ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் விவகாரம் திரையுலகம் மட்டுமல்லாமல், அரசியல் உலகிலும் சூட்டை கிளப்பியுள்ள நிலையில் அந்த விவகாரம் பற்றி முதல்வர் கருணாநிதி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். தனக்கு திரையுலகினர் இதுவரை எடுத்த விழாக்கள் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, அஜித் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் கருணாநதி எழுதியுள்ள கடிதம் வருமாறு:-
தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்துவரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை - ஏமாற்றம் - அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர் பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என் மீது என் தலைமையில் உள்ள அரசின் மீது நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலேகூட என் கலைவாழ்வுக்கு பொன்விழா - பவளவிழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். கலை உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே சறுக்கல் வராமல் அழுத்தமாக பதியவைத்து, அதே வேளையில் கலையுலகில் நலிந்தோர்க்கு நலநிதி வழங்கியும் - அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில் கலையுலகத்தினரின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் - திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை உருவாக்கியும் - படப்பிடிப்பு கட்டண சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும், திரைப்படத்துறையினர் நல வாரியம் அமைத்தும், அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக்கொண்டிருப்பதால், தான் பெற்ற குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும், தன்னை காத்திடும் கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும், நான் எங்கிருந்தாலும் அதாவது அரசுப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில் இரண்டையும் ஒன்றாகக்கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை எடுத்துள்ளனர்.
கடற்கரையில் 14 - 4 - 1996 அன்று எனக்கு கலையுலகப்பொன் விழாவினை கோலாகலமாக தம்பி விஜயகாந்த் மற்றும் கலையுலகச்செல்வர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து நடத்திய விழாவும் அளித்த பரிசும் அதன் பின்னர் நினைத்தாலே இன்னமும் என் நெஞ்சை நெகிழ வைக்கும் இனிய நண்பர் சிவாஜி தலைமையில் எனது ஐம்பதாண்டு கால கலையுலக பணியை முன்னிட்டும் 75வது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே பொன்விழாவும், பவளவிழாவும் 27- 9 - 1998 அன்று சென்னை நேரு அரங்கத்தில் நடந்ததும், வழங்கிய பரிசுகளும், கண்ணீரோடு கலந்த வாழ்த்துக்களும் மறக்கக் கூடியதா?
எல்லா முதலமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள் என்று வக்கணையோடு சொல்லி எரிச்சலை தணித்துக்கொள்வோர் சிலர் உண்டு. அந்த வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதலமைச்சர்களுக்கும் எடுக்கின்ற விழா வரிசையிலே ஒன்றல்ல, அதாவது பத்தோடு பதினொன்று அல்ல! திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும் நண்பர்களுக்கு, தோழர்களுக்கு அவர்தம் குடும்பங்கள் குறைவின்றி வாழ்வதற்கு, அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் காட்டிய நன்றிப்பெருக்கு அந்த விழா!
சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை உணர்ந்து, மகிழ்ந்து, உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக்காட்டி கொள்ள எடுத்த விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.
அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கருப்புப்பொட்டு வைத்து அனுப்புவதை பார்க்கிறோமே, அதைப்போன்றதொரு பொட்டு அந்த விழாவில் வைக்கப்பட்டதை பெரிதுபடுத்தி அந்தப்பொட்டின் வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.
அகில இந்தியப்புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதாப்பச்சன், கலைஞானி கமலஹாசன் இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து அள்ளித்தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி, அதைத்தொடர்ந்து எழுந்த கையொலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் இதுதான் சமயம் என்று சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று, இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள். அவை அதனைப் பூதாகரமாக உருவாக்கிட முனைந்தபோது, அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைத்திடும் முயற்சியாக, அஜித் என்னை சந்தித்து விளக்கமளித்தார். நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல, இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றிதான் குறிப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்ததும், திரையுலக தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும் பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம் புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று! கலகம் விளையும் கலையுலகத்தில் அதற்கு இந்த விழாவை ஒரு காரணம் ஆக்கலாம் என்று கருதியோர் தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து நிற்கின்றனர்.
இந்த கடிதத்தின் நோக்கத்தையும், இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் விழாவிலே கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன்நின்று நடத்தியவர்களும், அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்!
இவ்வா முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.