ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து இன்று விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும் கமல்ஹாசனுக்கு, மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி இதோ...
* பத்மஸ்ரீ கமல், இனி பத்மபூஷன் ... எப்படி உணர்கிறீர்கள்?
திறமைசாலிகள் நிறைந்த நாடு இது.; எனக்கு கிடைத்த விருது, பிறருக்கு கிடைக்கவில்லை. பல திறமையாளர்கள் விருது பெறாமலேயே மறைந்துவிட்டனர். நான் தெரியாமல் போய்விடுவேனோ, என்ற பயம் இருந்தது. இதுவரை செய்த விஷயங்களுக்காக இல்லாமல், இனி செய்பவைகளுக்கு ஊக்கியாகவே இந்த விருது இருக்கும்.
* 25 ஆண்டுகள் மகிழ்வித்த சச்சினுக்கு, பாரத ரத்னா விருது; நீங்களோ 50 ஆண்டு...
மக்கள் எனக்கு அளித்தது தான், பெரிய விருது. நீங்கள் சொல்லும் விருது, அடுத்த கட்டம் என்றால், அதுவும் சாத்தியம். நான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை; அங்கீகாரம் வேண்டும் என கேட்பதற்கு. தமிழ் சினிமா சரித்திரம், பின் இந்திய சினிமா சரித்திரத்தில், என் பெயர் இருந்தால், அதுவே மகிழ்ச்சி.
* விருதுக்கு காரணமான வித்தையை தந்தவர்கள் பற்றி...
எனக்கு ஆசான்கள் சிலர் கற்றுக்கொடுத்தனர்; சிலவற்றை பணம் கொடுத்து, நானே கற்றுக்கொண்டேன். இயக்குனர் பாலசந்தர், டி.கே.எஸ்., சகோதரர்களில் ஒருவரான சண்முகம் அண்ணாச்சி போன்றோர், எனக்கு ஊதியம் கொடுத்து, நிறைய கற்றுக்கொடுத்தனர். எனது இகழ், என் தனிச்சொத்து; எனது புகழுக்கு பின், பலர் இருக்கின்றனர்.
* பத்மபூஷன், உங்கள் வாழ்க்கையில் மாற்றம் தருமா?
இதே ஆழ்வார்பேட்டையில், பல ஆண்டுகளுக்கு முன் அடையாளம் இன்றி அலைந்தேன். எதிர்காலத்தை எண்ணி, ஏங்கினேன். படிப்பை நிறுத்திவிட்டாய்; மாடு வாங்கித் தருகிறோம், நீ மேய்க்கத் தான் லாயக்கு... என, பெற்றோரே கூறினர். மாற்றம் தான் வாழ்க்கை.
* ஆனாலும், அந்த ஆஸ்கார்...?
இந்திய சினிமாவுக்கு ஐ.எஸ்.ஐ., போதும்; அமெரிக்க சினிமாவுக்கு தான் யு.எஸ்.ஐ., வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப்படும் போது, எனக்கு அவர்கள் தேவைப்படும் போது, அது நடக்கும். பாலிவுட் படம் செய்வது, உடனே நடக்காது; இன்று கதை சொல்லி, நாளை பூஜை போட முடியாது.
* ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்... எதில் நிறைவடைவீர்கள்?
என் தேடல், பசி மாதிரி; உண்டால், நிறைவானது போல் இருக்கும், ஆனால் மறுவேளை பசி எடுக்கும். தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய சினிமாவில், இது போதும் என, நினைக்கத் தோன்றாது. போதும் என்ற மனம் பொன் செய்யாது.
* விஸ்வரூபம் 2 எந்த நிலையில் உள்ளது?
படப்பிடிப்பு முடிந்துவிட்டது; இசைப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில், எதிர்பார்க்கலாம்.
* சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா?
நான் அதற்கு எதிரானவன். சுயசரிதைகளில் பொய்கள் தான் இருக்கின்றன. நான் உண்மையை எழுதினால், நிறைய பிரச்னை வரும். என்னைப்பற்றிய விஷயத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. என்னைப்பற்றிய சந்தேகங்கள், ரகசியங்கள், அப்படியே தொடர விரும்புகிறேன்.