ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் | மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா |
ஒரு தெய்வம் தந்த பூவே... என தனது மயக்கும் குரலால் ரசிகர்களை சொக்க வைத்தும், தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகள் பலருக்கு தனது இனிமையான குரலால் பின்னணி பேசியவர் சின்மயி. பின்னணி பாட்டு, டப்பிங் என சென்னைக்கும், ஐதராபாத்திற்கும் பறந்து பறந்து கொண்டிருக்கும் சின்மயிக்கு இன்னும் சில தினங்களில் இல்லற வாழ்வில் இணைய இருக்கிறார். பிரபலங்களின் திருமண வாழ்த்துக்கள், பெரியவர்களின் ஆசிகள், இடையில் தாயோடு சேர்ந்து கல்யாண வேலைகளிலும் பொறுப்போடு செயல்பட்டு வரும் சின்மயி, கிடைத்த சிறு இடைவெளியில் தினமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி...
* சின்மயி பாடகியானது எப்படி...?
தவிர்க்க முடியாதது. எனக்கு அம்மா, அப்பா, குரு என எல்லாமே என் தாய் பத்மா தான். சின்ன வயசில் இருந்து இப்போது வரைக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்தது என் அம்மா தான். அவங்களுக்கு நன்றி என்று மட்டும் வெறும் ஒரு வார்த்தையால் சொல்லிவிட முடியாது. கால காலத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். பாட்டில் சிறந்து விளங்குவேன் என்று என்னை அறிந்தவர் என் அம்மா தான். அதற்காக அவர் கொடுத்த பயிற்சி வீண் போகவில்லை. ரஹ்மானிடம் கிடைத்த அறிமுகம், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது. ரஹ்மான் சார் இல்லையென்றால் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்திருக்க முடியுமா என்று நினைத்து பார்க்கிறேன். தேவா, ஸ்ரீகாந்த் தேவா என அனைத்து இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறேன். கே.எஸ்.ரவிக்குமார் சார் மாதிரி பல பேர் என்னை வழிநடத்தி இவ்வளவு தூரம் நான் கடந்து வர துணை நின்று இருக்கிறார்கள்.
* தமிழில் முதல் டப்பிங் அனுபவம்...?
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில்பூமிகாவுக்கு தான் முதலில் வாய்ஸ் கொடுத்தேன். அது பிரபலமாக தொடர்ந்து த்ரிஷா, சமந்தா, தமன்னா, காஜல், டாப்சி, சமீரா உள்ளிட்ட பலருக்கு குரல் கொடுத்தேன். இப்போது பாட்டு பாடவும், பின்னணி குரல் கொடுப்பதற்கும் வாய்ப்பு வருது. ரொம்ப பிஸியாக இருக்கிறேன்.
* சமந்தாவிற்கு அதிகம் பின்னணி குரல் கொடுப்பது ஏன்...?
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் சமந்தாவுக்கு குரல் கொடுத்தேன். அதற்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது. அதன்பிறகு சமந்தாவின் அநேக படங்களுக்கு நான் தான் குரல் கொடுத்தேன். என்ன தான் நான் நடித்தாலும், என் நடிப்புக்கு உயிர் கொடுப்பது சின்மயி தான் என்று சமந்தாவே பல மேடைகளில் என்னை பாராட்டியுள்ளார். கல்யாணம் ஆனாலும் எனக்கு தொடர்ந்து குரல் கொடுக்கணும் என்று என்னிடமும், ராகுலிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தளவுக்கு எனது குரல் அவருக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது.
* உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்...?
தமிழ், தெலுங்கு, இந்தி, ஜெர்மன், ஆங்கிலம், பிரென்ஞ் உள்ளிட்ட மொழிகள் தெரியும். நிறைய இந்தி படங்களில் பாட வாய்ப்பு வருகிறது. சினிமாவிற்கு மொழி ரொம்ப முக்கியம் என்று புரிகிறது.
* உங்கள் வருங்கால கணவர் ராகுல் பற்றி...?
சென்னை, மந்தைவெளியில் 30 ஆண்டுகாலமாக ராகுல் குடும்பத்தார் வசித்து வருகிறார்கள். எனக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் எந்த உறவும், நட்பும் கிடையாது. அன்த்லா ராட்சசி என்ற தெலுங்கு படத்திற்கு டப்பிங் பேச போனேன். அந்தப்படத்தின் ஹீரோயின் லாவண்யா திரிபாதிக்கு நான் தான் குரல் கொடுத்தேன். அந்தப்படத்தின் ஹீரோ ராகுல். இந்தப்படத்தை ரீ-மேக் செய்யும் எண்ணத்தில் சென்னை பிரசாத் லேப்பில் ஏகப்பட்ட பிரபலங்கள் வந்து படத்தை பார்த்தார்கள். இந்தப்படம் மெளன ராகம் படம் மாதிரியானது. அப்போது ராகுல் குடும்பமும் பிரசாத் லேப்பிற்கு வந்திருந்தார்கள். அங்குதான் நான் முதன்முதலில் ராகுலையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்தேன். பின்னர் ஐதராபாத்திற்கு டப்பிங் பேச சென்றபோது, நான் தங்கியிருந்த ஹோட்டலில் ராகுலை சந்தித்தேன். நண்பராகத்தான் என்னிடம் பேசினார். அப்போது அவர், நான் உங்களை முழுமையாக புரிந்து கொண்டு பழகி, பின்னர் காதலிக்கலாம் என்று எண்ணுகிறேன் என்று சொன்னார். அவரது அணுகுமுறை எனக்கு பிடித்தது. பிறகு நாங்கள் இருவரும் பழகினோம். எனது குடும்பத்திலும், அவரது குடும்பத்திலும் பேசினோம். எங்களது இருவது குடும்பத்திலும் பேசி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள். எனக்கு வயது 29, ராகுலுக்கு வயது 32. இது அவசர திருமணம் கிடையாது. பெரியவர்கள், பார்த்து பேசி முடிவு பண்ணிய திருமணம்.
