விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
நடிப்புக்கும் நாடித்துடிப்பிருப்பதை தமிழுக்கு மட்டுமல்ல உலகிற்கே உணர்த்திய நவரசநாயகன், தமிழ் சினிமாவின் ஆலமரமாய் இருந்து விழுதுகளாய் விருதுகளை சுமந்து, புதுவரவுகளின் நினைவிலே விதையாகி, மறைந்தும் விருட்சமாய் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று(ஜூலை 21).
விழுப்புரத்தில் சின்னையா பிள்ளையாக பிறந்து (சிவாஜி) கணேசனாக நடிப்பில் வளர்ந்து, சிவாஜியாக நம் மனதில் நிறைந்து கிடக்கும் அந்த கலைத்தாயின் தலைமகனுக்கு சூட்டியதால் தான் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியே, தாதா சாகிப் பால்கே விருதுகளுக்கு பெருமை. உடல், உயிர், மூச்சு அனைத்தையும் கலைத்துறைக்கு அர்ப்பணித்த அவருக்கே முதல் மரியாதை.
'நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்...' என ஒவ்வொரு ரசிகனும், நடிகனும் மனதிற்குள் கோயில் கட்டி வழிபட்ட நடிப்பு நாயகன் தான் சிவாஜி. கருப்பு, வெள்ளை கலராய் மாறியது, ஈஸ்ட்மென் கலர் சினிமாஸ்கோப்பாக மாறியது சினிமா. சிவாஜி எனும் நடிகனின் திறமை மட்டும் மாறவே இல்லை. அதனால் தான் சினிமாவும் மக்கள் மனதிலிருந்து மாறாமல் வாழ்கிறது. தனக்கென கதைகளை தேர்ந்தெடுக்காமல் கதைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட சிரத்தை தான் சிவாஜியை அடையாளப்படுத்தியது.
சினிமாவிற்குள் வரும் ஒவ்வொரு புதுமுகமும் சிவாஜியின் முகத்தை நினைவில் வைத்து தான் பிள்ளையார் சுழி போடுகின்றனர். இனி வரும் சந்ததிகளுக்கு சிவாஜி ஒரு சகாப்தம். நம் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது தான் நமக்கு கிடைத்த பாக்கியம். 'பூங்காற்று திரும்புமா... என் பாட்டை விரும்புமா...' என இன்றும் சிவாஜியை எதிர்பார்த்து ஏங்கி கிடக்கும் லட்சோப லட்ச ரசிகர்களின் இதய சிம்மாசனத்தை விடுத்து ஆங்காங்கே சிலையாய் நிற்கும் அந்த சிம்மக்குரலோனை திரையிலாவது பார்க்கும் கொடுப்பினை கொடுத்தானே அந்த இறைவன்! குழி விழும் கன்னமும், புருவம் உயர்த்தும் பார்வையும், உதடு உதைக்கும் வார்த்தையும், கைகள் வீசும் நடனமும், வான்நோக்கும் 'கர்லிங்' தலையும், மடங்கி கடிபடும் ஆள்காட்டி விரலும் நீ விட்டுச் சென்ற அடையாளங்கள்.
சின்னத்திரையில் வருகிறாய்... வெள்ளித்திரையில் வருகிறாய்... கனவிலும் வருகிறாய்... நேரில் வருவாயா... என நினைக்கும் போது கண்ணீராய் வருகிறாய் கடவுளிடம் சென்ற கலைஞனே!
மதுரைக்காரனுக்கு தனி மரியாதை!
சிவாஜி கணேசனுடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான மதுரை மார்ஷல் முருகன் கூறியதாவது:
சிவாஜியிடம் எப்போதும் குழந்தைதனம் இருக்கும். மதுரை சோழவந்தானில் 'பட்டிக்காடா பட்டணமா' படபிடிப்பு நடந்த போது அவரை காண சென்றிருந்தோம். தளத்தில் யாருமே இல்லை. சிவாஜி மட்டும் சேரில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் கூட்டம். 'என்னப்பா... இவன் மட்டும் உட்கார்ந்திருக்கானேனு பார்க்குறீங்களா...?' என எங்களை பார்த்து கேட்டவர், 'நான் கிராமத்துக்காரன்... அதான் சீக்கிரம் வந்துட்டேன்... மத்தவங்க டவுன்காரங்க... லேட்டா தானே வருவாங்க...' என, தன் கதாபாத்திரத்தை வைத்தே கலாய்த்தார்.
ஒருமுறை மதுரை ஏர்போர்ட்டில் மனோரமாவை வரவேற்க சிவாஜியுடன் சென்றிருந்தேன். மனோரமா வந்ததும், 'என்னடி ஜில்...ஜில்... ஜிலு...ஜிலு...னு வந்துருக்க...' என, தில்லானா மோகனாம்பாள் பாணியில் கிண்டலடித்தார். பதிலுக்கு மனோராமா அதே பாணியில் பதில் சொல்ல ஏர்போர்ட்டே கலகலத்தது.
சுதந்திர தினத்தன்று மதுரை, கோச்சடையில் உள்ள நண்பர் பாண்டியனுக்கு உடல்நிலை சரியில்லாததை அறிந்து அவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். நானும் உடன் சென்றேன். வழியில் இரு இடங்களில் கொடியேற்றிவிட்டு செல்லலாம் என நிர்வாகிகள் சிலர் கூறினர். 'இங்கே பாருங்கப்பா... நானும் சுதந்திரத்தை மதிக்கிறவன் தான். இப்போ நான் என் நண்பனை பார்க்க வந்துருக்கேன். அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதிலிருந்து மனசு சரியில்ல. அவனை பார்த்துட்டு கொடி ஏத்தலாம்...' என, கிளம்பிச் சென்றார். அந்த அளவிற்கு நட்புக்கு மரியாதை அளிப்பவர்.
அவர் வீட்டுக்கு சென்றாலே உணவு உறுதி. அதிலும் மதுரைக்காரர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். 'வாங்கப்பா... வாங்கப்பா... எங்கே அயிரை மீன் குழம்பு...' என, கேட்டு வாங்கி உண்பார். அவருக்காகவே இங்கிருந்து குழம்பு எடுத்துச் செல்வோம். மதுரை வழியாக சூட்டிங் வந்தாலும் அயிரை மீன், இட்லி உண்ணாமல் செல்லமாட்டார். சாப்பிடும் போது, 'இப்படி சாப்பிடுறதால தான்யா நீங்க இப்படி இருக்கீங்க...' என, எங்களையும் கிண்டல் அடிப்பார். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவா முடிகிறது? எல்லாம் நேற்று நடந்தது போல் உள்ளது, என கண்கலங்கினார்.