ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமா காலம் காலமாக காதலை கொண்டாடிக் கொண்டு வருகிறது. கண்டதும் காதல், காணாமலே காதல், வெளிநாட்டு காதல், உள்நாட்டு காதல், கேன்சர் காதல், முரட்டு காதல், சைக்கோ காதல் என விதவிதமான காதல்களை காட்டியது சினிமா. ஜாதிகள் நிறைந்த தமிழ்நாட்டில் இப்போது ஜாதிகளை கடந்த காதல் திருமணங்கள் அதிகரித்திருப்பதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சினிமா எந்த அளவுக்கு காதலை மேன்மைப்படுத்தியதோ அந்த அளவிற்கு திரைப்பட கலைஞர்கள், சொந்த வாழ்க்கையில் காதலை கேலிக்கூத்தாக்கினார்கள். காதலை உருகி உருகி படம் எடுத்த இயக்குனர்கள், நடிகர்களுக்கு பலருக்கு பல மனைவிகள்.
நவீன காதலை சொன்ன இயக்குனர்கள், காதலித்து மணந்த மனைவியை விவாகரத்து செய்து விட்டு புதிய திருமணங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். காதலுக்காக உருகிய நடிகைகள் ஒருவரை காதலித்து விட்டு கடைசி நேரத்தில் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகியிருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு கணவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி நிறைய கதைகள் இருக்கிறது.
சினிமா காட்டும் தூய்மையான காதல் என்பது கேமராவுக்கு முன்னால்தானே தவிர கேமராவுக்கு பின்னால் இல்லை. அதே நேரத்தில் ஒருவரையே காதலித்து அவரையே மணந்து அவருடனேயே கடைசி காலம் வரை வாழ்ந்த காதல்களும், சினிமாவில் இல்லாமல் இல்லை. ஆனால் அவை ஒரு சிலதான்.
காதலை வைத்துக் கொண்டு சிலர் ஆடுகிற ஆட்டம்தான் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். ஒரு நடிகையை காதலிக்க வேண்டியது. பிறகு அவரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடிமை போல நடத்த முயற்சிப்பது. எதையும் அவரைக் கேட்டுதான் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துவது. நடிகரின் டார்ச்சர் தாங்காமல் அந்த நடிகை பிரிந்து விட்டால் அந்த நடிகை தன்னுடன் அந்தரங்கமாக பேசியதை, பழகியதை ஆடியோ, வீடியோவாக வெளியிட்டு அசிங்கப்படுத்துவது. அடுத்த சிலை மாதங்களிலேயே இன்னொரு நடிகையுடன் காதலை தொடங்க வேண்டியது. அவரை அடிமையாக்க முயற்சிக்க வேண்டியது. அது நடக்காவிட்டால் பழைய காதல் நடிகையுடன் நெருக்கம் காட்டி புதிய காதலியை வெறுப்பேற்றுவது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அந்த நடிகர் ஒரு "காதல் சைக்கோ" என்பதுதான்.
அடுத்த வகை இன்னும் கொடூரமானது. திடீர் புகழால் அமைகிறது ஒரு உயர்ந்த வாழ்க்கை. ஒரு நடிகரின் மகளே மனைவியாக கிடைத்தாலும் காதல் தாகம் அடங்காது. உடன் நடிக்கும் நடிகைகளுக்கெல்லாம் சொகுசு வீடுகளை வாடகைக்கு பிடித்துக்கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது. இன்னொரு உயர்ந்த நடிகரின் மகளும் எனக்கு நெருக்கம்தான் என்று காட்டிக் கொள்வது. நான் அழகாக இல்லாதவன்தான் ஆனால் பாருங்கள் அழகான நடிகையெல்லாம் என்னை தேடிவந்து விழுகிறார்கள் என்று காட்டிக் கொள்கிற சுப்பீரியாட்டி காம்ப்ளெக்ஸ்.
ஒரு பெண்ணை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டியது. அந்த பெண்ணை கடைசி வரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டியது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு விட்டு சில ஆண்டுகள் கழித்து கழற்றி விட வேண்டியது. பிறகு குடும்பத்துக்கு அடக்கமாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஒரு சுத்தமான குடும்பஸ்தனாக காட்டிக் கொள்வது.
இப்போது புதிதாக வந்திருக்கிற ஒரு காதல் மன்னன் பிக்அப், டிராப்பில் மன்னன். எந்த நடிகையுடனும் அதிக நாள் உறவாடுவதில்லை. நடிகைக்கு முதலில் குடும்ப செண்டிமெண்டை கொடுத்து ஈர்க்க வேண்டியது. பிறகு ஓட்டல் ஓட்டலாக கூட்டிக் கொண்டு திரிய வேண்டியது. அடுத்த நடிகை கிடைத்ததும் கழற்றி விடவேண்டியது. இதில் வேடிக்கை என்னவென்றால். நடிகரின் இந்த காதல் விளையாட்டுகளை அவரது குடும்பமே ரசித்துக் கொண்டிருப்பதுதான்.
