பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் (பிலிம் சேம்பர்), தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் (தயாரிப்பாளர் கவுன்சில்) நேரடியாக மோதிக் கொள்கின்றன. இன்று நடக்கும் சேம்பர் தேர்தலை தயாரிப்பாளர் சங்கம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று சேம்பருக்கு தேர்தல் நடந்து வருகிறது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களின் வியாபார விருத்திக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சேலம் மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரமும், ஜெமினி வாசனும் தங்கள் இடத்தை இதற்கு அளித்து தொடங்கி வைத்தனர். அதன் பிறகு தொடங்கப்பட்டதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இரண்டு சங்கமும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த பிரச்சினையும் இல்லாம் சேம்பர் செயல்பட்டு வந்தது. இந்திய சினிமாவுடன் தொடர்பு கொள்ள சேம்பர் பயன்பட்டு வந்தது. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர் சங்கம்தான் அதிகார மையம். அதாவது சேம்பர் கவர்னர் மாளிகை என்றால் தயாரிப்பாளர் சங்கம் சட்டசபை மாதிரி.
சேம்பருக்கென்று பல கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இப்போது இரண்டாவது கட்டிட பணிகள் தொடங்கி உள்ளது. முதல் கட்டிடத்தில் கார்பரேட் கம்பெனிகள் வாடகைக்கு இருக்கிறது, இரண்டாவது கட்டிடத்தில் சினிமா தொடர்புடைய பிரிமியர் தியேட்டர், சங்கத்திற்கான அலுவலகங்கள், டப்பிங் தியேட்டர் வர இருக்கிறது. இரண்டு கட்டிடங்கள் கட்டிய வகையில் சேம்பரில் கோடிக் கணக்கில் பணம் புரளத் தொடங்கியது.
அதோடு சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடிய சேம்பரிடம் தமிழக முதல்வர் 10 கோடியை தூக்கிக் கொடுத்தார். பிரச்சினை அங்குதான் உருவானது. முதல்வர் கொடுத்த 10 கோடி, வசூலான தொகை 12 கோடி மொத்தம் 22 கோடியை வாரி இறைத்தது சேம்பர். சினிமா நூற்றாண்டு விழா முழுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தெலுங்கு நடிகர்களுக்கு சொகுசு விமானம், சொகுசு அறைகள் என பணத்தை தண்ணீராக செலவு செய்தனர். தமிழ் நடிகர்கள், தமிழ் தயாரிப்பாளர்களை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இது தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
அதன்பிறகு தான் சேம்பர் பக்கம் தமிழ் தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். சேம்பரின் விதிமுறைகளில் ப்ராக்சி என்ற ஒரு முறை உள்ளது. அதாவது தேர்லின் போது ஒருவருக்கு வாக்களிக்க இயலாவிட்டால் எனக்கு பதிலாக இவர் வாக்களிப்பார் என்று ஒரு அத்தாட்சி கடிதம் கொடுத்துவிட்டால். கடிதம் கொண்டு வருகிறவர் அவர் சார்பாக வாக்களிக்கலாம். இந்த முறையை பயன்படுத்தி பணம் கொடுத்து உறுப்பினர்களிடம் ப்ராக்சி வாங்கி வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒரு சிலரே சேம்பரில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தயாரிப்பாளர் சங்கம் கருதுகிறது. அதோடு கட்டிடம் கட்டிய வகையில், சினிமா நூற்றாண்டு விழா நடத்திய வகையில் கோடி கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது மாதிரி இந்த முறை ஒன்று நடந்தது. சேம்பரின் தேர்தலின் போது தயாரிப்பாளர் சங்கம் தங்கள் பங்கு பதவிக்காக சிலரை தேர்வு செய்து சேம்பரிடம் கடிதம் கொடுக்கும். அதனை சேம்பர் ஏற்றுக் கொண்டு அவர்களை போட்டியின்றி தேர்ந்தெடுத்து விடும். இந்த முறை அப்படி நடக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த கடிதத்தை கண்டு கொள்ளாமல் பகிரங்க போட்டியை தொடங்கி வைத்தது சேம்பர். இதனால் தயாரிப்பாளர் சங்கம் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தின் எதிர் அணியில் நிற்கும் சிலரை களத்தில் இறக்கியது.
தலைவர் பதவி இந்த முறை மலையாள சினிமாவுக்கு அளிக்கப்பட வேண்டும். அதன்படி மலையாள சினிமா விஜயகுமார் என்பரை தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்தது. அதையும் சேம்பர் நிராகரித்து சசிகுமார் என்பவரை நிற்க வைத்துள்ளது.
இப்படியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பிலிம் சேம்பருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. நடக்கும் தேர்தலில் எப்படியும் சேம்பரின் கைதான் ஓங்கி நிற்கும். அடுத்து தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய அமைப்பு உருவாகலாம். அல்லது சேம்பரில் உள்ள ப்ராக்சி வாக்களிப்பு முறை மாற்றப்படலாம். எப்படி இருந்தாலும் மோதல் தொடரும்...
தலைவர், செயலாளர், 3 துணைத் தலைவர்கள் பதவிக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வரகிறது. இந்த தேர்தலின் ஓட்டுக்கள் இன்று மாலையே எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில் கேயார் உள்ளிட்ட சில அதிருப்தியாளர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டளித்து வருகின்றனர்.