* ராகுல், உங்களை எப்படி கவர்ந்தார்...?
என்னையும், என் தாயையும் பார்த்துக்கிற மாதிரி, நன்கு புரிந்து கொண்ட ஒருவர் தான் எனக்கு கணவராக வர வேண்டும் என்று எண்ணினேன். அதுமட்டுமின்றி என் தாய் என்னிடம் அடிக்கடி கூறுவது... பொறுமையாக எந்த விஷயத்தையும் கையாள வேண்டும் என்பது தான். இது எல்லாமே ராகுலிடம் இருந்தது. அவர் மிகவும் அமைதியானவர், ரொம்ப பொறுமைசாலியும் கூட... அந்த விஷயம் தான் என்னை கவர்ந்தது.
* திருமணத்திற்கு வருபவர்கள் பரிசு பொருட்கள் கொண்டு வரவேண்டாம் என்று அறிவித்தது ஏன்.?
எனது திருமணத்திற்கு, உதாரணத்திற்கு ரூ.500 முதல் ரூ.50 ஆயிரம் வரை கிப்ட் பொருட்கள் வரலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதுதவிர நிறைய மலர்கொத்துகள் வரலாம். எல்லாம் இரண்டு நாளில் காய்ந்து வீணாக போய்விடும். ஆகையால் அதை பயன் உள்ளதாக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி, லடாக்கில், ஒரு பகுதியில் வாழும் மக்கள் சாப்பாட்டிற்கே வழியின்றி ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் என்று அறிந்தேன். அவர்களுக்கு வருமானமும் மிக குறைவு. குளிர் பாதிப்பு அதிகம். ஆடு, மாடுகளின் தோல்களை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள். குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் இருக்கும், ஆனால் படிக்க நோட்டு புக் எதுவும் கிடையாது. இவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தேன். அப்போது தான் சுஜாதா சாகு என்பவர் ஒரு அமைப்பு நடத்தி அவர்களுக்கு உதவுகிறார் என்பதை அறிந்தேன். எனது திருமணத்திற்கு அவரும் வருகிறார். திருமணத்திற்கு வருபவர்கள் அளிக்கும் நன்கொடையை அவர் பெற்றுக்கொண்டு அந்த மக்களுக்கு உதவ உள்ளார். மேலும் யார் யார் உதவி செய்கிறார்களோ... அவர்களுக்கு வரிவிலக்குக்கான விண்ணப்பத்தையும் அவர் கொடுப்பார். எனது திருமணத்திற்கு வருபவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து லடாக்கில் உள்ள அந்த பகுதி மக்களுக்கு நூலகம் கட்டிக்கொடுக்க எண்ணியுள்ளேன். ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி இது.
* திருமணத்திற்கு பிறகு ராகுலின் கதை விவாதத்தில் பங்கேற்பீர்களா...?
கண்டிப்பாக நான் தலையிட மாட்டேன். அவர் எங்கே போகிறார், எப்போது வருவார் என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்க மாட்டேன். என்னைப்போலத்தான் ராகுலும். நாங்கள் இருவரும் அவரது தொழில் விஷயத்தில் தலையிட மாட்டோம். அதேசமயம் நான் ராகுலையும் நன்கு கவனித்து கொள்வேன். அதேப்போல் எனக்காக என் அம்மா, அவருக்காக நான் என எப்போதும் போல் என் அம்மாவையும் கவனித்து கொள்வேன். மேலும் எனக்கு வழிகாட்டியவர்களை வாழ்வில் மறக்க மாட்டேன். குறிப்பாக எனக்கு வஞ்சகம் செய்தவர்களை எப்போதுமே மறக்க மாட்டேன்.
விரைவில் ரஜினி சாரின் கோச்சடையான் படம் வெளியாக இருக்கிறது. இதில் ரஹ்மான் சாரின் இசையில் நான் பாடிய பாட்டும் உள்ளது. அது ரசிகர்களை கவரும் என நினைக்கிறேன். இதுநாள் வரை எனது குரலை ரசித்து, தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்த ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5ம் தேதி காலையில் கல்யாணமும், 6ம் தேதி வரவேற்பும் நடக்கிறது. மிக எளிமையாக திருமணத்தை முடிக்க இருக்கிறோம். ரசிகர்களாகிய உங்களது ஆசியும் எனக்கு வேண்டும் என ஒவ்வொருவரின் இதயங்களையும் நான் கேட்டு கொள்கிறேன் என்றார்.