இவர்களாவது பரவாயில்லை இளைஞர்கள், ஆனால் தாத்தா வயதுள்ள இயக்குனர்களும், அப்பா வயதுள்ள இயக்குனர்களும்கூட காதல் வலைவீசுவதான் ரொம்ப கொடுமை. கிராமத்தில் கட்டிய மனைவி குழந்தைகளோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை வாழ்க்கை துணைவியாக்கி பங்களாவில் குடித்தனம் நடத்தும் இயக்குனரும் இருக்கிறார். மகன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் பேத்தி வயதுள்ள ஒரு நடிகையை தன் படத்தில் அறிமுகப்படுத்தினோம் என்ற ஒரே காரணத்துக்காக கிட்டத்தட்ட மனைவி மாதிரி வைத்துக் கொண்ட தாத்தா இயக்குனர்களும் உண்டு.
தமிழ் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் பேசும் இயக்குனர்கள் இந்த காதல் விஷயத்தில் மட்டும் ஆங்கில கலாச்சாரத்தை அச்சரம் பிசகாமல் கடைபிடிப்பார்கள். தன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஒரு சிறிய நடிகையை இன்னும் காதல் தாகத்தோடு துரத்திக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர்.
இன்னொரு புதுவகையான காதலும் உண்டு. வாரிசு நடிகைகளை காதலிப்பதில் அந்த நடிகருக்கு அப்படி ஒரு சுகம். தற்போதும் மூன்று வாரிசு நடிகைகள் அவரது காதலுக்காக காத்துக்கிடக்கிறார்கள். அப்படி இருந்தும் நடிகர் தன்னுடன் நடிக்கும் திடீர் புகழ் நடிகையோடு காதலில் இருக்கிறார். "நான் அவரை காதலிக்கிறேன். ஆனால் அவர் என்னை காதலிக்கிறாரான்னு தெரியாது" என்று இருக்கு ஆனா இல்லைங்ற டைப்பில் பேட்டியெல்லாம் கொடுப்பார்.
இரண்டு நடிகர்களை காதலித்து முன்றாவதாக ஒரு இயக்குனரை மணந்த நடிகை உண்டு. அதன் பிறகாவது சும்மா இருந்தாரா. பழைய காதலர்களுடன் இப்போதும் நட்புடன் இருக்கிறார். பழைய காதலன் போட்டோவை வீட்டில் பெரிய சைசில் மாட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். அடக்கமான இயக்குனரை மணந்த ஒரு நடிகை இப்போதும் தன்னுடன் ஹீரோவாக நடித்தவர்களை தேடித் தேடிப்போய் காதலித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு இயக்குனர் கம் கேமரா மேன் தான் அறிமுகப்படுத்தும் அத்தனை நடிகையுடனும் உரிமை எடுத்து பழகுவார். அன்பான மனைவி அழகான குடும்பம் இருந்தும் இன்னொரு நடிகையுடன் தனிக்குடித்தனம் நடத்தினார். புகழினின் உச்சியில் இருக்கு நடிகையின் தற்கொலைக்கு காரணமா இருந்தார். ஒரு நடிகை கடைசி வரை கல்யாணமே வேண்டாம் என்கிற அளவுக்கு வாழ்க்கையை வெறுக்க வைத்தார்.
இங்கு சொல்லப்பட்டிருப்பவை ஒருசில உதாரணங்கள்தான் சொல்லப்படாதவை நிறைய இருக்கிறது. சினிமா உலகமே இப்படித்தான் காதலை வைத்து கபடி விளையாடுகிறதா? என்றால் இல்லை இங்கு அத்திபூத்தமாதிரி சில நல்ல காதல்களும் உண்டு.
நல்ல காதலும் உண்டு
அந்த நடிகர் தன்னுடன் நடித்த அந்த நடிகையை எட்டு ஆண்டுகள் காதலித்தார். அந்த 8 ஆண்டுகளும் நடிகையை பற்றிய ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தது. ஆனால் அந்த நடிகரை பற்றி வந்த ஒரே கிசுகிசு அந்த நடிகையை காதலிக்கிறார் என்பதுதான். காதலுக்கும், கல்யாணத்துக்கும் நடிகரின் வீட்டில் பலத்த எதிர்ப்பு. தற்கொலை செய்வேன் என்று அப்பா மிரட்டுகிறார். அவளை மணக்காவிட்டால் நான் தற்கொலை செய்வேன் என்று மகன் திருப்பிச் சொல்கிறார். காதலின் சக்தியை புரிந்து கொண்ட குடும்பம் திருமணத்துக்கு சம்மதிக்கிறது. திருமணம் நடக்கிறது. புகழின் உச்சியில் இருந்த நடிகை சினிமாவை தூக்கி எறிந்து விட்டு நடிகருக்கு நல்ல மனைவியானார். இரு குழந்தைகளுக்கு தாயானார். திருமணத்துக்கு பிறகு அந்த நடிகர் இந்த நடிகையுடன் நெருக்கமா இருக்கிறார். ஊர் சுற்றுகிறார் என்ற ஒரு கிசுகிசுகூட கிடையாது. முன்மாதிரி நட்சத்திர தம்பதிகளாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன் காதல் மனைவிக்கு மைசூர் மகராஜா அரண்மணைபோல பிரமாண்ட வீட்டையும் கட்டி வருகிறார்.
திரையில் காட்டும் காதலை கொஞ்சம் தரையிலும் கடைபிடித்து காதலை காப்பாற்றுங்க ப்ளீஸ...