரை பந்தாடும் கதைகளை இப்போதைய ரசிகர்கள் விரும்பவில்லை என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
இதுதான் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. காரணம். இந்த பார்முலாதான் நம்முடைய ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஹீரோ என்பவன் பத்து பேரை அடிக்க வேண்டும் என்பதைத்தான அவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக, சமூக விரோதிகளை தாங்கள் அழிக்க வேண்டும் என்று மனதுக்கள் நினைப்பார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாது. அப்படி அவர்கள் மனதுக்குள் நினைக்கிற விசயத்தை சினிமாவில் ஒரு ஹீரோ செய்கிறபோது அதை தானே செய்தது போன்று ரசிகர்கள் திருப்தி கொள்கிறார்கள். அதனால் ஹீரோ வில்லனை அடித்தால் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
அதனால், இதை ரசிகர்கள் விரும்பவில்லை, ரசனை மாறி விட்டது என்று சொல்வதையெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த காலத்திலும் இதுதான் சினிமா பார்க்க வரும் ரசிகர்களின் மென்டாலிட்டியாக இருக்கும். ராஜமவுலி இயக்கிய மகதீராவில் ராம்சரண் 100 பேரை அடிப்பார். அதை ரசிகர்கள் ஏற்றார்கள். காரணம், அதில் ரியாலிட்டி இருந்தது. அதனால் சொல்லப்படும் விசயம் யதார்த்தமாக இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள், ரசிப்பார்கள் என்பதே எனது கருத்து.
* சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டுகளில் மட்டும்தான் நடிப்பீர்களா?
அப்படியெல்லாம் எந்த கண்டிசனும் இல்லை. எனக்கு பிடித்தமான கதைகள் கிடைத்தால் மல்டி ஹீரோவாகவும் நடிப்பேன். மல்டி ஹீரோ கதைகளில் பல ரகம் உள்ளது. முக்கியமாக தமிழில் ஆர்யா-நவ்தீப் நடித்த அறிந்தும் அறியாமலும், ஆர்யா-பரத் நடித்த பட்டியல் போன்ற படங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அதேபோல் வித்தியாசமான மல்ட்டி ஹீரோ கதைகளில் வந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன். ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் என்னை ஒவ்வொரு மாதிரியாக வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறேன். ஆதி இப்படித்தான் நடித்திருப்பார் என்று எந்த ரசிகர்களும் படம் பார்க்க வரும் முன்பே எனது வேடத்தை கணித்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
எந்தமாதிரியான கதைகள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்?
ஆதிக்கு இந்த மாதிரியான கதைகள்தான் பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்து வந்து விடக்கூடாது என்றுதான் முதலில் மிருகம் படத்தில் நடித்த நான் அதன்பிறகு ஈரத்தில் வேறு மாதிரியான கதையில் நடித்தேன். அதையடுத்து அய்யனார், ஆடுபுலி படங்களுக்கு பிறகு அரவானில் இன்னொரு புதுமையான கதைக்களம். அதையடுத்து மறந்தேன் மன்னித்தேன், கோச்சடையானுக்கு பிறகு இப்போது யாகவராயினும் நா காக்க படத்தில் இதுவரை பார்க்காத புதுமையான ஆதியாக நடித்துள்ளேன். ஆக, நான் இதுவரை நடித்த எல்லா வேடங்களுமே எனக்கு பொருந்தியிருக்கும். எனக்கு பொருத்தமாக இருக்கும் என்றால் மட்டுமே அந்த படத்தில் நான் நடிப்பேன்.
* யாகவராயினும் நாகாக்க படம் உங்களை மேல்தட்டு ஹீரோ வரிசையில் சேர்க்குமா?
அப்படியெல்லாம் எந்த கணக்கும் நான் போடவில்லை. கதை எனக்கு பிடித்திருந்தது. ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. முழுசாக இறங்கி நடித்திருக்கிறேன். மற்றபடி இந்த படம் நூறு நாள் ஓடும். நம்மை முன்னணி ஹீரோவாக்கி விடும் என்று நான் எந்த கணக்கும் போடவில்லை. என் வேலையை சரியாக செய்திருக்கிறேன் என்ற மனநிறைவு மட்டும் அடைந்திருக்கிறேன். மற்றதெல்லாம் படம் திரைக்கு வந்தபிறகுதான் தெரியும் என்கிறார் ஆதி.