ஜிப்ரான் தான் அடுத்த ஏ.ஆர்.ரகுமான்! படவிழாவில் புகழ்ந்த பிரபலங்கள்!!
30 ஜூன், 2014 - 10:59 IST
களவாணி படத்தை இயக்கிய சற்குணத்தின் இரண்டாவது படம் வாகை சூடவா. தேசிய விருது பெற்ற இந்த படத்திற்கு இசையமைத்திருந்தவர் ஜிப்ரான். அந்த படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் அதையடுத்து தான் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படத்திற்கு கமிட் பண்ணினார் கமல். அப்படத்தில் அவரது இசைப்பணி திருப்தியை கொடுக்கவே இப்போது தான் நடித்து வரும் உத்தமவில்லன் படத்திற்கும் ஜிப்ரானையே ஒப்பந்தம் செய்து விட்டார்.
இந்த நிலையில், ஆர்யா தயாரித்துள்ள அமரகாவியம் படத்திற்கும் ஜிப்ரான்தான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது ஜிப்ரானின் இசையை அந்தவிழாவுக்கு வந்திருந்த டைரக்டர்கள் பாலா, லிங்குசாமி, சுசீந்திரன், விஷ்ணுவர்தன், பார்த்திபன், எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, பிரபுசாலமன், ஆர்.கண்ணன் என அனைத்து இயக்குனர்களும் ஜிப்ரானின் இசையை புகழ்ந்து தள்ளி விட்டனர்.
அதிலும் கமல் சார் தனது ஒரு படத்திற்கு இசையமைக்க அழைத்ததே பெரிய விசயம் அப்படியிருக்க இரண்டாவது படத்துக்கும் உடனடியாக கமிட் பண்ணியிருககிறார் என்றால் கோலிவுட்டின் அடுத்த ஏ.ஆர்.ரகுமான் ஜிப்ரான்தான் என்று பேசினார்கள்.
இதனால் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருந்த ஜிப்ரான், அதையடுத்து மேடைக்கு பேச வந்தவர், என்ன பேசுவதென்றே தெரியாமல் திணறியவர், கமல் சார் கொடுத்திருப்பது எனக்கு பெரிய அங்கீகாரம்தான். இதை காப்பாற்றும் வகையில் அடுத்தடுத்து இசையமைப்பேன் என்று தெரிவித்தார்.